இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களில் ஒன்று ஏர்டெல் நிறுவனம் என்பது அனைவரும் அறிந்ததே.
இந்த நிலையில் சிங்கப்பூரை தளமாகக் கொண்ட தொலைத்தொடர்பு நிறுவனமான சிங்டெல் நிறுவனத்தின் பங்குகளை ஏர்டெல் வாங்கவுள்ளது.
சிங்டெல் நிறுவனத்தின் 2 முதல் 4 சதவீத பங்குகளை வாங்குவதற்கு ஏர்டெல் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தொழில் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
சிங்டெல்
ஏர்டெல் நிறுவனம் சிங்டெல் நிறுவனத்தின் பங்குகளை வாங்கினால் அதன் மூலம் சிங்டெல் நிறுவனத்திற்கு ரு.,7500 கோடி நிதி திரட்ட முடியும் என்றும் கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி சிங்கப்பூரிலும் ஏர்டெல் நிறுவனம் தனது தொழில் துறையை விரிவுபடுத்தும் ஒரு நடவடிக்கையாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
பேச்சுவார்த்தை
இதுகுறித்து சிங்டெல் மற்றும் ஏர்டெல் நிறுவனங்களின் அதிகாரிகள் மட்டத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் இதனை அடுத்து அடுத்த கட்டமாக இரு நிறுவனங்களின் சிஇஓ மட்டத்தில் பேச்சுவார்த்தை நடக்கும் என்றும் கூறப்படுகிறது.
ஏர்டெல் - சிங்டெல்
சிங்டெல் நிறுவனத்தின் 2 முதல் 4 சதவீத பங்குகளை ஏர்டெல் வாங்கயிருப்பது கிட்டத்தட்ட உறுதி செய்துவிட்டதாக பெயர் கூற விரும்பாத பிடிஐ செய்தியாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். இருப்பினும் இந்த பரிவர்த்தனை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை ஏர்டெல் மற்றும் சிங்டெல் நிறுவனங்கள் இணைந்து தக்க சமயத்தில் வெளியிடும் என்றும் கூறப்படுகிறது.
ஏர்டெல் வாடிக்கையாளர்கள்
இந்தியாவைப் பொருத்தவரை ஜியோ நிறுவனத்தை அடுத்து ஏர்டெல் நிறுவனம் மிக அதிக வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது. அவ்வப்போது புதுப்புது திட்டங்களையும் சலுகைகளையும் வாடிக்கையாளர்களுக்கு அறிவித்து, தங்களது வாடிக்கையாளர்களை தக்கவைத்துக் கொள்வதிலும் ஏர்டெல் மிகவும் திறமையாக செயல்பட்டு வருகிறது.
பங்குச்சந்தையில் ஏர்டெல்
பங்கு சந்தையில் ஏர்டெல் நிறுவனத்தின் பங்குகள் நல்ல ஏற்றத்துடன் இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. எனவே சிங்கப்பூரை சேர்ந்த சிங்டெல் நிறுவனத்தின் பங்குகளை ஏர்டெல் வாங்குவது உறுதி செய்யப்பட்டால், பங்குச் சந்தையில் ஏர்டெல் நிறுவனத்தின் மதிப்பு இன்னும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கூட்டணி
ஏர்டெல் நிறுவனத்தில் 2000-ம் ஆண்டு முதல் சிங்டெல் நிறுவனம் பங்குதாரராக இருந்து வந்தது. இந்தியாவில் இருந்து சிங்கப்பூர் செல்பவர்களுக்கு ஏர்டெல் சிம் வேலை செய்யவில்லை என்றாலும் அங்கு இருந்த சிங்டெல் நிறுவனம் அதற்கு உதவி வந்தது. இப்போது 22 ஆண்டுகளுக்கு பிறகு சிங்டெல் நிறுவனம் வெளியேற உள்ளது.