ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா டிசம்பர் 31, 2022 உடன் முடிவடைந்த காலாண்டில் வரலாறு காணாத லாபத்தைப் பதிவு செய்துள்ளது மட்டும் அல்லாமல், வங்கி துறை முதலீட்டாளர்களுக்குப் புதிய நம்பிக்கையை அளித்துள்ளது.
சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால் கடந்த வருடம் எப்படி ஐடி நிறுவனப் பங்குகள் லாபத்தை அள்ளிக்கொடுத்ததோ, அதேபோல் இந்த வருடம் வங்கி துறை பங்குகள் அதிகப்படியான லாபத்தைப் பெற உள்ளது எனச் சந்தை வல்லுனர்கள் கூறிவருகின்றனர்.
வாராக் கடன் அளவு குறைந்து வரும் வேளையில் வங்கிகளின் நிதி நிலைமை மிகவும் சிறப்பாக உள்ளது, இதனால் முதலீட்டு வாய்ப்பும் சிறப்பாக உள்ளது. இதை உறுதி செய்யும் வகையில் இன்று ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா காலாண்டு முடிவுகள் மிகவும் வெளியாகியுள்ளது.
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா டிசம்பர் 31, 2022 உடன் முடிவடைந்த காலாண்டில் வரலாறு காணாத லாபத்தைப் பெற்றுள்ளது. இக்காலாண்டில் நிகர லாபம் அளவு, கடந்த ஆண்டை காட்டிலும் 68.5% அதிகரித்து 14,205.34 கோடி ரூபாயாக உள்ளது. இதுவே எஸ்பிஐ வெளியிட அதிகப்படியான காலாண்டு லாபமாகும்.
நிகர வட்டி வருமானம்
இதேபோல் எஸ்பிஐ வங்கியின் நிகர வட்டி வருமானம் (NII) இக்காலாண்டில் 38,068.62 கோடி ரூபாயாக உள்ளது. கடந்த ஆண்டின் டிசம்பர் காலாண்டை ஒப்பிடுகையில் 24 சதவீதம் அதிகமாகும்.
செயல்படாத சொத்துகளுக்கான ஒதுக்கீடு
எஸ்பிஐ வங்கி டிசம்பர் காலாண்டில் செயல்படாத சொத்துகளுக்கான ஒதுக்கீடு ரூ.1,586.5 கோடியாக இருந்தது. இது ஒரு வருடத்திற்கு முன்பு ரூ.3,096 கோடியாக இருந்தது. இதே காலக்கட்டத்தில் எஸ்பிஐ வங்கியின் செயல்பாட்டு லாபம் கடந்த வருடத்தைக் காட்டிலும் 36 சதவீதம் அதிகரித்து ரூ.25,219 கோடியாக உள்ளது.
உள்நாட்டு நிகர வட்டி வரம்பு
டிசம்பர் காலாண்டிற்கான உள்நாட்டு நிகர வட்டி வரம்பு (NIM) 29 அடிப்படை புள்ளிகள் உயர்ந்து 3.69 சதவீதமாக அதிகரித்துள்ளது.
மொத்தச் செயல்படாத சொத்து விகிதம் (NPA) ஒரு வருடத்திற்கு முன்பு 4.50% ஆகவும், ஒரு காலாண்டிற்கு முன்பு 3.52% ஆகவும் இருந்த நிலையில் டிசம்பர் 2022 காலாண்டில் 3.14% ஆகக் குறைந்துள்ளது.
நிகரச் செயல்படாத சொத்து விகிதம் (NPA)
மேலும் நிகரச் செயல்படாத சொத்து விகிதம் (NPA) 0.77% ஆக உள்ளது. கடந்த வருட டிசம்பர் காலாண்டில் 1.34% ஆகவும், ஒரு காலாண்டிற்கு முன்பு அதாவது செப்டம்பர் காலாண்டில் 0.80% ஆகவும் இருந்தது.
கடன் வளர்ச்சி
எஸ்பிஐ வங்கியின் கடன் வளர்ச்சி கடந்த ஆண்டை காட்டிலும் 17.60 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. இதில் உள்நாட்டுக் கடன் வளர்ச்சி 17 சதவீதமாக உயர்ந்துள்ளது, இதில் பர்சனல் மற்றும் கார்பரேட் கடன் வளர்ச்சி 18 சதவீதமாக உள்ளது. மேலும் SME பிரிவு கடன் 14.2 சதவீதம், விவசாயத் துறைக்கான கடன் 11.5 சதவீதம் வரையில் வளர்ச்சி அடைந்துள்ளது.
அதானி குழுமம்
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா பிப்ரவரி 3 ஆம் தேதி அதானி குழுமத்திற்கு சுமார் 27000 கோடி ரூபாய் அளவிலான கடனை கொடுத்துள்ளதாக தெரிவித்துள்ளது. இதேபோல் அதானி குழுமத்தின் பங்குகளுக்கு எதிராக எவ்விதமான கடனையும் அளிக்கவில்லை என தெரிவித்துள்ளது எஸ்பிஐ.ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா பிப்ரவரி 3 ஆம் தேதி அதானி குழுமத்திற்கு சுமார் 27000 கோடி ரூபாய் அளவிலான கடனை கொடுத்துள்ளதாக தெரிவித்துள்ளது. இதேபோல் அதானி குழுமத்தின் பங்குகளுக்கு எதிராக எவ்விதமான கடனையும் அளிக்கவில்லை என தெரிவித்துள்ளது எஸ்பிஐ.