இந்தியாவில் 6 மாதத்திற்கு முன்பு தனது ஆப்ரேஷன்ஸ்-ஐ துவங்கிய சிங்கப்பூர் நாட்டின் ஈகாமர்ஸ் நிறுவனமான ஷாப்பீ தற்போது மூடுவதாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பைத் திங்கட்கிழமை இந்நிறுவனத்தின் அனைத்து ஊழியர்கள் மத்தியில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டு உள்ளது.
இது மட்டும் அல்லாமல் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து இந்தியாவில் உடனடியாகத் தனது பணிகள் அனைத்தையும் மூடுவதாக அறிவித்துள்ளது.
ஷாப்பீ திட்டம்
இந்தியாவில் இருக்கும் முன்னணி ஈகாமர்ஸ் நிறுவனங்களான மீஷோ, பிளிப்கார்ட், அமேசான் போன்ற முன்னணி நிறுவனங்களுடன் போட்டிப்போட ஷாப்பீ திட்டமிட்ட இருந்தது. இதேபோல் ஈகாமர்ஸ் சந்தையில் கீழ்தட்டு மக்களை ஈர்க்கும் வகையில் வர்த்தகத்தை உருவாக்க வேண்டும் எனத் திட்டமிட்டது.
மார்ச் 29
ஆனால் இந்தியாவில் வர்த்தகத்தைத் துவங்கி 6 மாதத்தில் தனது ஆப்ரேஷன்ஸ்-ஐ சிங்கப்பூர் ஈகாமர்ஸ் நிறுவனமான ஷாப்பீ தற்போது மூடுவதாக அறிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது. மார்ச் 29ஆம் தேதி முதல் மொத்த வர்த்தகத்தையும் மூடுவதாக அறிவித்துள்ளது.
சர்வதேச சந்தை பிரச்சனை
ஷாப்பீ நிறுவனம் தனது முடிவை இத்தளத்தில் இருக்கும் விற்பனையாளர்கள் மத்தியிலும் தெரிவித்துள்ளது. மேலும் இதுகுறித்து Shopee நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் கூறுகையில், சர்வதேசச் சந்தையில் நிலவி வரும் மாற்றங்களைக் கருத்தில் கொண்டு இந்த முடிவை ஆரம்பக்கட்டத்திலேயே எடுத்துள்ளோம் எனக் கூறியுள்ளார்.
ப்ரீ பையர் செயலி
2022ஆம் ஆண்டின் துவக்கத்தில் ஷாப்பீ தனது வர்த்தகத்தைப் பிரான்ஸ் நாட்டில் இருந்து மூடியது. அதற்கு முன்பு ஐரோப்பிய சந்தையில் முடியது, தற்போது இந்தியாவில். இந்தியாவில் சீன செயலிகளைத் தடை செய்யும் பொருட்டு மத்திய அரசு சமீபத்தில் ப்ரீ பையர் செயலியை தடை செய்த நிலையில் தற்போது ஷாப்பீ தனது வர்த்தகத்தை மூடியுள்ளது.
டென்சென்ட்
ஷாப்பீ மற்றும் ப்ரீ பையர் நிறுவனங்களின் தாய் நிறுவனம் ஒன்று தான், SEA. இந்த நிறுவனத்தில் பெரும் பங்கு முதலீட்டாளராக இருப்பது சீனாவின் டென்சென்ட் தான். சமீபத்தில் நடந்த இந்திய சீன பேச்சுவார்த்தை கூடச் சுமூகமாக முடியாத நிலையில் ஷாப்பீ தானாவே முன்வந்து தனது வர்த்தகத்தை மூடியுள்ளது.