இன்றைய காலக்கட்டத்தில் பெண்கள் அரசியல், சுகாதாரம், கல்வி, வேலை என பல அம்சங்களில் முக்கிய பங்கு வகித்து வருகின்றனர். அதிலும் இந்தியாவினை பொறுத்தவரையில் பெண்களுக்கு என்றுமே எல்லா இடங்களிலும் தனி இடம் உண்டு.
இப்படி ஒரு நிலையில் தான் ஒரு பெண்ணின் கர்ப்ப காலம் 3 மாதங்களை கடந்திருந்தால் அவர்கள் பணியமர்த்தப்படமாட்டார்கள்.
அதேபோல 3 மாதத்துக்கும் அதிகமான கர்ப்ப காலத்தில் இருந்தால், பதவி உயர்விலும் பரிசீலிக்கப்படமாட்டார் என்ற சர்ச்சைக்குரிய அறிவிப்பினை எஸ்பிஐ அறிவித்து இருந்தது.
பணியில் சேர முடியாது
மேலும் ஒரு பெண் பணியில் சேர அனைத்து தகுதிகளையும் பெற்றிருந்தாலும் கூட, பேறுகாலம் முடிந்த 4 மாதங்களுக்கு பின்னரே மருத்துவ ரீதியாக பணியில் சேர தகுதியானவர் எனவும் தெரிவித்திருந்தது. ஆக ஒரு தகுதியான பெண் பணியில் சேர தகுதியானவராக இருந்தாலும், எஸ்பிஐ அறிவிப்பால் உடனடியாக பணியில் சேர முடியாது.
சுற்றறிக்கை வாபஸ்
நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியாக இருக்கும் எஸ்பிஐ-யின் இந்த சுற்றறிக்கை, பல்வேறு தரப்பிலும் பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது. இந்த நிலையில் தான் எஸ்பிஐ தற்போது வாபஸ் பெற்றுள்ளது. இதற்கிடையில் எஸ்பிஐ-யின் இந்த நடவடிக்கை பாலின சமத்துவதற்கு கிடைத்த வெற்றி என நாடாளுமன்ற உறுப்பினர் சு வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.
மிகப்பெரிய பணி
நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ அதிக பணியாளர்களை கொண்ட ஒரு வங்கியாக உள்ளது. மொத்தம் சுமார் 2.50 லட்சம் பணியாளர்களுகளைக் கொண்டுள்ளது. இதில் மொத்தம் 62 ஆயிரம் பெண் ஊழியர்களை கொண்டுள்ளது. இந்த நிலையில் எஸ்பிஐயே இது போன்ற ஒரு அறிவிப்பினை கொடுத்துள்ளது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
எஸ்பிஐ நடவடிக்கை
முன்னதாக 6 மாத கர்ப்பத்தில் இருக்கும் பெண்களை கூட எஸ்பிஐ பணியமர்த்தியது. ஆனால் மருத்துவர்களின் தகுதிச் சான்றிதழ் அவசியமாக வைத்திருந்தது. ஆனால் புதிய திருத்ததில் இந்த காலகட்டத்தை 3 மாதமாகக் குறைத்துள்ளது.