இந்தியாவில் கல்விக் கட்டணங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில் உள்ளூர் மற்றும் வெளியூரில் படிக்கும் மாணவர்களுக்கு எஜுகேஷன் லோன் உண்மையிலேயே கை கொடுக்கத் தான் செய்கிறது. போதிய நிதி வசதி இல்லாமல் தவிக்கும் குடும்பங்கள், தாங்கள் விரும்பும் கோர்ஸை படித்துவிட்டு வாழ்க்கையில் சாதிக்க துடிக்கும் மாணவர்கள் ஆகியோருக்கு இத்தகைய கடன்கள் தான் இன்று வரை பெரும் பக்கபலமாக இருந்து வருகிறது. உறவினர்களே 1 ரூபாய் தர யோசிக்கும் காலக்கட்டத்தில் மாணவர்களின் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக, நாட்டின் பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகளில் சிறந்த வட்டி விகிதங்களில் கல்வி கடன் வழங்கப்படுகிறது.
விண்ணப்பிப்பவரின் சுயவிவரம், அவர்களுடைய திருப்பிச் செலுத்தும் திறன், கிரெடிட் ஸ்கோர் போன்றவற்றின் அடிப்படையில் குறைந்த வட்டி விகிதங்களில் எஜுகேஷன் லோன் பெறலாம். ஆனால் சில வங்கிகள் நீங்கள் கல்வியை முடிக்கும் வரையில் அவகாசம் வழங்குகின்றன. அதன் பிறகு பணியில் சேர்ந்தவுடன் கடனை ஒரு தவணை கூட தவறவிடாமல் திருப்பிச் செலுத்த வேண்டும். இந்தப் பதிவில் பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகள் வழங்கும் வட்டி விகிதங்களைப் பார்ப்போம்.
பொதுத்துறை வங்கிகளின் வட்டி விகிதங்கள்:
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா - 8.90%
பஞ்சாப் நேஷனல் பேங்க் - 8.10%
கனரா பேங்க் - 9.25%
யூனியன் பேங்க் - 9.25%
பேங்க் ஆஃப் பரோடா -10.25%

தனியார் துறை வங்கிகளின் வட்டி விகிதங்கள்:
ஐசிஐசிஐ பேங்க் - 9.00%
ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் பேங்க் - 9.50%
ஐடிபிஐ பேங்க் - 9.90%
ஆக்சிஸ் பேங்க் - 10.81%
HDFC பேங்க் - 12.50%
மேலே கூறப்பட்டுள்ள வட்டி விகிதங்கள் வெளிநாட்டு படிப்புகளில் சேர்வதற்காக ரூ.7.5 லட்சத்திற்கும் அதிகமாக கடன் பெறும் மாணவர்களுக்கு பொருந்தும். எஜுகேஷன் லோன் பெற விண்ணப்பிக்கும் போது மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் ஒரு சில விஷயங்களை மனதில் வைத்திருக்க வேண்டும்.
வட்டி விகிதங்களை ஒப்பிட்டு பாருங்கள்: வட்டியில் இருக்கும் சிறு வித்தியாசம் கூட நாளை உங்களுக்கு பெரிய சேமிப்பாக இருக்கும். எனவே நீண்ட காலத்திற்கு திருப்பி செலுத்தும் போது உங்கள் பணம் கரையாமல் இருக்க வட்டி விகிதங்களை ஒப்பிட்டு பாருங்கள்.
திருப்பி செலுத்தும் விதிமுறைகளை கவனியுங்கள்: எஜுகேஷன் லோன் பெறும்போது அதற்கான விதிமுறைகள் என்ன?, நிபந்தனைகள் என்ன?, படிப்பு முடிந்த உடனே வங்கிகள் எவ்வளவு கால அவகாசம் வழங்குகிறது? என்பதையெல்லாம் உன்னிப்பாக கவனித்துக் கொள்ளுங்கள். வேலை வாய்ப்பின்மை தொடர்கதை ஆகி வருவதால் படித்து முடித்தவுடன் வேலையை கண்டுபிடிப்பது சிரமமாக இருக்கலாம். எனவே அதற்கு வங்கிகள் போதிய அவகாசம் தருகிறதா? என்பதை தெரிந்து கொண்டு லோன் பெறுங்கள்.
செயலாக்கக் கட்டணங்கள்: லோன் பெறுவது என்பது சாதாரண விஷயம் அல்ல. எந்த லோன் பெற்றாலும் அதற்கு பிராசசிங் கட்டணங்கள் விதிக்கப்படும். இதில் மறைமுக கட்டணங்கள், முன்கூட்டியே லோனை செலுத்தி விட்டால் அதற்கான கட்டணங்கள் என பல செலவுகள் இருக்கும். இது போன்ற காரணங்களையும் கவனித்துக் கொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications