சீனா அரசு ஹாங்காங்-ல் புதிய தேசிய பாதுகாப்புச் சட்டத்தை அமலாக்கம் செய்த பின் தினமும் புதிய மாற்றங்களை மக்களும், நிறுவனங்களும் சந்தித்து வருகின்றனர். இந்நிலையில், சீன அரசு ஹாங்காங்-ல் இயங்கி வரும் தொழில்நுட்ப நிறுவனங்களை வாடிக்கையாளர் தரவுகளைக் கோரியுள்ளது.
சீன அரசின் இந்தக் கோரிக்கையை உலகின் முன்னணி டெக் நிறுவனங்களான பேஸ்புக், வாட்ஸ்அப், டிவிட்டர், டெலிகிராம், டிக்டாக் ஆகியவை மறுப்பு தெரிவித்துள்ளது.
இதோடு டிக்டாக் அடுத்த சில நாட்களில் ஹாங்காங் சந்தையை விட்டு மொத்தமாக வெளியேற உள்ளதாக இந்நிறுவன செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
தேசிய பாதுகாப்புச் சட்டம்
ஹாங்காங்-ல் சீன அரசு புதிய தேசிய பாதுகாப்புச் சட்டத்தை அமல்படுத்திய நாளில் இருந்து தொடர்ந்து ஹாங்காங் மக்கள் போராட்டம் செய்து வருகின்றனர். மேலும் அரசுக்கு எதிராக வாசகங்கள் கொண்ட பலகைகள், நோட்டீஸ் போன்றவை இருந்தால் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் நிலையில் ஹாங்காங் மக்கள் கையில் வெள்ளை பேப்பரை பிடித்துக்கொண்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதுமட்டும் அல்லாமல் சீனாவிற்கு எதிரான விடுதலை பற்றிய புத்தகங்களைப் பொது நூலகம், கல்லூரி நூலகங்களில் இருந்து நீக்கப்பட்டு வருகிறது.
டிக்டாக்
சீன அரசு புதிய சட்டதிட்டத்திற்குக் கீழ் டெக் நிறுவனங்களைக் கொண்டு வர டெக் நிறுவனங்களில் இருக்கும் பயனர்களின் தரவுகளைச் சீன அரசு கேட்ட நிலையில் பல பெரு நிறுவனங்கள் நேரடியாக மறுப்பு தெரிவித்து விட்டது.
இந்நிலையில் டிக்டாக் நிறுவனத்தின் தாய் நிறுவனமான பையிட் டான்ஸ், ஹாங்காங்-ல் சேவையை நிறுத்திவிட்டு மொத்தமாக இச்சந்தையை விட்டு வெளியேற முடிவு செய்துள்ளதாக டிகாக் நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
புதிய சீஇஓ
மே மாதம் டிக்டாக் நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக முன்னாள் வால்ட் டிஸ்னி நிறுவனத்தின் தலைவர் கெவின் மேயர் நியமிக்கப்பட்டார். இவர் டிக்டாக் நிறுவனத்தின் தாய் நிறுவனமான பையிட் டான்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாகவும் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
1.5 லட்சம் வாடிக்கையாளர்
டிக்டாக் சீன் அரசின் எவ்விதமான கோரிக்கையும் ஏற்கவில்லை எனத் தெரிவித்துள்ள நிலையில், 1.5 லட்சம் வாடிக்கையாளர்களுக்கான சேவையை மொத்தமாக நிறுத்திவிட்டு ஹாங்காங் சந்தையை விட்டு வெளியேற முடிவு செய்துள்ளது.
Douyin
ஹாங்காங் தற்போது சீன அரசு கட்டுப்பாட்டிற்கு வந்துள்ள நிலையில், டிக்டாக் போலவே பையிட் டான்ஸ் சீனாவில் Douyin என்ற செயலியை வைத்துள்ளது. இதனால் ஹாங்காங்-ல் டிக்டாக் சேவையை நிறுத்திவிட்டு Douyin சேவை அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இதைப்பற்றிப் பையிட்டான்ஸ் எதுவும் தெரிவிக்கவில்லை.