டெல்லி: அமேசான் தனது கூட்டாளர் பியூச்சர் குழுமத்திற்கு எதிராக இடைகால நிவாரணத்தினை பெற்றுள்ளது.
சிங்கப்பூரை தளமாகக் கொண்ட நடுவர் நீதிமன்றம் தனது இடைக்கால உத்தரவில், பியூச்சர் குழு தனது சில்லறை வணிக்கத்தினை, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்திற்கு 3.38 பில்லியன் டாலர் பங்குகளை விற்க தடை விதித்துள்ளது.
அமேசான் Vs பியூச்சர் குழுமம் Vs ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனங்களுக்கு இடையிலான வழக்கில், அமேசானுக்கு சாதகமாக இந்த தீர்ப்பினை சிங்கப்பூர் நீதிமன்றம் வழங்கியுள்ளது.
ஒப்பந்தம் தற்காலிகமாக நிறுத்தம்
தற்போதைக்கு இந்த ஒப்பந்தத்தினை நிறுத்தி வைக்குமாறும் சிங்கப்பூர் நீதிமன்றம் பியூச்சர் குழுமத்திடம் கூறியுள்ளது. இந்த விவகாரத்தில் நடுவர் நீதிமன்றத்தில் ஒரு இறுதி தீர்ப்பை எட்டும் வரையில், ஒப்பந்தத்தில் ஒரு சூமுகமான தீர்வினை எட்ட முடியாது. கடந்த ஆண்டு அமேசான் பியூச்சர் கூப்பன்ஸ் நிறுவனத்தில் 49% பங்குகளை வாங்கியிருந்தது. இதே பியூச்சர் குழும சில்லறை வர்த்தகத்தில் 7.3% பங்குகளையும் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
அமேசானுக்கு சற்றே ஆறுதல்
இது குறித்து அமேசான் தரப்பில், நிறுவனம் கோரிய நிவாரணத்தினை நடுவர் நீதிமன்றம் வழங்கியுள்ளதாக கூறியுள்ளது. மேலும் இந்த விவகாரத்தில் விரைவில் சூமுக தீர்வை எட்டலாம் என்று எதிர்ப்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளது. மேலும், நடுவர் நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பினை நாங்கள் வரவேற்கிறோம். அதோடு மத்தியஸ்த முறையில் இந்த பிரச்சனைக்கு விரைவாக தீர்வு காண நாங்கள் கடமைப்பட்டுள்ளோம் என்றும் கூறியுள்ளது.
ரிலையன்ஸ் பங்கு விலை
எனினும் பியூச்சர் குழுமமோ, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனமோ இது குறித்து எந்தவிதமான அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை. இதற்கிடையில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் பங்கு விலையானது தற்போது கிட்டதட்ட 2% வீழ்ச்சி கண்டு 2,079 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது.
கடன் பிரச்சனை
கிஷோர் பியானிக்கு சொந்தமான பியூச்சர் நிறுவனத்தின் பங்குகளை வாங்க ரிலையன்ஸ் திட்டமிட்டிருந்தது. கடன் அதிகரித்ததை தொடர்ந்து ரிலையன்ஸ்நிறுவனத்திற்கு விற்பனை செய்ய, கடந்த சில மாதங்களுக்கு முன்பு இருந்தே பேச்சு வார்த்தை நடந்து வந்தது. இந்த ஒப்பந்தம் இந்திய மதிப்பில் சுமார் 24,000 - 27,000 கோடி ரூபாய் வரையில் இருக்கலாம் என்று கூறப்பட்டது.