இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (SBI) பண பரிமாற்றத்தில் புதிய வழிமுறைகளை அறிவித்துள்ளது. எஸ்பிஐ-யின் இந்த நடைமுறைகள் ஜூலை 1 முதல் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதெல்லாம் சரி என்னென்ன பரிவர்த்தனைகளுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது வாடிக்கையாளர்களுக்கு சாதகமா? பாதகமா? வாருங்கள் பார்க்கலாம்.
என்னென்ன மாற்றம்
இந்தியாவின் முன்னணி வங்கிகளில் ஒன்றான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI) அதன் பேசிக் சேவிங்ஸ் பேங்க் டெபாசிட் அக்கவுண்டில் (BSBD) தான் பல புதிய மாற்றங்களை அறிவித்துள்ளது. அதன் படி ஜூலை 1ஆம் தேதி முதல் ஏடிஎம்மில் பணம் எடுப்பது, செக் புக் சேவைகள், பணம் அனுப்புவது போன்றவைகளுக்கு புதிய கட்டண விதிமுறைகள் அமல்படுத்தப்படவுள்ளன.
முன்னதாக டெபாசிட் வரம்பு இல்லை
முன்னதாக இவ்வங்கியில் அடிப்படை சேமிப்புக் கணக்கு தொடங்குவதற்கு வாடிக்கையாளர்கள், தங்களது KYC ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். இந்த சேமிப்பு கணக்குக்கு குறைந்தபட்ச இருப்புத்தொகை பூஜ்ஜியமாக கணக்கில் கொள்ளப்படும். இந்த சேமிப்பு கணக்குகளுக்கு ரூபே கார்டுகள் இலவசமாக கொடுக்கப்படும். வருடாந்திர பராமரிப்பு கட்டணமும் இல்லை. அதேபோல் இந்த கணக்குகள் செயல்பாட்டில் இல்லை என்றாலும் எந்த கட்டணமும் வசூலிக்கப்படுவதில்லை என பல சலுகைகள் வழங்கப்பட்டு வந்தது.
Array
தற்போது எஸ்பிஐ-யின் BSBD வாடிக்கையாளர்கள் ஒரு மாதத்தில் தனது அடிப்படை சேமிப்பு கணக்கில் 4 முறை இலவசமாக பணம் எடுத்துக்கொள்ளும் சலுகையை இவ்வங்கி வழங்குகிறது. 4 முறைக்கு மேல் ATM அல்லது வங்கி கிளை மூலமாகவோ பண பரிவர்த்தனை செய்தால், ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் 15 ரூபாய் கட்டணம் மற்றும் ஜிஎஸ்டியும் கட்டணமாக வசூலிக்கப்படும் என அறிவித்துள்ளது.
செக் புக் கட்டணம்
மேலும் எஸ்பிஐ-யின் BSBD வாடிக்கையாளர், ஒரு ஆண்டில் 10 காசோலை தாள்களை இலவசமாக பரிவர்த்தனை செய்து கொள்ளலாம். அதற்கு மேற்பட்ட காசோலைகளை பரிவர்த்தனை செய்தால் அதற்கும் கட்டணம் உண்டு. இது 10 காசோலைகள் புத்தகத்திற்கு 40 ரூபாய் கட்டணம் + GST வசூலிக்கப்படும். இது தவிர 25 காசோலைகள் அடங்கிய புத்தகத்தின் பரிவர்த்தனைக்கு 75 ரூபாய் + ஜிஎஸ்டி வசூலிக்கப்படும்.
இதே அவசர காசோலை தேவைப்படும் பட்சத்தில் 10 காசோலை புத்தகத்திற்கு 50 ரூபாய் + ஜிஎஸ்டி கட்டணமாக வசூலிக்கப்படும்.
இதற்கு கட்டணம் கிடையாது?
எஸ்பிஐ வங்கி மற்றும் எஸ்பிஐ வங்கி அல்லாத வங்கி கிளைகளில், இந்த அடிப்படை சேமிப்பு கணக்கினை வைத்திருப்பவர்கள், நிதி அல்லாத பரிவர்த்தனைகளை மேற்கொண்டால் எந்த கட்டணமும் இருக்காது என்றும் அறிவித்துள்ளது.
எஸ்பிஐயின் இந்த BSBD சேமிப்பு கணக்கு ஏழை எளிய மக்களுக்காக கொண்டு வரப்பட்ட ஒரு திட்டமாகும். இதனால் இனி BSBD வாடிக்கையாளார்கள் குறிப்பிட்ட பரிவர்த்தனைகளுக்கு மேல் செய்யும்போது கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்.