கொரோனா பாதிப்பால் இந்தியாவில் உற்பத்தித் துறையை விடவும் சேவைத் துறை பெரிய அளவில் பாதிக்கப்பட்டது அனைவரும் தெரிந்த நிலையில், சுமார் 8 மாதங்களுக்குப் பின் சேவைத் துறை முதல் முறையாக வளர்ச்சிப் பாதைக்குத் திரும்பியுள்ளது.
கொரோனா பாதிப்புகளைக் கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் கடுமையான கட்டுப்பாடுகள் விதித்து வந்த நிலையில் சேவைத் துறை முழுமையாக இயங்க முடியாமல் போனது.
ஆனால் கடந்த சில மாதங்களாகப் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு வந்த நிலையில், அக்டோபர் மாதம் சேவைத் துறை வளர்ச்சிப் பாதைக்குச் சென்றுள்ளது.
மார்ச் மாதம் அறிவிக்கப்பட்ட லாக்டவுன் முதல் மக்கள் பெரிய அளவில் வெளியில் வரப் பயப்படும் காரணத்தால் சேவைத் துறையின் வர்த்தகம் முழுமையாக இயங்க முடியாமல் தவித்தது. தற்போது பல சேவைகளை மக்கள் பெறத் துவங்கிய காரணத்தால் சேவைத் துறை இயல்பான வர்த்தகத்திற்குத் திரும்ப முயற்சி செய்து வருகிறது.
அக்டோபர்
பிப்ரவரி மாதத்திற்குப் பின் சேவைத் துறை தொடர்ந்து சரிவு பாதையில் இருந்த நிலையில் அக்டோபர் மாதம் 54.1 புள்ளிகளை அடைந்து வளர்ச்சிப் பாதைக்குத் திரும்பியுள்ளது. இது செப்டம்பர் மாதத்தில் இதன் அளவு 49.8 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
50 புள்ளிகளுக்கு மேல் இருந்து வளர்ச்சிப் பாதையில் இருப்பதாகப் பொருள்.
உற்பத்தித் துறை
அக்டோபர் மாதத்தில் உற்பத்தித் துறையும் சிறப்பான வளர்ச்சியைப் பதிவு செய்த நிலையில் உற்பத்தித் துறையிலும் வளர்ச்சிப் பாதைக்குத் திரும்பி நாட்டின் பொருளாதாரம் மீண்டு விரைவில் வளர்ச்சி அடையும் என்ற நம்பிக்கையை முதலீட்டாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் மனதில் ஏற்படுத்தியுள்ளது,.
13 வருட வளர்ச்சி
IHS மார்கிட் இந்தியா வெளியிட்டுள்ள பிஎம்ஐ குறியீட்டில் இந்தியாவின் உற்பத்தி அளவு செப்டம்பர் மாதத்தில் 56.8 புள்ளிகளாக இருந்தது. பண்டிகை கால விற்பனைக்கு மக்கள் மத்தியில் தேவை அதிகரித்துள்ள காரணத்தால் உற்பத்தி அளவீடுகள் அதிகரித்து அக்டோபர் மாதம் 58.9 புள்ளிகள் வரையில் உயர்ந்துள்ளது.
இது கடந்த 13 வருடத்தில் ஏற்படாத மாதாந்திர வளர்ச்சி என IHS மார்கிட் இந்தியா தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
சரக்கு போக்குவரத்து
மேலும் சரக்கு போக்குவரத்துக்காகப் போடப்படும் ஈவே பில் எண்ணிக்கை கடந்த ஆண்டின் அக்டோபர் மாதத்தை ஒப்பிடுகையில் இந்த ஆண்டு 21 சதவீதம் அதிகமாக உள்ளது. மேலும் செப்டம்பர் மாதத்தை ஒப்பிடுகையில் 11 சதவீதம் அதிகமாக உள்ளது.
இதனால் நாடு முழுவதும் உற்பத்தி பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு உள்ளது. இதனால் நவம்பர் மாதத்தில் வர்த்தகச் சந்தை சிறப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வேலைவாய்ப்பு
சேவை மற்றும் உற்பத்தித் துறை வளர்ச்சிப் பாதையில் இருக்கும் நிலையில் வேலைவாய்ப்பு சந்தை அக்டோபர் மாதத்தில் சரிவைச் சந்தித்துள்ளது. அக்டோபர் மாதத்தில் நாட்டின் வேலைவாய்ப்பின்மை விகிதம் செப்டம்பர் மாதத்துடன் ஒப்பிடும்போது 0.31 சதவீதம் சரிந்துள்ளது.
இதனால் வேலைவாய்ப்பு கிடைக்கும் எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது. இந்த அக்டோபர் மாதத்தில் வேலைவாய்ப்பின்மை 6.98 சதவீதமாக அதிகரித்துள்ளதாகச் சிஎம்ஐஇ (CMIE) தரவுகள் கூறுகின்றது. இது கடந்த செப்டம்பர் மாதத்தில் 6.67 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
பெரு நகரங்களில் வளர்ச்சி
இதில் நல்ல விஷயம் என்னவெனில் நகர்ப்புறங்களில் வேலையின்மை விகிதம் 7.15 சதவீதமாகக் குறைந்துள்ளது. இது கடந்த செப்டம்பர் மாதத்தில் 8.45 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.