இன்றைய காலகட்டத்தில் பிக்ஸட் டெபாசிட்களுக்கு வட்டி விகிதம் குறைவாக இருந்தாலும், நிலவி வரும் நெருக்கடியான நிலைக்கு மத்தியில், இது ஒரு கணிசமான வருவாயினைக் கொடுக்கும், பாதுகாப்பான முதலீடாக, சந்தை அபாயம் இல்லாத முதலீடாக பிக்ஸட் டெபாசிட்டுகள் பார்க்கப்படுகிறது.
ஏனெனில் முதலீட்டிற்கே பங்கம் விளைவிக்கும் முதலீட்டிற்கு மத்தியில், குறைவான வட்டியானலும், பாதுகாப்பான முதலீடாக பார்க்கப்படுகிறது. அதிலும் மூத்த குடிமக்களுக்கு இது பெஸ்ட் ஆப்சனாகவும் பார்க்கப்படுகிறது.
மற்ற முதலீடுகளைப் போல் சந்தை ஏற்ற இறக்கங்களால் இது பாதிக்கப்படாது. மேலும் இந்த டெபாசிட் திட்டங்களில் மூத்த குடி மக்களுக்கு கூடுதலாக வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. இதனால் இது மூத்த குடிமக்களுக்கு ஏற்ற பாதுகாப்பான முதலீடாகவும் பார்க்கப்படுகிறது.
எஸ்பிஐ-யின் வீகேர் திட்டம்
சேமிப்பு என்பது நம் வாழ்வில் செய்ய வேண்டிய முக்கியமான செயலாக இருந்தாலும், மூத்த குடி மக்களை பொறுத்தவரையில் அவர்களின் அடிப்படை வாழ்வாதாரமாக பார்க்கப்படுகிறது. இதனாலேயே மூத்த குடி மக்களுக்கான மிக பாதுகாப்பான முதலீட்டு திட்டங்களை வங்கிகளும், அரசும் ஏற்படுத்தி வருகின்றன. அந்த வகையில் எஸ்பிஐ மூத்த குடி மக்களுக்காக அறிமுகப்படுத்திய சிறப்பான ஒரு சிறப்பு பிக்ஸட் டெபாசிட் திட்டம் தான் வீகேர்.
மூத்த குடிமக்களுக்கான வீகேர்
கொரோனா காரணமாக கடந்த ஆண்டில் மக்கள் கடுமையான நிதி நெருக்கடிக்கு தள்ளப்பட்டனர். குறிப்பாக வயதானவர்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டனர். ஆக மூத்த குடிமக்களின் தேவைகளை கருத்தில் கொண்டு, எஸ்பிஐ வீகேர் என்ற மூத்த குடிமக்களுக்கான, சிறப்பு நிலையான வைப்பு நிதித் திட்டத்தை அறிமுகப்படுத்தியது.
வீகேரில் யாரெல்லாம் இணையலாம்?
எஸ்பிஐ-யின் வீகேர் திட்டத்தில் 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் இணைந்து பயன்பெறலாம். இத்திட்டத்தில் அதிகபட்சம் ரூ.2 கோடி வரையில் டெபாசிட் செய்யலாம். இத்திட்டத்துக்கான முதிர்வு காலம் குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகள் மற்றும் அதிகபட்சம் 10 ஆண்டுகள் ஆகும்.
கூடுதல் வட்டி விகிதம்
மற்ற டெபாசிட் திட்டங்களை விட இத்திட்டத்தின் கீழ் 0.8% அதிகமான வட்டி விகிதம் கிடைக்கும். அதாவது சாதாரண பிக்ஸ்ட் டெபாசிட் திட்டங்களில் கிடைக்கும் வட்டி விகிதத்தினை விட, மூத்த குடிமக்களுக்கு 50 அடிப்படை புள்ளிகள் அதிகம். இதே வீகேர் சிறப்பு திட்டத்தின் மூலம் இணையும் மூத்த குடிமக்களுக்கு, கூடுதலாக 30 அடிப்படை புள்ளிகள் கிடைக்கும். ஆக மொத்தத்தில் இந்த திட்டத்தில், மூத்த குடிமக்களுக்கு மற்ற திட்டங்களுடன் ஒப்பிடும்போது 80 அடிப்படை புள்ளிகள் அதிகம்.
வட்டி விகிதம் எவ்வளவு?
எஸ்பிஐ தற்போது பொதுமக்களுக்கு 2 கோடி ரூபாய்க்குள்ளான முதலீடுகளுக்கு, 2.9% முதல் 5.4% வரை வட்டியினை வழங்கி வருகின்றது. ஆனால் இந்த சிறப்பு வீகேர் எஃப்டி திட்டம் மூலம் 6.20% வரையில் வட்டியினை வழங்கி வருகின்றது. இந்த திட்டம் மார்ச் 31, 2022 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
பண்டிகை கால சலுகைகள்
முன்னதாக வரவிருக்கும் பண்டிகை காலத்தினையொட்டி, பல்வேறு கடன்களுக்கான வட்டி விகிதங்கள் குறைக்கப்பட்டுள்ளன. இதுமட்டுமல்லாமல், செயல்பாட்டுக் கட்டணம் உள்ளிட்ட கூடுதல் கட்டணங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக தனது வாடிக்கையாளர்களுக்கு வீட்டுக் கடனுக்கான சிறப்புத் திட்டத்தை அறிவித்துள்ளது. அதாவது தற்போது வீட்டுக் கடன்களுக்கான வட்டி விகிதம் 6.70% குறைக்கப்பட்டுள்ளது.
வீட்டுக் கடன் சலுகை
மற்ற வங்கிகளுடன் ஒப்பிடும்போது இது மிகக் குறைந்த வட்டி விகிதம் ஆகும். அதுமட்டுமில்லை சம்பளம் பெறும் ஊழியர்கள், சுயதொழில் செய்பவர்களுக்கு என வீட்டுக்கடனில் பல சலுகைகளை வழங்குகிறது.
இதற்கு முன்பு 75 லட்சத்துக்கு மேல் வீட்டுக் கடன் வாங்கினால் 7.15% வட்டி செலுத்த வேண்டும். ஆனால் தற்போது 75 லட்சம் ரூபாய்க்கு மேல் கடன் வாங்கினாலும் நீங்கள் 6.70% வட்டி செலுத்தினால் போதும்.