ஈரான் போர் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பல மடங்கு உயர்வு கண்டிருக்கிறது. இதனால் இந்தியாவை சேர்ந்த எண்ணெய் நிறுவனங்கள் முன்பை விட பல மடங்கு விலை கொடுத்து கச்சா எண்ணெய் வாங்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டு இருக்கின்றன.
வழக்கமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயரும் போது இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயரும். ஈரான் போருக்கு முன்பு வரை ஒரு பேரல் கச்சா எண்ணெய் சுமார் 80 டாலருக்கே கிடைத்தது ஆனால் இப்போது 150 டாலருக்கு மேல் தான் கிடைக்கிறது. ஒரு மாத காலத்தில் கச்சா எண்ணெய் விலை பல மடங்கு உயர்ந்தும் இந்திய நிறுவனங்கள் ஒரு குறிப்பிட்ட நாட்கள் வரை பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தாமல் கட்டுப்படுத்தி வந்தன. ஆனால் தற்போது நிலைமை கைமிறி சென்று வருகிறது.

கச்சா எண்ணெய் விலை உயர்வு ஒரு புறம் என்றால் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சி அடைந்து வருகிறது. இதனால் இந்திய நிறுவனங்கள் இன்னும் கூடுதலான ரூபாயை கொடுத்து கச்சா எண்ணெய் வாங்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கின்றன. பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் இதுவரை சாதாரண பெட்ரோல், டீசல் விலையில் கை வைக்கவில்லை. அதற்கு மாறாக பிரீமியம் பெட்ரோல் விலைகளை மட்டும் இரண்டு ரூபாய் என உயர்த்தின.
இந்த சூழலில் கடந்த வாரம் இந்தியாவின் இரண்டாவது பெரிய தனியார் பெட்ரோல் விற்பனை நிறுவனமான நயாரா எனர்ஜி தங்களுடைய பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உயர்த்தியது. ஒரு லிட்டர் பெட்ரோல் 5 ரூபாய் என்றும் டீசல் விலை 3 ரூபாய் என்றும் விலை உயர்த்தப்பட்டது. இதற்கிடையே நயாராவை தொடர்ந்து ஷெல் பெட்ரோல் நிறுவனமும் விலையை உயர்த்தியுள்ளது.

இந்தியாவின் முன்னணி தனியார் பெட்ரோல் விற்பனை நிறுவனமான ஷெல் தங்களுடைய பெட்ரோல் மற்றும் டீசல் வகைகளின் விலைகளை உயர்த்தி இருக்கிறது. இதன்படி டீசல் விலை லிட்டருக்கு 25 ரூபாயும் பெட்ரோல் விலை 7.41 ரூபாயும் உயர்த்தப்பட்டுள்ளது. சென்னையில் சாதாரண பெட்ரோல் ஒரு லிட்டர் 119.85 ரூபாயாகவும் பவர் பெட்ரோல் விலை ஒரு லிட்டர் 129.85 ரூபாயாகவும் விற்கப்படுகிறது. ஒரு லிட்டர் டீசல் விலை 123.52 ரூபாய் என உயர்த்தப்பட்டுள்ளது.
பெட்ரோல், டீசல் விலை உயர்வு நேரடியாகவே பல்வேறு பொருட்களின் விலைவாசி உயர்வுக்கு வித்திடும். எனவே தான் பொதுத்துறை நிறுவனங்கள் சாதாரண பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தாமல் இருக்க அரசு கடந்த வாரம் கலால் வரியை குறைத்தது. ஆனால் தனியார் நிறுவனங்கள் படிப்படியாக நிதி சுமையை மக்கள் மீது சுமத்த தொடங்கிவிட்டன.


Click it and Unblock the Notifications