கண்ணுக்கே தெரியாத கொரோனா வைரஸ், பல வியாபார சாம்ராஜ்யங்களின் வியாபாரத்தையே பதம் பார்த்துக் கொண்டு இருக்கிறது.
இந்த பொருளாதார சூழலில் சிறு குறு தொழில்முனைவோர்களின் கதி என்ன ஆகும்..? எனவே எஸ்பிஐ ஒரு சிறப்புக் கடன் திட்டத்தை வியாபாரிகளுக்கு அறிவித்து இருக்கிறார்கள்.
இந்த வங்கிக் கடன் திட்டத்தைப் பற்றிய முழு விவரங்களைத் தான் இந்த கட்டுரையில் காண இருக்கிறோம்.
கடன் திட்டம்
இந்த சிறப்புக் கடன் திட்டத்தின் பெயர் கொவிட்-19 அவசர கடன் திட்டம் (COVID-19 Emergency Credit Line). உலகம் முழுக்க பரவி இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பால், தங்கள் வியாபாரத்தில் ஏற்படும் நிதி நெருக்கடிகள் மற்றும் எதிர் வினைகளைச் சமாளிக்கத் தான் வியாபாரிகளுக்கு இந்த கடனை எஸ்பிஐ வழங்குகிறார்களாம்.
எவ்வளவு கடன்
வரும் ஜூன் 30, 2020 வரை எஸ்பிஐ வங்கியின் கொவிட்-19 அவசர கடன் திட்டம் (COVID-19 Emergency Credit Line) கடனுக்கு விண்ணப்பிக்கலாமாம். அதிகபட்சமாக 200 கோடி ரூபாய் வரை கடன் கொடுக்க இருக்கிறார்களாம். கடனுக்கான வட்டி விகிதம் 7.25 சதவிகிதம். இந்த கடனை வாங்கி அடுத்த 12 மாதங்களுக்குள் திருப்பிச் செலுத்த வேண்டுமாம்.
யார் வாங்க முடியாது
எஸ்பிஐ வங்கியின் இந்த கொவிட்-19 அவசர கடன் (COVID-19 Emergency Credit Line) திட்டத்தின் வழியாக Special Mention Accounts (SMA) என்று சொல்லப்படும், எளிதில் வாரா கடன் ஆகக் கூடிய கணக்குகளை வைத்திருப்பவர்கள் கடன் வாங்க முடியாதாம். இந்த எஸ் எம் ஏ கணக்குகளில் இரண்டு வகைகள் இருக்கிறதாம். எஸ் எம் ஏ 1 & எஸ் எம் ஏ 2.
எஸ் எம் ஏ கணக்கு சுருக்கம்
சுருக்கமாக இதற்கு முன் வாங்கிய கடனை, 30 நாட்களுக்கு மேல் 90 நாட்கள் வரை ஒழுங்காக திருப்பிச் செலுத்தவில்லை என்றால் அவர்கள் எல்லாம் கடன் வாங்க முடியாது. 90 நாட்களுக்கு மேல் வாங்கிய கடனை திருப்பிச் செலுத்தாத கடன்களை வாரா கடனாக அறிவித்து விடுவார்கள்.
ஃபிக்கி கணக்கு
இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை கூட்டமைப்பு (Ficci) கணக்குப் படி, இந்தியாவில் இருக்கும் 50 % கம்பெனிகள், இந்த கொடூரமான கொரோனா வைரஸால் பாதிக்கப்படுவார்கள் எனச் சொல்லி இருக்கிறார்கள். இந்த சிக்கலில் இருந்து தற்காலிகமாவது மீள எஸ்பிஐ வங்கியின் இந்த COVID-19 Emergency Credit Line உதவியாக இருக்கும் என்று சொல்லலாம்.


Click it and Unblock the Notifications