ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடங்கிய பின்பு, அமெரிக்கா பிரிட்டன் ஐரோப்பா எனப் பெரும்பாலான மேற்கத்திய நாடுகள் ரஷ்யப் பொருட்கள், சேவைகளை வாங்குவதைத் தடை செய்தது. இந்நிலையில் பிரிட்டன் நாட்டைச் சேர்ந்த ஷெல் நிறுவனம் போர் துவங்கிய பின்பு ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்கியது பெரும் சர்ச்சையானது.
இதைத் தொடர்ந்து ஷெல் நிறுவனம் தற்போது மன்னிப்பு கேட்டுள்ளது மட்டும் அல்லாமல் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு வாங்குவதை முழுவதுமாக நிறுத்திக்கொள்வதாக அறிவித்துள்ளது.
ஷெல் நிறுவனம்
சில நாட்களுக்கு முன் பிரிட்டன் எண்ணெய் நிறுவனமான ஷெல், மிகக் குறைந்த விலையில் ரஷ்ய கச்சா எண்ணெய்யை மிகவும் குறைந்த விலையில் வாங்கியது. உலக நாடுகள் ரஷ்யா மீது கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் பிரட்டன் ஷெல் நிறுவனத்தில் பலருக்கும் கோபத்தை ஏற்படுத்தியது.
இரத்த வாசனை வரவில்லையா?
இதனிடையில் உக்ரைன் நாட்டின் வெளியுறவு அமைச்சர் டிமிட்ரோ குலேபா, ஷெல் நிறுவனத்திடம், "ரஷ்ய கச்சா எண்ணெய்யில் உங்களுக்கு உக்ரேனியர்களின் இரத்த வாசனை வரவில்லையா?" என டிவிட்டரில் கேட்டார். இந்த டிவீட் உலகம் முழுவதும் வைரலானது.
சிஇஓ மன்னிப்பு
ஷெல் நிறுவனத்தின் சிஇஓவான பென் வான் பியூர்டன் போர் துவங்கிய பின்பு ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு வாங்கியதற்காக மன்னிப்பு கேட்டார். இதைத் தொடர்ந்து ரஷ்யா உடனான பல சேவை மற்றும் வர்த்தகத்தை நிறுத்த உள்ளதாக அறிவித்துள்ளது ஷெல்.
ஷெல் அறிவிப்புகள்
- உடனடியாக கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்த உள்ளோம்.
- புதிய ஒப்பந்தங்கள் எதுவும் செய்யப்படப்போவது இல்லை.
- அரசுடன் ஆய்வு செய்து புதிய எண்ணெய் ஆதாரங்கள் பெறுவதற்கான முடிவை எடுக்க உள்ளோம்.
- ரஷ்யாவில் இருக்கும் ஷெல் சர்வீஸ் ஸ்டேஷன், விமான எரிபொருள், லூப்ரிக்கண்ட் பணிகளை மூடவும், நிறுத்தவும் உள்ளோம்.
- படிப்படியாக அனைத்து வர்த்தகம், கொள்முதலை ரஷ்யாவிடம் இருந்து குறைக்க முடிவு செய்துள்ளதாக ஷெல் தெரிவித்துள்ளது.