இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா செப்டம்பர் காலாண்டில் சுமார் 7,450 கோடி ரூபாய் அளவிலான லாபத்தை அடையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கணிப்புகளை உடைத்து 7,626.6 கோடி ரூபாய் அளவீட்டை தொட்டுள்ளது.
இதன் மூலம் எஸ்பிஐ வங்கியின் மொத்த லாப அளவீடுகள் இக்காலாண்டில் 66.7 சதவீதம் வரையிலான உயர்வை பதிவு செய்துள்ளது.
கொரோனா தொற்று
கொரோனா தொற்றில் இருந்து மக்களும், வர்த்தக சந்தையும் மீண்டு வரும் நிலையில் எஸ்பிஐ வங்கியின் கடன் வர்த்தகம் மிகப்பெரிய அளவிலான வளர்ச்சி அடைந்துள்ளது. இதனால் எஸ்பிஐ வங்கியின் வட்டி வருமானம் அதிகரித்து லாப அளவீடுகள் புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா செப்டம்பர் காலாண்டில் மொத்த வருமானத்தின் அளவு 3 சதவீதம் அதிகரித்து 77,689 கோடி ரூபாய் அளவிலான வருமானத்தை பெற்றுள்ளது, இது கடந்த வருடம் 75,342 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
மொத்த வட்டி வருமானம்
செப்டம்பர் உடன் முடிந்த காலாண்டில் எஸ்பிஐ வங்கியின் மொத்த வட்டி வருமானத்தின் அளவு கடந்த வருடத்தை ஒப்பிடுகையில் 29 சதவீதம் அதிகரித்துள்ள நிலையில், தற்போது 3 மாதத்திற்கு 31,182.9 கோடி ரூபாய் அளவிலான வட்டி வருமானத்தை பெற்றுள்ளது.
மொத்த வாராக் கடன்
மேலும் இக்காலாண்டில் எஸ்பிஐ வங்கியின் மொத்த வாராக் கடன் அளவு 5.32 சதவீதத்தில் இருந்து 4.90 சதவீதமாக குறைந்துள்ளது. இது எஸ்பிஐ முதலீட்டாளர்களின் நீண்ட கால முதலீட்டுக்கு அதிகப்படியான நம்பிக்கையை அளித்துள்ளது.
டெபாசிட் அளவு
இதற்கிடையில் மொத்த டெபாசிட் அளவு 9.77 சதவீதமும், ஹோம் லோன் வர்த்தகம் 10.74 சதவீதமும் அதிகரித்துள்ளது. எஸ்பிஐ வங்கியின் மொத்த அட்வான்ஸ் பிரிவில் ஹோம் லோன் மட்டும் 24 சதவீதம் அளவீட்டை அடைந்துள்ளது.
எஸ்பிஐ பங்கு விலை
இன்றைய வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையில் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா-வின் பங்கு மதிப்பு 1.76 சதவீதம் உயர்ந்து 530.90 ரூபாய் அளவீட்டை தொட்டு உள்ளது. 2021ல் மட்டும் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா பங்குகள் 90.01 சதவீதம் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதில் கடந்த ஒரு மாதத்தில் 14.63 சதவீதம் வரையில் உயர்ந்துள்ளது.


Click it and Unblock the Notifications