முதல்வர் விஜய் புதிய தலைமைச் செயலகம் அமைக்க சட்டமன்றத்தில் அறிவிப்பு வெளியான சில நாட்களில் பட்டினப்பாக்கம் பகுதி தேர்வு செய்யப்பட்ட நிலையில், அப்பகுதி மீனவர்கள் தற்போது கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
தவெக அரசின் இந்த முடிவால் இப்பகுதியில் வாழும் 1200க்கும் அதிகமான மீனவர் குடும்பங்கள் பாதிக்கப்படலாம் என கணிக்கப்பட்டு உள்ளது. மேலும் தமிழ்நாடு அரசு இப்பகுதி மக்களுக்கு மாற்று இடத்தை கொடுத்து, இடம்பெயர வைக்க வேண்டிய நிலையும் ஏற்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

மீனவர்கள் வேறு இடத்திற்கு இடம் மாற்றம் செய்தால் அவர்களுக்கான வாழ்வாதாரமாக இருக்கும் கடல் மற்றும் கடலை நம்பிய வர்த்தகம் பாதிக்கப்படும். இந்த பிரச்சனை குறித்து செப்டம்பர் 15ஆம் தேதி மீனவர்கள் முக்கியமான ஆலோசனை கூட்டம் நடத்த உள்ளனர்.
இதேவேளையில் விஜய் தலைமையிலான அரசு சமீபத்தில் ரத்து செய்த பரந்தூர் விமான நிலைய திட்டத்திற்காக கைப்பற்ற வேண்டிய நிலத்தில் இருக்கும் குடும்பங்களின் எண்ணிக்கை பார்த்தால் 1005 ஆகவே உள்ளது, ஆனாலும் தவெக தலைமையிலான அரசு இத்திட்டத்தை ரத்து செய்தது.
பரந்தூர் விமான நிலையத் திட்டத்தின் மூலம் அப்பகுதியில் இருக்கும் விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள் என கூறிய தவெக அரசு, மீனவ குடும்பங்கள் பாதிக்கும் பட்டினப்பாக்கம் இடத்தை தேர்வு செய்தது மக்கள் மத்தியில் பல கேள்விகளை எழுப்பியுள்ளது என்றால் மிகையில்லை.
இதோடு பரந்தூரில் நீர் நிலைகள் அதிகம் இருக்கும் காரணத்தால் மழை காலத்தில் ஏற்படும் வெள்ள அபாயத்தையும் தொழில்நுட்ப ரீதியாக குறைக்கலாம் என்ற கருத்தும், இதற்கான ஆய்வு மேற்கொள்ளப்பட்டு உள்ளது. ஆயினும் பரந்தூர் திட்டம் ரத்து செய்யப்பட்டது.
இதேபோல் தவெக அரசு தற்போது 2வது விமான நிலையத்திற்காக தேர்வு செய்யப்பட்ட செய்யூர் மற்றும் கும்மிடிப்பூண்டி பகுதிக்கு அருகில் கல்பாக்கம் அணுமின் நிலையம் மற்றும் இஸ்ரோவின் ஸ்ரீஹரிகோட்டா ராக்கெட் ஏவுதளம் உள்ளதால், இப்பகுதியில் விமான நிலையம் அமைக்க அனுமதி கிடைக்குமா என்ற கேள்வி மிகப்பெரியதாக உள்ளது.
ஒரு விமான நிலையத்திற்கான இடத்தை தேர்வு செய்வது என்பது காற்றின் போக்கு துவங்கி பல காரணிகளை ஆய்வு செய்து அதன் பின்பு தான் செயல்படுத்த முடியும், இப்படிப்பட்ட இடம் தான் பரந்தூர்.
ஆனால் தலைமைச் செயலகம் அமைப்பதில் விமான நிலையத்தைப் போன்ற கடுமையான இடத் தேர்வு விதிமுறைகள் இல்லை. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்காமல் மாற்று இடத்தை தவெக அரசு தேடலாம் என சமுக வலைத்தளத்தில் பதிவுகள் அனல் பறக்கிறது.
இரு திட்டங்களிலும் மக்கள் பாதிப்பு இருந்தாலும், பாதிப்பின் தன்மை மற்றும் இப்பகுதி மக்களின் வாழ்வாதாரத்துடன் உள்ள தொடர்பு வேறுபட்டது.
எந்தொரு பெரிய உள்கட்டமைப்புத் திட்டங்களுக்கும் மக்களின் எதிர்ப்பு வருவது இயல்பு. ஆனால், எதிர்ப்பை சமாளித்து, மக்களின் பாதிப்பை குறைத்து, மக்களுக்கான இழப்பை முறையாக வழங்கி அத்திட்டத்தை அடுத்தக்கட்டத்திற்கு கொண்டு செல்ல வேண்டுமே தவிர திட்டத்தையே கைவிடுவது தீர்வாகாது.
மேலும் பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் அமைப்பதற்கு பதிலாக, இந்த நிலத்தில் மீனவர்களுக்கு வீடுகள் கட்டித்தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
மேலும் அவர்கள் கடலை நம்பியே தங்களின் வாழ்வாதாரம் இருப்பதால், பணம் கொடுத்தாலும் கடலை அணுகும் தொலைவில் இல்லாவிட்டால் அவர்களின் வாழ்க்கை பாதிக்கப்படும் என மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.


Click it and Unblock the Notifications
