செபி என்றழைக்கப்படும் இந்திய பங்குச்சந்தை ஒழுங்குமுறை ஆணையம் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்திற்கு 25 கோடி ரூபாயும், அதனுடைய தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநருமான முகேஷ் அம்பானிக்கு 15 கோடி ரூபாயும் அபராதம் விதித்துள்ளது.
என்ன காரணம் எதற்காக இந்த 40 கோடி ரூபாய் அபராதம், வாருங்கள் பார்க்கலாம்.
கடந்த 2007ம் ஆண்டு ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் 4.1 சதவீத பங்குகளை ரிலையன்ஸ் பெட்ரோலியத்திற்கு விற்பனை செய்ததில் விதிமுறைகளை மீறியதாக செபி இந்த அபராதத்தினை விதித்துள்ளது.
யாருக்கு எவ்வளவு அபராதம்?
இந்த நிலையில் முறைகேடாக பங்கு வர்த்தகம் மேற்கொண்டது தொடர்பாக ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனம், அதன் தலைவரும், நிர்வாக இயக்குனருமான முகேஷ் அம்பானி மற்றும் மும்பை எஸ்.இ.எஸ். நிறுவனம், நவிமும்பை எஸ்.இ.எஸ் நிறுவனம் ஆகியவற்றிற்கு அபராதம் விதித்து உள்ளது. இதில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்துக்கு ரூ.25 கோடியும், முகேஷ் அம்பானிக்கு ரூ.15 கோடியும், நவிமும்பை எஸ்.இ.எஸ் நிறுவனத்துக்கு ரூ.20 கோடியும், மும்பை எஸ்.இ.எஸ் நிறுவனத்துக்கு ரூ.10 கோடியும் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.
யாரிந்த செபி?
செபி என்று பரவலாக அறியப்படும் இந்திய பங்கு பரிவர்த்தனை வாரியம், இந்தியாவில் பங்கு சந்தைகள், நிதிச்சந்தைகளை ஒழுங்குபடுத்தும் ஒரு அமைப்பாகும். மும்பையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இந்த அமைப்பு, அவ்வப்போது இது போன்ற ஒழுங்கு நடவடிக்கைகளை எடுத்து, சீர்திருத்த நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.
இது தான் அபராதத்திற்கு காரணம்
கடந்த 2007-ம் ஆண்டு ரிலையன்ஸ் இன்ஸ்ட்ரீஸ் நிறுவனம் ரிலையன்ஸ் பெட்ரோலியம் நிறுவனத்தின் 4.1 சதவீத பங்குகளை பங்குவர்த்தகத்தை பாதிக்கும் வகையில் அது வீழ்ச்சி அடைந்த நேரத்தில் வாங்கி, விற்பனை செய்திருந்தது செபி விசாரணையில் கண்டறியப்பட்டது.
சமீப காலமாக கொரோனா நெருக்கடிக்கும் மத்தியில் இந்த நிறுவனம் பல்வேறு அதிரடியான அன்னிய முதலீடுகளை ஈர்த்து வருகிறது. இந்த நிலையில் செபியின் இந்த நடவடிக்கை வந்துள்ளது சற்று பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
பங்கு விலை நிலவரம்
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் பங்கு விலையானது கடந்த வெள்ளிகிழமை நிலவரப்படி, 0.11 சதவீதம் அதிகரித்து, 1987.50 ரூபாயாக அதிகரித்து முடிவடைந்துள்ளது. இன்று பங்கு சந்தை விடுமுறை என்பதால் இதன் எதிரொலி திங்கட்கிழமை வர்த்தகத்தில் எதிரொலிக்கலாம். ஆக முதலீட்டாளார்கள் இதனை கவனித்து அதற்கேற்ப வர்த்தகம் செய்வது நல்லது.