கொரோனா பாதிப்பின் காரணமாக வர்த்தகம் அதிகளவில் பாதிக்கப்பட்ட துறைகளில் ஒன்று ஆன்லைன் வாடகை வாகனங்கள் மாற்றும் டாக்ஸி சேவைகள். இந்தியாவின் பெரும் நகரங்களில் துவங்கப்பட்டு மிகவும் குறுகிய காலகட்டத்திற்குள் நாட்டின் 2ஆம் தர நகரங்கள் வரையில் வேகமாக வர்த்தகம் வளர்ந்துள்ளது.
ஆனால் கொரோனா பாதிப்பின் காரணத்தால் இத்துறைகளின் வர்த்தகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது மட்டும் அல்லாமல் அடுத்த ஒரு ஆண்டுக்கு இயல்பு நிலைக்குத் திரும்ப வாய்ப்பு இல்லாத நிலைக்குச் சென்றுள்ளது.
இந்நிலையை உணர்ந்த இத்துறை நிறுவனங்கள் வாடிக்கையாளர்களை ஈர்க்கவும், அதேசமயம் பாதுகாப்பான சூழ்நிலையை ஏற்படுத்தும் வகையில் புதிய திட்டத்தை வகுத்துள்ளது.
பிரச்சனை
கொரோனா பாதிப்புப் படிப்படியாகக் குறைந்து மக்கள் இயல்பு நிலைக்குத் திரும்பினாலும் நோய்த் தொற்றின் பயம் மக்கள் மத்தியில் அதிகமாக இருக்கும். இதனால் மக்கள் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்த விரும்ப மாட்டார்கள். இதன் காரணமாக மக்கள் குறைந்த கட்டணத்தில் கிடைக்கும் மாற்றுப் போக்குவரத்தை நாட துவங்குவார்கள். இதேபோல் பண வசதி அதிகமாக இருப்பவர்கள் மேம்பட்ட போக்குவரத்து சேவை அல்லது புதிய வாகனத்தை வாங்க முயற்சி செய்வார்கள்.
மக்களின் இந்த மனநிலைக்கு ஏற்றவாறு திட்டத்தை வடிவமைத்துள்ளது நாட்டின் முன்னணி வாகன வாடகை நிறுவனங்களான ஓலா, உபர், வோகோ, பவுன்ஸ், ராபிடோ, யூலு திட்டமிட்டுள்ளது.
ஓலா
ஆன்லைன் டாக்ஸி சேவையில் நாட்டின் முன்னணி நிறுவனமாகத் திகழும், ஓலா self-drive சேவையை மிகப்பெரிய அளவில் விரிவாக்கம் செய்ய முடிவு செய்துள்ளது. இதற்காகப் பிரத்தியேக திட்டங்களும், பல்வேறு கட்டண வாரியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதோடு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் ஊழியர்களுக்கும் தனிப்பட்ட திட்டத்தையும் ஓலே திட்டமிட்டுக் கார்களைச் சிறப்பான முறையில் பராமரிக்கப்பட்டு வழங்க முடிவு செய்துள்ளது. இச்சேவையை ஆஸ்திரேலியா வர்த்தகத்தில் ஏற்கனவே ஓலே சோதனை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
உபர்
இதேபோல் உபர் நிறுவனம், கார்பரேட் நிறுவனங்கள் மற்றும் ஊழியர்களுக்கெனப் பிரத்தியேக சேவைகளைக் கொடுப்பது மட்டும் அல்லாமல் நீண்ட கால வாடகை திட்டத்தையும் தயாரித்துள்ளது. இத்திட்டத்தின் மூலம் ஒரு நபர் கார் ஒரு வாரம் வரையில் பயன்படுத்த முடியும்.
இதேபோல் கொரோனா காலத்தில் வர்த்தகத்தை மேம்படுத்த உபர் தற்போது மளிகை பொருட்களை டெலிவரி செய்து வருகிறது.
வோகோ, பவுன்ஸ், யூலு
கொரோனா பாதிப்பிற்குப் பின் மக்கள் மத்தியில் பணத்தின் இருப்பு குறைவாக இருக்கும், அதேசமயம் பாதுகாப்பும் அதிகமாக வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கும் இந்தச் சூழ்நிலையில் பைக் டாக்ஸி சேவையில் மிகப்பெரிய வளர்ச்சி இருக்கும் எனப் பல்வேறு ஆய்வுகள் கூறுகிறது.
இதைச் சுதாரித்துக்கொண்ட வோகோ, பவுன்ஸ், யூலு இருசக்கர வாகனங்களுக்கு நீண்ட கால subscriptions திட்டத்தை அறிமுகம் செய்ய உள்ளது. இது நிச்சயம் மக்கள் மத்தியில் அதிகளவிலான வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரேபிடோ
மேலும் ரேபிடோ டாக்ஸி சேவை தாண்டி தற்போது பொருட்களையும் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு டெலிவரி செய்யும் சேவையைத் துவங்கியுள்ளது.
செலவினம்
கொரோனா-க்குப் பின் இந்தியாவில் வாடகை வாகன சேவையில் இருக்கும் நிறுவங்களின் செலவுகள் தற்போதைய அளவை விடவும் 4 முதல் 5 சதவீதம் வரையில் அதிகரிக்கும்.
ஆனால் இந்திய மக்கள் தற்போது இருக்கும் நெருக்கடியில் அதிகக் கட்டணம் கொண்ட ப்ரீமியம் சேவையை விரும்பி வாங்குவார்களா..? என்பது தான் மிகப்பெரிய கேள்வியாக உள்ளது.