செப்டம்பர் மாதம் சரக்கு மற்றும் சேவை வரியான ஜிஎஸ்டி வசூல் 26 சதவீதம் அதிகரித்து 1,47,686 கோடி ரூபாய் கிடைத்துள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மொத்த ஜிஎஸ்டி வசூலில் 25,271 கோடி ரூபாய் மத்திய ஜிஎஸிடி ஆகும். மாநில ஜிஎஸ்ஸ்டி வசூல் 31,813 கோடி ரூபாய் ஆகும். ஒருங்கிணைக்கப்பட்ட ஐஜிஎஸ்டி வசூல் 80,464 கோடி ரூபாயாகும்.
மேலும் செஸ் வரியாக 10,137 கோடி ரூபாய் வசூலாகியுள்ளது. இதில் 856 கோடி ரூபாய் இறக்குமதி வரியும் அடங்கும்.
வருவாய்
ஆகஸ்ட் மாத ஜிஎஸ்டி வசூலுடன் ஒப்பிடும் போது செப்டம்பர் மாதம் ஜிஎஸ்டி வசூல் 26 சதவீதம் அதிகரித்து 1 கோடியே 47 லட்சம் ரூபாயாகக் கிடைத்துள்ளது. இறக்குமதி பொருட்கள் மிதான் வரி வருவாய் 39 சதவீதம் அதிகரித்துள்ளது. சென்ற ஆண்டுடன் ஒப்பிடும் போது இது 22 சதவீதம் அதிகம். தொடர்ந்து 7வது மாதமாக ஜிஎஸ்டி வசூல் 1.40 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமாகக் கிடைத்துள்ளது.
ஒரு நாள் அதிகபட்ச வசூல்
இந்த மாதம் செப்டம்பர் 20-ம் தேதி மட்டும் அதிகபட்சமாக 8.77 லட்சம் ஜிஎஸ்டி சலான்கள் தாக்கல் செய்யப்பட்டு 49,453 கோடி ரூபாய் வசூல் செய்யப்பட்டது. இது இரண்டாம் மிகப் பெரிய ஒரு நாள் ஜிஎஸ்டி வசூல் சாதனையாகும். முன்னதாக ஜூலை மாதம் 20-ம் தேதி 9.58 லட்சம் சலான்களுடன் 57,846 கோடி ரூபாய் வசூல் செய்யப்பட்டது அதிகபட்சமாக உள்ளது.
மத்திய அரசு
ஐஜிஎஸ்டியில் இருந்து வழக்கமான தீர்வாக மத்திய ஜிஎஸ்டிக்கு 31,880 கோடி ரூபாயும், மாநில ஜிஎஸ்டிக்கு 27,403 கோடி ரூபாயும் மத்திய அரசு வழங்கியுள்ளது. வழக்கமான தீர்வுகளுக்குப் பிறகு மத்திய மற்றும் மாநிலங்களின் மொத்த வருவாய் மத்திய ஜிஎஸ்டிக்கு 57,151 கோடி ரூபாய், மாநில ஜிஎஸ்டி 59,216 கோடி ரூபாயாகும்
ஜிஎஸ்டி தளம்
முன்பெல்லாம் அதிக நபர்கள் ஜிஎஸ்டி தாக்கல் செய்யும் போது ஜிஎஸ்டிஎன் தளம் முடங்கிவிடும். அதற்காகக் காலக்கெடு நீட்டிக்கப்படும். இப்போது இவ்வளவு மிகப் பெரிய வசூல் ஆகும் போது ஜிஎஸ்டிஎன் தளம் எந்த கோளாறும் இல்லாமல் இயங்கி வருவது வரி செலுத்துனர்களிடையில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செப்டம்பர் மாதம் ஜிஎஸ்டிஎன் தளத்தில் 1.1 கோடி பில்கள் மற்றும் ரசீதுகள் உருவாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
அக்டோபர் மாத கணிப்பு
அக்டோபர் மாதம் விழாக்காலம் என்பதால் கண்டிப்பாக அக்டோபர் மாத ஜிஎஸ்டி வசூல் 1.50 லட்சம் கோடியை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.