இந்திய ரீடைல் சந்தையில் மிகப்பெரிய வர்த்தக ஒப்பந்தமாகப் பார்க்கப்படும் ரிலையன்ஸ் ரீடைல் - பியூச்சர் குரூப் மத்தியிலான வர்த்தகம் விற்பனை ஒப்பந்தம் அடுத்தடுத்து பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகிறது.
கடந்த வாரம் இந்த ஒப்பந்தத்திற்குத் தேவையான ஒப்புதல்களைக் கட்டுப்பாட்டு அமைப்புகள் கொடுக்கலாம் என டெல்லி உயர் நீதிமன்றம் அறிவித்து இருந்த நிலையில் தற்போது சுப்ரீம் கோர்ட் ரிலையன்ஸ் - பியூச்சர் குரூப் ஒப்பந்தத்திற்கு, கட்டுப்பாட்டு அமைப்புகள் ஒப்புதல் அளிக்கத் தற்காலிக தடை விதித்துள்ளது.
இந்த உத்தரவின் மூலம் 3.4 பில்லியன் டாலர் மதிப்பிலான ரிலையன்ஸ் - பியூச்சர் குரூப் ஒப்பந்தம் மீண்டும் தடைபெற்று நிற்கிறது. இது அமேசான் நிறுவனத்திற்கு மிகப்பெரிய வெற்றியாகப் பார்க்கப்படுகிறது.
தற்காலிக தடை விதிப்பு
டெல்லி உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு கடந்த வாரம் ரிலையன்ஸ் - பியூச்சர் குரூப்-க்குச் சாதகமாக அமைந்த நிலையில், அமெரிக்க ஈகாமர்ஸ் நிறுவனமான அமேசான் உச்ச நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தது. இந்த மனுவை ஏற்ற உச்ச நீதிமன்றம் அமேசானுக்குச் சாதகமான தீர்ப்பை இன்று வழங்கியுள்ளது.
தற்காலிக தடை விதிப்பு
இன்று வழங்கிய தீர்ப்பில், டெல்லி உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை ரத்து செய்துவிட்டுச் செபி, CCI, பங்குச்சந்தை போன்ற கட்டுப்பாட்டு ஆணையங்கள் இந்த ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளிக்கத் தற்காலிக தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. இதுமட்டும் அல்லாமல் அமேசான் நிறுவனத்தின் மனுவிற்குப் பதில் அளிக்கும் வகையில் பியூச்சர் ரீடைல் நிறுவனத்திடம் இருந்து எழுத்துப் பூர்வமான பதிலைக் கோரி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அமேசான் மனு
மேலும் அமேசான் சமர்ப்பித்துள்ள மனு மற்றும் அதன் மீதான பியூச்சர் ரீடைல் நிறுவனத்தின் பதில் ஆகியவற்றை ஆய்வு செய்யும் அடுத்த விசாரணை 5 வாரங்களுக்குப் பின் நடத்தப்படும் என நீதிபதி ரோஹின்டன் எப்.நரிமன் தலைமையிலான இருவர் அடங்கிய நீதிபதி குழு விசாரிக்க உள்ளது.
சிங்கப்பூர் நடுவர் அமைப்பு
கடந்த வருடம் நடைபெற்ற ரிலையன்ஸ் - பியூச்சர் குரூப் ஒப்பந்தத்திற்கு எதிராக அமேசான் சிங்கப்பூர் நடுவர் அமைப்பில் தொடுத்த வழக்கிலும் அமேசானுக்குச் சாதகமாகத் தீர்ப்பு வந்த நிலையில் தற்போது உச்ச நீதிமன்றத்தில் முதல் முறையாக இவ்வழக்கு சென்றுள்ள நிலையிலும் அமேசானுக்குச் சாதகமாகத் தீர்ப்பு வந்துள்ளது.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்
இதன் எதிரொலியாக இன்று பங்குச்சந்தை வர்த்தகத்தில் இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரர் ஆன முகேஷ் அம்பானி தலைமை வகிக்கும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகளின் மதிப்பு 3.2 சதவீதம் சரிந்து ஒரு பங்கு விலை 2007 ரூபாய் விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இதுமட்டும் அல்லாமல் இன்றைய வர்த்தகத்தில் தனது ஆஸ்தான அளவீடான 2000 ரூபாயில் இருந்து 1995 ரூபாய் வரையில் சரிந்துள்ளது.