இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தகக் குழுமம் ஆக விளங்கும் டாடா குழுமத்தின் தாய் நிறுவனமான டாடா சன்ஸ் நிறுவனத்தில் டாடா குடும்பத்தைத் தவிர்த்து அதிகமாகப் பங்குகளை வைத்திருப்பது ஷாபூர்ஜி பலோன்ஜி குரூப் தான்.
இதன் வாயிலாகத் தான் சில மாதங்களுக்கு முன்பு டாடா சன்ஸ் தலைவராகச் சைரஸ் மிஸ்திரி நியமிக்கப்பட்டார். ஆனால் இவரின் பல முடிவுகள் ரத்தன் டாடா உட்படப் பலருக்கு விருப்பம் இல்லாத காரணத்தால் கடுமையான பிரச்சனைக்கு மத்தியில் தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.
இதன் பின்பு சைரஸ் மிஸ்திரி தரப்பில் இருந்து டாடா சன்ஸ் நிர்வாகத்தின் மீது பல வழக்குகள் தொடுக்கப்பட்டது. இதில் சில வழக்குகள் இன்னுமும் நடந்து வரும் நிலையில் சைரஸ் மிஸ்திரியின் குடும்ப நிறுவனமான ஷபூர்ஜி பல்லோன்ஜி அதிகளவிலான கடனில் மூழ்கியிருக்கும் காரணத்தால் டாடா சன்ஸ் பங்குகளை வைத்து நிதி திரட்ட போராடி வருகிறது.
ஷபூர்ஜி பல்லோன்ஜி
ஷபூர்ஜி பல்லோன்ஜி ப்ரோமோட்டர்கள் அதாவது மிஸ்திரி குடும்பம் டாடா சன்ஸ் பங்குகளைக் காப்புறுதியாகக் கொண்டு (செக்யூரிட்டி) கடன் பத்திரங்கள் வெளியிட்டு அதன் மூலம் சுமார் 6,600 கோடி ரூபாய் அளவிலான முதலீட்டை திரட்ட திட்டமிட்டு உள்ளது. இந்த அறிவிப்பை நிறுவன பதிவகத்தில் மிஸ்திரி குடும்பம் அறிவித்துள்ளது.
டாடா குழுமம்
சைரஸ் வெளியேற்றத்திற்குப் பின்பு டாடா குழுமம் மீது வழக்குத் தொடுக்கப்பட்ட நிலையில், டாடா சன்ஸ் மற்றும் ஷபூர்ஜி பல்லோன்ஜி மத்தியிலான உறவில் பெரிய விரிசல் ஏற்பட்டது. இந்த நிலையில் தான் ஷபூர்ஜி பல்லோன்ஜி அதிகளவிலான கடனில் மூழ்கியது.
கடன் சுமை
இந்தக் கடன் சுமையில் இருந்து மீண்டு வர டாடா பங்குகளை அடைமானம் வைத்து நிதி திரட்ட மிஸ்திரி குடும்பம் டாடா-விடம் அனுமதி கோரிய நிலையில் டாடா திட்டவட்டமாக மறுத்துவிட்டது. இது மிஸ்திரி குடும்பத்திற்கு மட்டும் அல்லாமல் ஷபூர்ஜி பல்லோன்ஜி குரூப்-க்கும் பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது.
டாடா சன்ஸ் பங்குகள்
இந்த நிலையில் சைரஸ் குடும்பம் மீண்டும் டாடா சன்ஸ் பங்குகளைச் செக்யூரிட்டியாக வைத்து கடன் பத்திரங்கள் மூலம் நிதி திரட்ட முடிவு செய்துள்ள திட்டம் மீண்டும் பிரச்சனையை உருவாக்கும் எனச் சந்தை வல்லுனர்கள் எதிர்பார்க்கின்றனர்.
6,600 கோடி ரூபாய் நிதி
தற்போது மிஸ்திரி குடும்பம் திரட்டப்படும் 6,600 கோடி ரூபாய் அளவிலான நிதியை வைத்து தனது நிறுவன கடன்களுக்கான அட்வானஸ் பேமெண்ட்டை செலுத்த உள்ளதாகவும், வர்த்தகத்தை விரிவாக்கம் செய்யவும் இத்தொகையைப் பயன்படுத்த உள்ளதாகவும் அறிவித்துள்ளது. ஷபூர்ஜி பல்லோன்ஜி குரூப் தற்போது ஆயில் டிரில்லிங் போன்ற சில முக்கியமான கட்டுமான மற்றும் ரியல் எஸ்டேட் துறையில் வர்த்தகத்தில் ஈடுபட்டு உள்ளது.
மிஸ்திரி குடும்பம்
மிஸ்திரி குடும்பம் மொத்தமாக டாடா சன்ஸ் நிறுவனத்தில் 18 சதவீத பங்குகளை வைத்துள்ளது. இதில் மிஸ்திரி குடும்ப நிறுவனமான ஸ்டெர்லிங் இன்வெஸ்ட்மென்ட் கார்ப் நிறுவனத்தின் பெயரில் 9.185 சதவீத பங்குகளை வைத்துள்ளது. இந்தப் பங்குகளை வைத்து தான் முதலீட்டை திரட்ட முடிவு செய்யப்பட்டு உள்ளது.
சொத்து விற்பனை
150 வருடமாக இயங்கி வரும் ஷபூர்ஜி பல்லோன்ஜி குரூப் மொத்தமாக 20,000 கோடி ரூபாய் அளவிலான கடனை வைத்துள்ளது. இந்தக் கடனுக்கான தவணையைச் சரிவரச் செலுத்தி வந்தாலும், கடனை தீர்க்க ஒவ்வொரு சொத்து மற்றும் வர்த்தகத்தை விற்பனை செய்து வருகிறது.
Eureka Forbes
சமீபத்தில் ஷபூர்ஜி பல்லோன்ஜி குரூப் தனது கடன் சுமையைக் குறைக்க யூரேக்கா போர்ப்ஸ் நிறுவனத்தை வெளிநாட்டு முதலீட்டு நிறுவனத்திற்குப் பெரும் தொகைக்கு விற்பனை செய்ய ஒப்பந்தம் செய்தது. ஆனாலும் டாடா தனது பங்குகளைப் பயன்படுத்த அனுமதி அளிக்கவில்லை.