இன்று மாலை, மத்திய புள்ளியியல் அமைச்சகம், இந்தியாவின் செப்டம்பர் 2019 காலாண்டு ஜிடிபி தரவுகளை வெளியிட இருக்கிறார்கள். இந்த ஜிடிபி தரவுகள் மத்திய அரசு தொடங்கி பெரு நிறுவனங்கள், சிறு வியாபாரிகள், தனி மனிதர்கள் வரை அனைவருக்கும் ஒரு அதிர்ச்சி கொடுக்கலாம் என்கிறார்கள் பொருளாதார வல்லுநர்கள்.
அப்படி என்ன அதிர்ச்சி..? இந்த செப்டம்பர் 2019 காலாண்டுக்கான ஜிடிபி வளர்ச்சி 4.5 சதவிகிதமாக இருக்கலாம் என ப்ளூம்பெர்க் நடத்திய பொருளாதார நிபுணர்கள் சர்வேயில் 41 பொருளாதார வல்லுநர்கள் சொல்லி இருக்கிறார்கள். அப்படி 4.5 சதவிகிதம் அல்லது 5 சதவிகிதத்துக்கு கீழ் வந்தால், அது கடந்த ஆறு நிதி ஆண்டுகளில் இந்திய பொருளாதாரம் காணாத சரிவு.
கடந்த சில ஆண்டுகளில் இந்தியா தான் உலகிலேயே அதிவேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரமாக இருந்தது. கடந்த 2016-ம் ஆண்டில் இரண்டாவது காலாண்டில் மட்டும் ஜிடிபி வளர்ச்சி 9.4 சதவிகிதமாக இருந்தது, என்பதையும் இங்கு நினைவு படுத்திக் கொள்ள வேண்டி இருக்கிறது. அபப்டி வளர்ந்து வந்த பொருளாதாரம் தான் இப்போது வெறும் 4.5 சதவிகிதம் வளர்ச்சி காணும் எனச் சொல்லி இருக்கிறார்கள்.
ஏன் 4.5 சதவிகிதம் என்கிற கேள்விக்கும் பொருளாதார வல்லுநர்களே பதில் சொல்லி இருக்கிறார்கள்.
இந்தியாவின் பொருளாதார சரிவு, நிழல் வங்கி என்று சொல்லப்படும் வங்கி அல்லாத நிதி நிறுவனங்களில் இருந்து தொடங்கியது. இந்த வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் கடன் கொடுப்பதற்கான பணத்தை, இந்திய வங்கிகளிடம் இருந்து தான் வாங்குகிறார்கள். அப்படி கடன் வாங்கிய பணத்தை, சகட்டு மேனிக்கு பலருக்கு அள்ளிக் கொடுத்து விட்டார்கள். விளைவு என் பி எஃப் சி என்று சொல்லப்படும் வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் கொடுத்த கடன் திரும்ப வரவில்லை. எனவே வங்கிகளிடம் கடன் வாங்கிய என் பி எஃப் சியால் வங்கிகளுக்கு பணத்தை திருப்பிச் செலுத்த முடியவில்லை.
இதனைத் தொடர்ந்து என் பி எஃப் சி நிறுவனங்கள் திவாலாகத் தொடங்கியது. உதாரணம் திவான் ஹவுசிங். இதனால் சாதாரண வங்கிகளில் நிதிப் பற்றாக்குறை அதிகரித்துவிட்டது. ஆக வங்கிகளால் புதிதாக, யாருக்கும் கடன் கொடுக்க முடியவில்லை. கடன் கொடுக்க நினைத்தாலும், பணம் இல்லை. இதை ஆங்கிலத்தில் Credit Crunch என்கிறோம். இது தான் இந்திய பொருளாதார மந்த நிலையின் முதல் பக்கம்.
பொருளாதாரத்தின் இரண்டு தூண்களான தேவை மற்றும் சப்ளைகளிலும் சிக்கல் வந்தது. உள் நாட்டில் தேவை சரிந்ததால், உற்பத்தி செய்த பொருட்களை விற்க முடியவில்லை. இதனால் உற்பத்தி செய்வது தொடங்கி, உற்பத்தி செய்த பொருட்களை விற்பது வரை அனைத்தும் சிக்கலுக்கு உள்ளாகிவிட்டது. அதோடு மக்கள் கையில் இருக்கும் பணத்தை செலவழிப்பது மற்றும் உலக பொருளாதாரத்தில் இருக்கும் மந்த நிலை என எல்லாமே இந்திய பொருளாதாரத்தை நேரடியாக பாதிக்கத் தொடங்கிவிட்டன. இது இந்திய பொருளாதார மந்த நிலையின் இரண்டாம் பக்கம்.
மத்திய அரசு தன்னால் முடிந்த வரை பொருளாதாரத்தை ஊக்குவிக்க பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்தது.
1. கார்ப்பரேட் வரியைக் குறைத்தது,
2. ஜிஎஸ்டி வரி விகிதங்களில் மாற்றம் செய்தது,
3. மூல தன ஆதாய வரியைக் குறைத்தது,
4. ஏற்றுமதியை அதிகரிக்க வரியை குறைத்தது என பல நடவடிக்கைகளை தில்லாக எடுத்து இருக்கிறது.
இதனால் அரசுக்கு வர வேண்டிய வரி வருவாயே சுமார் 2 லட்சம் கோடி ரூபாய் வரை குறைந்து இருக்கிறது. எனவே அரசு தலையிட்டு செலவு செய்து பொருளாதாரத்தை மந்த நிலையில் இருந்து காப்பாற்ற முடியவில்லை. இது பொருளாதார மந்த நிலையின் மூன்றாம் பக்கம்.
இத்தனை சிக்கல்களையும் சரி செய்ய, அரசு தன்னிடம் இருக்கும் மற்ற கொள்கை ரீதியிலான வழிமுறைகளையும் கையாண்டு கொண்டு இருக்கிறது. ஆனால் உண்மையில் அரசுக்கு முன்னால் இருக்கும் ஆப்ஷன்கள் குறைந்து கொண்டே வருகின்றன. ஏற்கனவே
1. ஆர்பிஐ இந்த 2019-ல் மட்டும் சுமாராக 1.35 சதவிகிதம் ரெப்போ வட்டியைக் குறைத்தது
2. ரியல் எஸ்டேட் துறையை சரி செய்ய தனி நிதி ஒதுக்கீடு செய்தது,
3. வங்கிகள் இணைப்புக்கு உத்தரவிட்டது,
4. பொதுத் துறை நிறுவனங்களை தனியார்மயமாக்க முயற்சித்துக் கொண்டு இருப்பது
5. ஆர்பிஐ-யிடம் இருந்து 1.76 லட்சம் கோடியை வாங்கியது...
என தங்களுக்கு இருக்கும் அனைத்து ஆப்ஷன்களையும் பயன்படுத்திக் கொண்டே வருகிறார்கள். ஆனால் பொருளாதார மந்த நிலையில் பெரிய மாற்றம் ஏற்பட்டதாகத் தெரியவில்லை.
இதனால் தான் இன்று வெளியாக இருக்கும் ஜிடிபி 4.5 சதவிகிதம் வரலாம் என 41 பொருளாதார வல்லுநர்கள் கணித்து இருக்கிறார்கள். இன்னும் சில மணி நேரங்கள் தான், விரைவில் செப்டம்பர் 2019 காலாண்டுக்கான இந்திய ஜிடிபி வளர்ச்சியைப் பார்த்துவிடலாம்.