எல்ஐசி நிறுவனம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை மிகப் பெரிய லாபம் தரும் நிறுவனமாக இருந்த நிலையில் ஐபிஓ பட்டியலிடப்பட்ட பின்னர் அதன் இறங்குமுகம் ஆரம்பமாகியுள்ளதாக கூறப்படுகிறது.
அதேபோல் பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான எஸ்பிஐ மிகச் சிறந்த அளவில் செயல்பட்டு தற்போது எல்ஐசியை பின்னுக்கு தள்ளியுள்ளது.
பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ, பொதுத்துறை இன்சூரன்ஸ் நிறுவனமான எல்ஐசியை பின்னுக்கு தள்ளியுள்ளது பங்குச்சந்தை வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
எல்.ஐ.சி - எஸ்பிஐ
இந்தியாவின் மிகப் பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (எஸ்பிஐ) இன்சூரன்ஸ் நிறுவனமான எல்ஐசியை விஞ்சி, மிகவும் மதிப்புமிக்க பட்டியலிடப்பட்ட பொதுத்துறை நிறுவனமாக மாறியுள்ளது. இந்திய ஆயுள் காப்பீட்டு கழகத்தின் சந்தை மூலதனம் ரூ.4,36,519.72 கோடியாக உள்ள நிலையில், எஸ்பிஐயின் சந்தை மூலதனம் ரூ.4,56,984.74 கோடியாக உயர்ந்துள்ளது.
எல்.ஐ.சியின் பின்னடைவு
பிஎஸ்இயில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் ஒட்டுமொத்த மார்க்கெட் கேப் தரவரிசையில் எஸ்பிஐ ஏழாவது பெரிய நிறுவனமாக உள்ளது. ஆனால் இன்சூரன்ஸ் நிறுவனமான எல்ஐசி ரூ.4.38 டிரில்லியன் சந்தை மூலதனத்துடன் பட்டியலில் எட்டாவது இடத்திற்கு தற்போது பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளது.
பங்குகளின் மதிப்பு
கடந்த மாதத்தில், பிஎஸ்இயின் தரவுகளின்படி, எல்ஐசியின் பங்குகள் சுமார் 3% ஆதாயத்துடன் ஒப்பிடும்போது எஸ்பிஐ பங்கு சுமார் 13% உயர்ந்துள்ளது. மே 17, 2022 அன்று ஐபிஓ பட்டியலிடப்பட்டதில் இருந்து, எல்ஐசியின் சந்தை மதிப்பு ரூ.1.15 டிரில்லியன் குறைந்துள்ளது, அதே நேரத்தில் எஸ்பிஐயின் மார்க்கெட் கேப் ரூ.36,367 கோடி அதிகரித்துள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த நான்கு ஆண்டுகளில் பொதுத்துறை வங்கிகள், மொத்தமாக, 1,130 பிபிஎஸ் சந்தைப் பங்கைக் கடன்களில் இழந்தாலும், எஸ்பிஐ மட்டும் 90 பிபிஎஸ் லாபத்துடன் 23% ஆக உள்ளது.
எல்ஐசியின் மோசமான செயல்திறன்
எல்.ஐ.சியை பொறுத்தவரையில், அதன் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மெகா ஐபிஓ பட்டியலிட்ட பின்னர், பட்டியலிடப்பட்ட முதல் நாளில் ஏமாற்றம் அடைந்தது மட்டுமின்றி, பட்டியலிடப்பட்ட இரண்டு மாதங்களுக்குள்ளாகவே, அதன் அனைத்து நேர குறைந்த அளவையும் தொட்டுவிட்டது. ஒட்டுமொத்தமாக, எல்.ஐ.சி தற்போது அதன் ஐபிஓ பட்டியல் விலையில் இருந்து கிட்டத்தட்ட 20% குறைந்துள்ளது. மே 17, 2022 அன்று பட்டியலிடப்பட்ட ஒரு மாதத்திற்குப் பிறகு, ஜூன் 6, 2022 அன்று, எல்.ஐ.சி முதல் முறையாக அதன் அனைத்து நேரக் குறைந்த அளவை எட்டியது.
எஸ்பிஐ வளர்ச்சி
ஆனால் அதே நேரத்தில் என்.எஸ்.ஈ தரவுகளின்படி, எஸ்பிஐ பங்கு விலை இந்த ஆண்டு சுமார் 8% உயர்ந்தது மட்டுமின்றி கடந்த ஐந்து ஆண்டுகளில் 75% க்கும் அதிகமாக உயர்ந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.