மும்பை: நாட்டில் நிலவி வரும் மந்தநிலை காரணமாக பல லட்சம் பேர், பல துறைகளில் தங்களது வேலையினை இழந்து வருகின்றனர். இதுவே ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.
இதுவே இப்படி எனில், வரவிருக்கும் காலங்களில் புதிய வேலைகள் உருவாக்கம் குறையும் என்றும் எஸ்பிஐ மதிப்பிட்டுள்ளது.
ஏற்கனவே நாட்டில் தேவை குறைந்து விட்டது. இதனால் பொருளாதார மந்தம் இன்னும் அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது. இத்தகைய நிலையில் வேலைவாய்ப்புகளும் குறையும் பட்சத்தில் இன்னும் நுகர்வானது குறையும். இது பிரச்சனையில் உள்ள இந்தியாவினை மேலும் பிரச்சனைக்கு தள்ளும் என்றும் கூறப்படுகிறது.
எஸ்பிஐ எச்சரிக்கை
இது குறித்து எஸ்பிஐ வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசு வேலைகள் மற்றும் குறைந்த ஊதியம் பெறும் துறைகளில் இந்தியாவில் 16 லட்சம் வேலைகள் குறைவாக உருவாக்கப்படலாம் என்றும் எஸ்பிஐ மதிப்பிட்டுள்ளது. ஆண்டுக்கு நாட்டில் மில்லியன்கணக்கான வேலைகள் உருவாக்கப்படும் ஒரு நாட்டில், பல லட்சம் வேலை வாய்ப்புகள் குறையும் என்பதை எஸ்பிஐ எச்சரித்துள்ளது, அரசினை சற்று கவலையில் ஆழ்த்தியுள்ளது என்றே கூறலாம்.
வரி வசூல் பலவீனம்
வேலைவாய்ப்புக்களுக்காக நாட்டிற்குள் குடியேறும் மக்கள் ஏழ்மையான சில மாநிலங்களுக்கு குறைந்த பணத்தையே வீட்டிற்கு அனுப்புகிறார்கள். இதற்காக ஆதாரங்களும் உண்டு. நாட்டின் மிகப்பெரிய வங்கியில் தலைமை பொருளாதார நிபுணர் செளமியா காந்தி கோஷ் திங்களன்று வெளியிட்டுள்ள ஒர் அறிக்கையில், இந்தியாவின் நுகர்வு மற்றும் வரிவசூல் நீண்ட காலத்திற்கு பலவீனமாக இருக்கக்கூடும் என்றும் சுட்டிக் காட்டியுள்ளார்.
மோசமான வேலைவாய்ப்பு உருவாக்கம்
நாட்டில் மிக மோசமான வேலைவாய்ப்பு உருவாக்கம் நிலவி வருகிறது என்றும் அறிக்கைகள் கூறுகின்றன. அதிலும் இது இன்று நேற்றல்ல 45 வருடங்களில் இல்லாத அளவுக்கு மிக உயர்ந்த வேலையின்மை விகிதத்தை குறிக்கிறது. இந்த மோசமான அழுத்தமானது, பிரதமர் மோடியின் அரசின் மீது அழுத்தத்தை உருவாக்குகிறது என்றும் அந்த அறிக்கைகள் கூறுகின்றன.
பொருளாதார வளர்ச்சி கணிப்பு
இது ஏற்கனவே ஒரு தசாப்தத்திற்கும் மேலாக பலவீனமான பொருளாதார வளர்ச்சியையும், மாணவர் தலைமையிலான ஆர்பாட்டங்களையும் கண்டு வருகிறது. அதிலும் ஆசியாவிலேயே மூன்றாவது பெரிய பொருளாதார நாடான இந்தியாவின் பொருளாதாரம் 5% மட்டுமே வளர்ச்சி காணும் என்றும் அதிகாரப்பூர்வமாக அரசு கணித்துள்ளது.
எஸ்பிஐ கணிப்பு
எனினும் இதில் கொஞ்சம் சந்தோஷப்படக்கூடிய விஷயம் என்னவெனில், அரசின் கணிப்பு பரவாயில்லை என்றே கூறலாம். ஏனெனில் அரசாவது வளர்ச்சி 5% ஆக இருக்கும் என்று கணித்த நிலையில், எஸ்பிஐ கணிப்பானது அரசின் கணிப்பை விட குறைத்து 4.6% தான் என்றும் கணித்துள்ளது.
பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பின்பு இழப்பு
இந்தியாவின் முன்னாள் தலைமை புள்ளிவிவர நிபுணர் புரோனாப் சென் கடந்த வாரம் தி வயருக்கு அளித்த அறிக்கையில், முறைசாரா வேலைகளில் இந்தியாவும் சரிவைக் காண்கிறது என்று கூறினார். பிரதமர் மோடியின் நவம்பர் 2016ல் பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பின்பு இந்த வீழ்ச்சியானது தொடங்கியது என்றும் கூறியுள்ளார்.
திறமையற்றவர்களுக்கு வேலை கிடைப்பது கஷ்டம்
மேலும் பணமதிப்பிழப்பு நடவடிக்கையானது நாட்டின் பரந்து விரிந்த பொருளாதாரத்தின் முதுகெலும்பை இது உடைத்தது என்றும் கூறியிருந்தார். மேலும் இளைஞர்கள் மற்றும் பயிற்சியற்றவர்கள், திறமையற்றவர்கள், முறைசாரா துறையில் ஒரு இடைவெளியை பெறுவார்கள் என்றும் சென் கூறியுள்ளார்.
ஊழியர் திறமையை வளர்த்து கொள்ளுங்கள்
ஊழியர்கள் அவர்களது திறன்களை நன்கு வளர்த்துக் கொள்ள வேண்டும். இதன் மூலம் இவர்கள் மீண்டும் அழைத்து செல்லப்படலாம் என்றும் தெரிவித்துள்ளார். ஆக மக்கள் இன்று நாடு இருக்கும் நிலையில் தங்களது திறமையை வளர்த்துக் கொள்வதன் மூலம் மட்டுமே தங்களது வேலைகளை பாதுகொள்ள முடியும்.