கொரோனா என்ற வார்த்தையைக் கேட்டாலே அலறி அடித்து ஓடும் மக்கள் ஒரு புறம், மறுபுறம் ஊரே மயான அமைதி காணும் நிகழ்வு. நம் வாழ்நாளில் கற்பனை செய்யக்கூட முடியாத ஒரு நிகழ்வு தான் இது.
ஏற்கனவே பாதாளத்தில் உள்ள வாகன துறையானது தற்போது தான் சிறிது ஏற்றம் காண ஆரம்பித்தது. ஆனால் அதற்கும் தற்போது தான் வாகனத் துறைக்கு முட்டுக்கட்டையாக வந்துள்ளது இந்த கொரோனா.
ஒட்டுமொத்த துறையின் செயல்பாடும் முடங்கியுள்ளது. இதனால் வாகனத்துறையானது நிச்சயம் மீண்டும் அடி வாங்கலாம் என கூறப்படுகிறது.
பெரும் முட்டுக்கட்டை
நாடு முழுவதும் கொரோனாவைப் கட்டுப்படுத்துவதற்காக ஊரடங்கு போடப்பட்டுள்ள நிலையில், அது ஆட்டோமொபைல் துறைக்கும் பெரும் முட்டுக்கட்டையாக அமைந்துள்ளது. ஏனெனில் மக்கள் அதிகமாக ஒன்று கூடுவதை தவிர்க்கும் விதமாக, தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இந்த நிலையில் இந்தியாவில் ஆட்டோமொபைல் உட்பட அனைத்து உற்பத்தியும் முற்றிலும் முடக்கப்பட்டுள்ளது.
விற்பனை குறையும்
இதற்கிடையில் 2020 - 2021ம் நிதியாண்டில் பயணிகள் வாகன விற்பனையானது 20 - 24% குறையலாம் என சியாம் தெரிவித்துள்ளது. வர்த்தக வாகன விற்பனையானது 32 - 25%, இதே இரு சக்கர வாகன விற்பனையானது 27 -30% விற்பனையும், இதே மூன்று சக்கர வாகன விற்பனையானது 28%, ஆக மொத்தத்தில் ஒட்டுமொத்த விற்பனையும் 20% வீழ்ச்சி கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
உற்பத்தியும் குறைப்பு
இது ஒட்டுமொத்த ஜிடிபி வளர்ச்சியினையும் பாதிக்கக் கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் ஒவ்வொரு நிறுவனமும் உற்பத்தியையும் குறைத்துள்ளது. ஏப்ரலில் வரவிருந்த பிஎஸ் 6 விதிகளுக்கு ஏற்ப வாகனங்களை உற்பத்தி செய்ய வேண்டிய நிலையில், பிஎஸ் 4 மாடல் ரக வாகனங்களை விற்கும் முனைப்பில் இந்த நிறுவனனங்கள் இருந்து வந்தன.
வாகன விற்பனை தேக்கம்
ஆனால் பொருளாதார மந்த நிலை காரணமாக வாகனங்கள் தேங்கி நின்றன. இந்த நிலையில் இரண்டிற்கும் செக் வைத்தாற்போல், மாருதி சுசூகி உற்பத்தி விகிதமானது கடந்த மார்ச் மாதத்திலேயே 32% குறைந்துள்ளது. லாக்டவுன் காரணமாக புதிய பிஎஸ் 6 வாகன உற்பத்தியும் வெகுவாக தடைபட்டுள்ளது.
பலரின் வேலை பறி போகலாம்
ஏற்கனவே கொரோனா தாக்கத்தின் மத்தியில் நிலைகுலைந்து போயுள்ள இந்த துறையானது, தற்போது கொரோனாவின் தாக்கத்தினால் மேலும் அடி வாங்கலாம் என்று கூறப்படுகிறது. இதனால் பல மில்லியன் பேர் வேலை பறிபோகலாம் என்றும் கூறப்படுகிறது. இதனால் நேரிடையாகவும், மறைமுகமாகவும் பலர் வேலையை இழந்துள்ளனர்.