செமிகன்டக்டர் மற்றும் சிப் தயாரிப்பில் உலகிலேயே மிகப்பெரிய நிறுவனமாக இருக்கும் இன்டெல் நிறுவனத்தின் முதலீட்டு அமைப்பான இன்டெல் கேபிடல் யாரும் எதிர்பார்க்காத வகையில் ஜியோ நிறுவனத்தின் டிஜிட்டல் மற்றும் டெலிகாம் சேவையில் முதலீடு செய்து சக டெலிகாம் நிறுவனங்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளது.
இதுவரை ஜியோ நிறுவனத்தில் டிஜிட்டல் டெக்னாலஜி, முதலீட்டு நிறுவனங்கள் தான் முதலீடு செய்து வந்தது. ஆனால் முதல் முறையாக இந்தியாவில் எந்தொரு டெலிகாம் நிறுவனத்திலும் செய்திடாத வகையில் இன்டெல் கேபிடல் ஜியோ நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளது.
முகேஷ் அம்பானி ஜியோ -வை வைத்து முதலீடு ஈர்க்கும் வேலை மீண்டும் துவங்கியுள்ளதா என்ற கேள்வி மீண்டும் எழுந்துள்ளது.
இன்டெல் கேபிடல்
இன்டெல் நிறுவனத்தின் ஆஸ்தான முதலீட்டு நிறுவனமான இன்டெல் கேபிடல், ஜியோ நிறுவனத்தின் டெலிகாம் மற்றும் டிஜிட்டல் வர்த்கத்தில் சுமார் 1894.50 கோடி ரூபாய் முதலீடு செய்து சுமார் 0.39 சதவீத பங்குகளைக் கைப்பற்றியுள்ளது.
இது ஜியோ நிறுவனத்தின் 11வது முதலீடாகும்.
மொத்தம்
இதுவரை முகேஷ் அம்பானி தலைமையிலான ஜியோ, டிஜிட்டல் மற்றும் டெலிகாம் சேவை துறையில் 25.09 சதவீத பங்குகளை விற்பனை செய்து சுமார் 1,17,588.45 கோடி ரூபாய் அளவிலான முதலீட்டைப் பெற்றுள்ளனர்.
இன்டெல் கேபிடல் முதலீட்டின் மூலம் இந்நிறுவனத்தின் பங்கு மதிப்பு 4.91 கோடி ரூபாயாகவும், மொத்த நிறுவனத்தின் மதிப்பு 5.16 லட்சம் கோடி ரூபாயாகவும் உயர்ந்துள்ளது.
முகேஷ் அம்பானி
உலகிலேயே மிகப்பெரிய டிஜிட்டல் சமூகமாக மாறும் எங்கள் கனவில் இன்டெல் உடன் இணைந்து செயல்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது. புதுமைகளிலும், உலகத்தையே மாற்றும் தொழில்நுட்பத்தை உருவாக்குவதிலும் இன்டெல் முன்னோடியாக உள்ளது. மேலும் இன்டெல் கேபிடல் முதலீடுகளும் சந்தையில் மிகப்பெரிய மதிப்பை உருவாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
எங்களுடைய இந்தக் கூட்டணி இந்தியாவில் 1.3 பில்லியன் மக்களின் வாழ்க்கையை நிச்சயம் மேம்படுத்தும் என நம்புகிறோம் என முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார்.
5ஜி சேவை
ஜியோ தற்போது சுமாப் 400 மில்லியன் வாடிக்கையாளர்களைக் கொண்டு மிகப்பெரிய அளவில் இயங்கி வருகிறது. இந்தச் சூழ்நிலையில் ஜியோ மற்றும் இன்டெல் கேபிடல் ஆகிய இரு நிறுவனங்களும் 5ஜி தொழில்நுட்பத்தில் முக்கியக் கவனத்தைச் செலுத்தி வரும் வேளையில் இக்கூட்டணி இணைந்துள்ளது.
5ஜி சேவை விரிவாக்கத்தில் ஜியோ சீன நிறுவனங்களுடன் இணையப் போவதில்லை என ஏற்கனவே முடிவு செய்துள்ள நிலையில், இன்டெல் உடனான கூட்டணி 5ஜி சேவை விரிவாக்கத்திற்கு அடித்தளமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.