எய்ச்சர் மோட்டார்ஸ் நிறுவனத்தின் தலைவராக மீண்டும் சித்தார்த்தா லால் நியமிக்க நிர்வாகக் குழு ஒப்புதல் அளித்துள்ளது. 2 நாள் ஆலோசனைக்குப் பின்பு எய்ச்சர் மோட்டார்ஸ் நிர்வாகக் குழு இந்த முடிவை எடுத்துள்ள நிலையில், இறுதி ஒப்புதலை வழக்கம் போல் பங்குதாரர்களிடம் இருந்து பெற உள்ளது.
தற்போது எடுக்கப்பட்ட முடிவின் படி சித்தார்த்தா லால் மே 1 முதல் நிர்வாகத் தலைவர் பொறுப்பில் இருப்பார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
சம்பள உயர்வு
சித்தார்த்தா லால் நியமனத்திற்குப் பெறும் பிரச்சனையாக இருந்த 10 சதவீத சம்பள உயர்வு தீர்க்க, புதிய முடிவை எய்ச்சர் நிர்வாகம் எடுத்துள்ளது. இனி வரும் காலகட்டத்தில் நிர்வாகத் தலைவருக்கான சம்பள உயர்வு நிறுவனம் சட்டம் பிரிவு 198 படி அதிகப்படியாக லாபத்தில் 1.5 சதவீதம் அளிக்கப்படும் என்ற புதிய கட்டமைப்பைக் கொண்டு வந்துள்ளது.
எய்ச்சர் மோட்டார்ஸ் வருடாந்திர கூட்டம்
இந்தியாவின் முன்னணி இரு சக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் தாய் நிறுவனமான எய்ச்சர் மோட்டார்ஸ்-ன் 39வது வருடாந்திர கூட்டம் ஆகஸ்ட் 17ல் நடந்தது, இந்தக் கூட்டத்தில் சித்தார்த்தா லால்-ஐ மீண்டும் நிர்வாகத் தலைவராக நியமிக்கவும், 10 சதவீத சம்பள உயர்வு அளிக்கும் திட்டத்தையும் நிர்வாகக் குழு முடிவு செய்து, இந்த முடிவைப் பங்குதாரர்கள் முன்னிலையில் வைக்கப்பட்டது.
சித்தார்த்தா லால் தலைமை
சித்தார்த்தா லால் நிர்வாகத் தலைவராகப் பொறுப்பில் இருந்த போது எய்ச்சர் மோட்டார்ஸ் சிறப்பான வளர்ச்சி அடைந்து வருகிறது. இதனால் இவரை மீண்டும் நிர்வாகத் தலைவராக நியமிப்பதில் பங்குதாரர்களுக்கு எவ்விதமான பிரச்சனையும் இல்லை.
10% சம்பள உயர்வு
ஆனால் 10 சதவீதம் சம்பள உயர்வு தான் பங்குதாரர்களுக்குப் பெரும் பிரச்சனையாக இருந்தது, இதனால் நிர்வாகக் குழுவின் சித்தார்த்தா லால்-ஐ மீண்டும் நிர்வாகத் தலைவராக நியமிக்கும் திட்டத்திற்குப் பங்குதாரர்கள் எதிர்த்து வாக்கு அளித்தனர்.
2 நாள் ஆலோசனை
10 சதவீத சம்பள உயர்வுக்காகச் சித்தார்த்தா லால் தனது நிர்வாகத் தலைவர் பதவியை இழக்கும் நிலை உருவானது, இதனைத் தொடர்ந்து தான் 2 நாள் ஆலோசனைக்குப் பின்பு எய்ச்சர் மோட்டார்ஸ் நிர்வாகம் புதிய சம்பள கட்டுப்பாடுகளை விதித்துப் பங்குதாரர்களிடம் ஒப்புதலுக்காகச் சமர்ப்பித்துள்ளது.
ஊழியர்கள் சம்பளம்
எய்ச்சர் மோட்டார்ஸ் பங்குதாரர்கள் 2021ஆம் நிதியாண்டில் நிறுவனத்தில் பணியாற்றும் மீடியன் ஊழியர்களின் சம்பளம் வெறும் 1 சதவீதம் மட்டுமே உயர்ந்துள்ள நிலையில் சித்தார்த்தா லால்-க்கு 10 சதவீதம் சம்பள உயர்வு அளிப்பது எந்த விதத்தில் நியாயம் எனக் கேள்வி எழுப்பியுள்ளது.
23.23 கோடி ரூபாய் சம்பளம்
சித்தார்த்தா லால் 2021ஆம் ஆண்டுக்கு 21.2 கோடி ரூபாய்ச் சம்பளமாகப் பெற்றார், ஆனால் 2022ஆம் நிதியாண்டில் 10 சதவீதம் சம்பள உயர்வுடன் 23.23 கோடி ரூபாய்ச் சம்பளமாக வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
ஆட்டோமொபைல் நிறுவனங்கள்
இந்தச் சம்பள அளவு என்பது பெரிய விஷயமில்லை, ஆனால் இந்தியச் சந்தையில் பல ஆட்டோமொபைல் நிறுவனங்கள் மோசமான வர்த்தகத்தை அடைந்துள்ள நிலையில், இத்துறையில் எதிர்கால வர்த்தகம் எப்படியிருக்கும் என்பதிலும் மந்தமான நிலை இருக்கும் காரணத்தால் பல நிறுவனங்களில் உயர் அதிகாரிகளுக்கும் சம்பள உயர்வு அளிக்கப்படவில்லை.
பங்குதாரர்கள் எதிர்ப்பு
இதை முன்வைத்துத் தான் எய்ச்சர் மோட்டார்ஸ் பங்குதாரர்கள் 10 சதவீத சம்பளத்தை ஏன் கொடுக்க வேண்டும் என்ற கேள்வியை எழுப்பிச் சுமார் 26 சதவீதத்திற்கும் அதிகமானோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
நிறுவனம் சட்டம் பிரிவு 198
தற்போது சித்தார்த்தா லால் சம்பள அளவீட்டில் நிறுவன சட்டம் பிரிவு 198 படி அதிகப்படியாக லாபத்தில் 1.5 சதவீதம் அளிக்கப்படும் என்ற புதிய கட்டமைப்பைக் கொண்டு வரப்பட்டு உள்ள நிலையில், பங்குதாரர்கள் இதற்கு என்ன பதில் சொல்லப்போகிறார்கள் என்பது தான் தற்போதைய நிலை. இந்தியச் சட்ட விதிகள் என்பதால் இதை மறுக்க வழி இல்லை.