இந்தியாவில் அதிகளவிலான வாடிக்கையாளர்களைக் கொண்டு இருக்கும் நாட்டின் முன்னணி பொதுத்துறை வங்கியாகத் திகழும் எஸ்பிஐ வங்கியில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக இன்று ஆன்லைன் பணப் பரிமாற்றங்கள் செய்ய முடியாமல் மக்கள் தவித்தனர்.
எஸ்பிஐ சமீப காலமாகத் தனியார் வங்கிகளுக்குப் போட்டியாகத் தனது டிஜிட்டல் சேவையை அதிகளவில் விளம்பரப்படுத்தி மக்கள் மத்தியில் கொண்டு சேர்த்து வருகிறது. தற்போது இந்த டிஜிட்டல் சேவையில் தான் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு உள்ளது.
எஸ்பிஐ வங்கியின் மிக முக்கியச் செயலியாக விளங்கும் யூனோ செயலி வாயிலான பரிமாற்றங்களும், யூபிஐ வாயிலாகப் பணப் பரிமாற்றங்களும் முடங்கியுள்ளது.
பணப் பரிமாற்றம் தோல்வி
இன்று காலை 10.00 முதல் நாடு முழுவதும் இருக்கும் எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்கள் பணப் பரிமாற்றம் செய்ய முடியாமல் தவித்து வந்த நிலையில் 11 மணியளவில் அதிகளவிலானோர் சேவைகளைப் பெற முடியாமல் தவித்தனர்.
சமூக வலைதளம்
இதன் வாயிலாக எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்கள் சேவை முடங்கியது குறித்தும் சமூக வலைத்தளத்தில் அதிகளவிலான கருத்து தெரிவித்த நிலையில், எஸ்பிஐ வங்கியின் டெக் குழு பிரச்சனையை உணர்ந்து டிவிட்டரில் பதில் அளித்துள்ளது.
முக்கியச் செயலிகள் முடக்கம்
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வெளியிட்டுள்ள இந்த டிவீட்டில் 2.10 முதல் 5.40 வரையில் பழுது நீக்கும் பணி செய்ய உள்ளதால் INB, யூனோ, யூனோ லைட், யூபிஐ செயலிகள் இயங்காது எனவும், சேவை முடங்கியதற்கும் வாடிக்கையாளர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளது.
மேம்பட்ட சேவை
மேலும் குறித்த நேரத்தில் எஸ்பிஐ வங்கி தனது ஆன்லைன் வங்கி சேவையை மேம்படுத்த உள்ளதாகவும், இதனால் வாடிக்கையாளர்கள் சிறப்பான ஆன்லைன் வங்கி சேவை இனி வரும் காலத்தில் பெற முடியும் எனத் தெரிவித்துள்ளனர்.
சர்வர்கள் ஆப்
பொதுவாக எஸ்பிஐ உட்பட அனைத்து வங்கிகளும் maintenance பணிகளைச் செய்யச் சர்வர் ஆப் செய்யும் முன் அறிவிப்பு வெளியிடும், ஆனால் இந்த முறை எவ்விதமான முன்னறிவிப்புமின்றி, சேவை முடங்கிய காரணத்தால் சர்வர்களை முடக்கியுள்ளது.
2021-22ஆம் நிதியாண்டின் முதல் நாளான இன்று வங்கிகள் மூடப்பட்டு இருக்கும் வேளையில் இந்தப் பிரச்சனை நிகழ்ந்துள்ளது.