2022-23ஆம் நிதியாண்டின் முதல் நாணய கொள்கை முடிவுகளை இன்று ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் தெரிவித்தார். ரிசர்வ் வங்கி முடிவுகள் பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் அதிகம் எதிர்பார்த்து இருந்த நிலையில் அறிவிப்பு வெளியான அடுத்தச் சில நொடிகளில் உயர்வில் இருந்த சென்செக்ஸ் சரிவுக்குத் தள்ளப்பட்டு உள்ளது.
இதனால் ரீடைல் முதலீட்டாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளது மட்டும் அல்லாமல் சரிவை சமாளிக்க மாற்று வழிகளைத் தேட துவங்கியுள்ளனர்.
ஆர்பிஐ கவர்னர்
ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ் இன்று 6ஆம் தேதி துவங்கி இரண்டு நாள் நாணய கொள்கை கூட்டத்தின் முடிவுகளை வெளியிட்டார். 2022-23ஆம் நிதியாண்டின் முதல் நாணய கொள்கை கூட்டம் என்பதால் அதிகப்படியான எதிர்பார்ப்பைப் பெற்று இருந்தது.
ரிசர்வ் வங்கி
இக்கூட்டத்தின் முடிவில் ரிசர்வ் வங்கியின் நிதி கொள்கை கூட்டம் ஒருமனதாக வாக்களிக்கப்பட்டு வட்டி விகிதங்களுக்கான முடிவுகள் எடுக்கப்பட்டு ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ் இன்று அறிவித்தார்.
ரெப்போ விகிதம்
இன்று காலை 10 மணிக்குத் துவங்கிய ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ் நேரலையில் அடுத்த 2 மாதத்திற்கு ரெப்போ விகிதத்தை 4% ஆகவும், MSF மற்றும் வங்கி விகிதம் 4.25% ஆகவும் எவ்விதமான மாற்றமும் இல்லாமல் அறிவித்துள்ளார்.
ஆனால் ரிவர்ஸ் ரெப்போ விகிதம் 0.40% அதிகரித்து 3.75% ஆக உயர்ந்துள்ளது.
வட்டி விகிதம் உயர்வு
அமெரிக்கா, பாகிஸ்தான் போன்ற நாடுகள் பணவீக்கத்தைக் குறைக்கு வட்டி விகிதத்தை உயர்த்திய நிலையில் இன்று இந்திய ரிசர்வ் வங்கியும் வட்டியை உயர்த்தும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஆர்பிஐ ரிவர்ஸ் ரெப்போ விகிதத்தைத் தவிர அனைத்தையும் மாற்றாமல் வைத்துள்ளது.
சென்செக்ஸ்
இதன் எதிரொலியாக 150 புள்ளிகள் உயர்வில் இருந்த சென்செக்ஸ் 100 புள்ளிகள் வரையில் சரிந்து 58,876 புள்ளிளை அடைந்துள்ளது. இதன் மூலம் 60000 புள்ளிகளை மீண்டும் அடைவது தாமதமாகும் நிலை உருவாக்கியுள்ளது.