இந்தியாவின் மிகப்பெரிய ரியல் எஸ்டேட் நிறுவனமாக இருந்து சஹாரா குழுமத்தின் தலைவரான சுப்ரதா ராய்-க்கு பங்குச்சந்தை கட்டுப்பாட்டு ஆணையமான செபி உடனடியாக 62,600 கோடி ரூபாய் தொகையைச் செலுத்துங்கள் இல்லையெனில் பரோல் ரத்து செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவீர்கள் என உச்ச நீதிமன்றத்தின் வாயிலாகச் சமன் அனுப்பியுள்ளது.
சுப்ரதா ராய் மற்றும் சஹாரா இந்தியா பரிவார் குழுமத்தின் 2 நிறுவனங்கள் முதலீட்டாளர்களுக்கும், அரசுக்கும் 8 வருடத்திற்கு முன்பு செலுத்த வேண்டிய தொகை 25,700 கோடி ரூபாய் மட்டுமே.
இதை அரசு அனுமதி அளிக்கப்பட்ட காலத்திற்குள் செலுத்த முடியாத காரணத்தால் தற்போது சுப்ரதா ராய் செலுத்த வேண்டிய தொகை, அதற்கான வட்டி, அபராதம் என இத்தொகையின் அளவு 62,600 கோடி ரூபாய் வரையில் உயர்ந்துள்ளது.
தவறான தொகை
செபியின் சமன்-ஐ தொடர்ந்து சுப்ரதா ராய் ஈமெயில் மூலம் பதில் அளித்துள்ளார். இந்த ஈமெயிலில் சுப்ரதா ராய் செபி தவறான தொகையைக் கேட்கிறது, இதுமட்டும் அல்லாமல் நிலுவைத் தொகைக்கு 15 சதவீத வட்டியை விதித்துள்ளது, இது முற்றிலும் தவறானது எனத் தெரிவித்துள்ளார்.
முதலீட்டாளர்கள்
மேலும் முதலீட்டாளர்கள் சஹாரா இந்தியா பரிவார் குழுமம் பணத்தைத் திரும்பக் கொடுத்த நிலையில் நிலுவை தொகைக்கு இரட்டிப்பு தொகையைக் கேட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார் சுப்ரதா ராய்.
2012ல் சுப்ரதா ராய் செலுத்த வேண்டிய நிலுவைத் தொகை 25,700 கோடி ரூபாய், தற்போது செபி கோரப்பட்டுள்ள தொகை 62,600 கோடி ரூபாய்.
சுப்ரதா ராய் மோசடி
சுப்ரதா ராய் தலைமையிலான சஹாரா இந்தியா பரிவார் குழுமம் முறைகேடான வகையில் 3.5 பில்லியன் டாலர் அளவிலான தொகையை முதலீடாக ஈர்த்தது. இதுமட்டும் அல்லாமல் பங்குச்சந்தையின் மற்றும் முதலீட்டுச் சந்தையின் பல விதிகளை மீறியுள்ளது.
முதலீடு திரட்டல்
சஹாரா இந்தியா பரிவார் குழுமம் வங்கிகளில் கடன் பெர முடியாத நிலையில் பல கோடி இந்திய மக்களிடம் பணத்தை முதலீட்டாகப் பெற்றுள்ளது. இந்த முதலீட்டை திருப்பிச் செலுத்த முடியாத நிலைக்குச் சஹாரா இந்தியா பரிவார் குழுமம் தள்ளப்பட்டது
2012 வழக்கு
இந்த நிலையில் 2012ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் சுப்ரதா ராய் மற்றும் அவரது நிறுவனத்திற்குக் கடன் கொடுத்தவர்கள் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் சுப்ரதா ராய்-ஐ சிறையில் அடைத்தது.
ஜெயில் டூ பரோல்
2012 வழக்கின் தீர்ப்பை தொடர்ந்து 2 வருடங்களுக்கும் அதிகமான காலம் ஜெயில் இருந்த சுப்ரதா ராய் 2016 முதல் பரோலில் இருந்து வருகிறார்.
இதுவரை சுப்ரதா ராய் நீதிமன்றத்தில் 15,000 கோடி ரூபாய் அளவிலான தொகையை மட்டுமே செலுத்தியுள்ளார்.