இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியாக விளங்கும் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா மார்ச் 31 உடன் முடிந்த காலாண்டில், கடந்த வருடத்தை விடவும் சுமார் 81 சதவீத லாபத்தைப் பெற்ற முதலீட்டாளர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இக்காலாண்டு முடிவுகள் மிகவும் சிறப்பாக இருக்கும் என அனைவரும் நினைத்தது போலவே லாப அளவீடுகள் மிகப்பெரிய அளவில் வளர்ச்சி அடைந்துள்ளது.
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் லாபம்
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 3551 கோடி ரூபாய் மட்டுமே லாபமாகப் பெற்ற நிலையில், மார்ச் 31, 2021 உடன் முடிந்த காலாண்டில் சுமார் 6,451 கோடி ரூபாயை லாபமாகப் பெற்றுள்ளது. இதன் மூலம் லாபத்தில் சுமார் 81 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
மொத்த வருமானத்தின் அளவு
இக்காலகட்டத்தில் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் மொத்த வருமானத்தின் அளவு 18.9 சதவீதம் வரையில் உயர்ந்து 27,067 வரையில் உயர்ந்துள்ளது. இதேபோல் எஸ்பிஐ வங்கியின் கடன் வர்த்தகத்தின் அளவு 5 சதவீதம் அதிகரித்துள்ளது. கொரோனா காலத்திலும் சிறப்பான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
எஸ்பிஐ வங்கியின்
இதேபோல் எஸ்பிஐ வங்கியின் வாராக் கடன் அளவு 46 அடிப்படை புள்ளிகள் குறைந்து 4.98 சதவீதம் வரையில் குறைந்துள்ளது. இதைத் தொடர்ந்து எஸ்பிஐ வங்கியில் வைப்பு நிதியின் அளவு 13.56 சதவீதம் அதிகரித்துள்ளது. இதில் கரன்ட் கணக்கு வைப்பு நிதியின் அளவு 27.36 சதவீதம் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பங்கு முதலீட்டாளர்களுக்கு ஈவுத்தொகை
மேலும் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா தனது பங்கு முதலீட்டாளர்களுக்கு ஈவுத்தொகையாக ஒரு பங்கிற்கு 4 ரூபாய் வீதமாக அளிக்க உள்ளது. இந்தத் தொகையை வருகிற ஜூன் 18ஆம் தேதி அளிக்க முடிவு செய்துள்ளது.