அமெரிக்க அதிபர் தேர்தலில் விறுவிறுப்பாக வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில் ஜோ பிடன் மற்றும் டொனால்டு டிரம்ப் இடையில் கடுமையான போட்டி நிலவி வருகிறது. இந்நிலையில் ஆட்சி அமைக்க 270 இடங்களில் வெற்றி பெற வேண்டிய சூழ்நிலையில் ஜோ பிடன் 270க்கு 264 இடத்தில் முன்னிலையில் இருக்கிறார்.
இந்திய நேரப்படி வியாழக்கிழமை காலை 10.12 மணி நிலவரப்படி டிரம்ப் 68,590,057 வாக்குகளைப் பெற்ற நிலையில் பிடன் 72,054,458 வாக்கு எண்ணிக்கையிலும் முன்னிலையில் உள்ளார் ஜோ பிடன்.
ஜோ பிடன் வெற்றி கிட்டதட்ட வெற்றியான நிலையில் அமெரிக்கப் பங்குச்சந்தை புதன்கிழமை வர்த்தகத்தில் சிறப்பான வளர்ச்சியைப் பதிவு செய்த காரணமாக, இந்தியப் பங்குச்சந்தையின் சென்செக்ஸ் மற்றும் நிப்டி குறியீடு இன்று ஆரம்பம் முதல் சிறப்பான வளர்ச்சியைப் பதிவு செய்து வருகிறது.
இந்திய பங்குச்சந்தை
மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு இன்று காலை வர்த்தகம் துவங்கிய முதல் சிறப்பான வளர்ச்சியைப் பதிவு செய்து வருகிறது. குறிப்பாக எஸ்பிஐ காலாண்டு முடிவுகள் இன்றைய வர்த்தக உயர்வுக்கு முக்கியமான காரணமாக உள்ளது.
இதோடு அமெரிக்கத் தேர்தல் முடிவுகளும், அமெரிக்கப் பங்குச்சந்தையில் ஏற்பட்ட தாக்கமும் இந்திய பங்குச்சந்தையில் அதிகளவிலான முதலீட்டை ஈர்த்துள்ளது.
சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீடு
இன்று காலை வர்த்தகத்தில் சென்செக்ஸ் குறியீடு 585 புள்ளிகள் வரையில் உயர்ந்தது. 10.48 மணியளவில் சென்செக்ஸ் 537.19 புள்ளிகள் உயர்ந்து 41,153.33 புள்ளிகளை அடைந்தது 1.30 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்தது. இதேபோல் நிப்டி குறியீடு 155.85 புள்ளிகள் அதிகரித்து 12,065.10 புள்ளிகளை அடைந்து 1.32 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
டிரம்ப்
அதிபர் தேர்தலில் பிடன் வெற்றி உறுதியான நிலையில் டிரம்ப் வாக்குகளை மறுபடியும் கணக்கிட வேண்டும் என நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்க உள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் அமெரிக்கத் தேர்தல் களத்தில் முடிவுகள் உறுதியான நிலையிலும் பரபரப்புக் குறையாமல் உள்ளது.
அமெரிக்கச் சந்தை
அமெரிக்கச் சந்தையில் புதன்கிழமை ஜோ பிடன் வெற்றி வாய்ப்புகள் சிறப்பான நிலையில் இருந்த காரணத்திற்காக முதலீட்டுச் சந்தையில் இருந்து விலகி இருந்த முதலீட்டாளர்கள் மீண்டும் பங்குச்சந்தை வர்த்தகத்திற்கு வந்தனர்.
இதன் காரணமாகப் புதன்கிழமை அமெரிக்காவின் டாவ் ஜோன்ஸ் குறியீடு 367.63 புள்ளிகள் அதாவது 1.34 சதவீதம் உயர்வடைந்து 27,847.66 புள்ளிகளை அடைந்தது. இதேபோல் S&P 500 குறியீடு 74.28 புள்ளிகள் உயர்ந்து 2.20 சதவீதம் உயர்ந்து 2.20 சதவீத உயர்வடைந்து 3,443,44 புள்ளிகளை அடைந்தது.
ஆசிய சந்தை
அமெரிக்கச் சந்தையின் எதிரொலி காரணமாக வியாழக்கிழமை காலை வர்த்தகத்தில் ஆசியச் சந்தை சிறப்பான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
ஜப்பான் சந்தை 1 சதவீதம், சீனா ஷாங்காய் சந்தை 0.6 சதவீதம், ஹாங்காங் சந்தை 24 சதவீதம், ஆஸ்திரேலியா சந்தை 1 சதவீதம், தென் கொரியா சந்தை 1.5 சதவீதம், சிங்கப்பூர் சந்தை 1.4 சதவீதம் உயர்ந்து இந்திய பங்குச்சந்தை வர்த்தகத்திற்குத் துணை நின்றது.
தங்கம் மற்றும் வெள்ளி
வியாழக்கிழமை MCX வர்த்தகச் சந்தையில் டிசம்பர் மாதத்திற்கான ஆர்டர்கள் விலை தொடர் வளர்ச்சிப் பாதையில் உள்ளது. இன்று காலை வர்த்தகத் துவக்கத்தில் தங்கம் விலை 0.8 சதவீதம் அதிகரித்து 10 கிராம் தங்கத்தின் விலை 51,226 ரூபாயாக உள்ளது. புதன் கிழமை வர்த்தகத்தில் 10 கிராம் 24 கேரட் தங்கம் விலை 800 ரூபாய் வரையில் சரிந்தது குறிப்பிடத்தக்கது.
தங்கத்தைப் போலவே வெள்ளியின் விலையும் இன்று காலை வர்த்தகத்தில் 1.2 சதவீதம் வரையில் உயர்ந்து ஒரு கிலோ வெள்ளியின் விலை 62,086 ரூபாயாக உயர்ந்துள்ளது. புதன் கிழமை வர்த்தகத்தில் வெள்ளி விலை சுமார் 1,400 ரூபாய் வரையில் குறைந்தது குறிப்பிடத்தக்கது.
கச்சா எண்ணெய் சந்தை
அமெரிக்கத் தேர்தல் முடிவுகள் காரணமாகத் தங்கம் மற்றும் பங்குச்சந்தையில் அதிகளவிலான முதலீடுகள் குவிந்த நிலையில் கச்சா எண்ணெய் சந்தை பெரிய அளவிலான பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளது. இன்று கச்சா எண்ணெய் சந்தை வர்த்தகத்தில் WTI கச்சா எண்ணெய் 1.71 சதவீதம் சரிந்து ஒரு பேரல் 38.48 டாலராக வர்த்தகமாகிறது.
இதேபோல் பிரென்ட் கச்சா எண்ணெய் விலை 1.70 சதவீதம் சரிந்து ஒரு பேரல் 40.53 டாலருக்கு வர்த்தகமாகிறது.