சீனாவில் கொரோனா தொற்று எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவது மட்டும் அல்லாமல் தொடர்ந்து பல பகுதிகளுக்கு வேகமாகப் பரவி வருகிறது. இதனால் சீன அரசு வழக்கம் போல் தனது கடுமையான கட்டுப்பாடுகள் உடன் கொரோனா தொற்று பரவலைத் தடுத்து நிறுத்த முயற்சி செய்து வருகிறது.
இதன் வாயிலாகத் தற்போது சீன அரசு சீனாவின் ஷாங்காய் மற்றும் ஷென்சென் ஆகிய இரு முக்கியமான வர்த்தகப் பகுதிகளில் இருக்கும் துறைமுகத்தில் லாக்டவுன் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதன் மூலம் இந்திய பார்மா துறை பாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியா - சீனா
இந்தியா - சீனா மத்தியிலான எல்லை பிரச்சனை தொடர்ந்து நீடித்தாலும், இரு நாடுகள் மத்தியிலான ஏற்றுமதி மற்றும் இறக்குமதி வர்த்தகத்தில் எவ்விதமான பாதிப்பும் இல்லை. இந்தியாவில் சீன இறக்குமதிகளை நம்பியே இயங்கும் பல துறைகள் இருக்கும் நிலையில், இதில் பார்மா துறை மிகவும் முக்கியமானதாக விளங்குகிறது.
ஷாங்காய் மற்றும் ஷென்சென்
தற்போது சீன அரசு ஷாங்காய் மற்றும் ஷென்சென் ஆகிய இரு துறைமுகத்தில் லாக்டவுன் கட்டுப்பாடுகளை விதித்துள்ள காரணத்தால், இவ்விரு பகுதிகளில் இருந்து இந்தியா வரும் கார்கோ அனைத்தும் தற்போது தாமதமாகவும் அல்லது துறைமுகத்தில் இருந்து கிளம்ப முடியாமலும் சிக்கியுள்ளது.
பார்மா பொருட்கள்
இதனால் இந்திய பார்மா துறை நிறுவனங்கள் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஆக்டிவ் பார்மசியூட்டிகல் பொருட்கள் (API) மற்றும் இதர மருத்துவத் துறை சார்ந்த பொருட்களுக்கான சப்ளை பாதிக்கப்படும். சீனாவில் பரவி வரும் கொரோனா தொற்று அந்நாட்டு வர்த்தகத்தை அதிகளவில் பாதித்துள்ளது.
கார்கோ ஷிப்பிங் துறைமுகம்
உலகிலேயே மிகப்பெரிய கார்கோ ஷிப்பிங் துறைமுகம் அமைந்திருக்கும் ஷாங்காய்-யில் அறிவிக்கப்பட்டு உள்ள லாக்டவுன் மூலம் உலக நாடுகள் பெற வேண்டிய பொருட்கள் தாமதமாகும். இதனால் பொருட்கள் தட்டுப்பாடு காரணமாக இதன் விலை அதிகரிக்க அதிகளவிலான வாய்ப்புகள் உள்ளது.
இந்திய பார்மா துறை
இந்திய பார்மா துறையில் ஏற்கனவே மொத்த மருந்து மூலப்பொருட்களின் விலை மற்றும் பேக்கேஜிங் செலவுகள் உயர்ந்துள்ளது. இந்தச் சூழ்நிலையில் ஏற்றுமதி நிறுத்தப்பட்டால், விநியோகச் சங்கிலியில் அடுத்தடுத்துப் பிரச்சனைகள் உருவாகும். இதனால் மொத்த பார்மா துறையிலும் பாதிக்கப்படும் என முன்னணி மருந்து நிறுவனங்களில் ஒன்றான மேன்கைண்ட் பார்மாவின் செயல் தலைவர் ஆர்.சி.ஜூனேஜா கூறியுள்ளார்.
லாக்டவுன்
கடந்த முறை சீன அரசு எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தி தளம் அதிகமாக இருக்கும் ஷென்சென் பகுதியில் போட்ட லாக்டவுன்-ஐ சில நாட்களில் நீக்கிய நிலையில் இத்துறையில் எவ்விதமான பாதிப்பும் ஏற்படவில்லை. இதேபோல் ஷாங்காய் லாக்டவுன் கட்டுப்பாடுகளைச் சில நாட்களில் நீக்கினால் எவ்விதமான தாக்கமும் இருக்காது.