எலான் மஸ்க்-ன் அடுத்தடுத்த டீவீட்டுக்களால் மிகவும் பிரபலமான டோஜ்காயின் மதிப்புச் சமீபத்தில் தாறுமாறாக உயர்ந்து வரும் நிலையில், வழக்கம் போல் டோஜ்காயின் வளர்ச்சிக்கு எதிர்ப்பு கிளம்பியது. இதற்கு எலான் மஸ்க் யார் எவ்வளவு டோஜ்காயின் விற்பனை செய்தாலும் தான் வாங்க தயார் என்றும் தெரிவித்துள்ளார்.
இதனால் முதலீட்டாளர்கள் மத்தியில் டோஜ்காயின் மீதான ஈர்ப்பு அதிகரித்தது, 2013ஆம் ஆண்டு விளையாட்டாக ஆரம்பித்த டோஜ்காயின் தற்போது 10 பில்லியன் டாலர் மதிப்பீட்டைப் பெற்றுள்ளது.
இந்நிலையில் டோஜ்காயினின் மிகப்பெரிய முதலீட்டுத் திமிங்கிலம் குறித்துத் தகவல் வெளியாகியுள்ளது.
டோஜ்காயின் திமிங்கிலம்
கிரிப்டோகரன்சி சந்தையில் திமிங்கிலம் என்றால் மிகப்பெரிய முதலீட்டாளர் அல்லது அதிகக் கிரிப்டோகரன்சியை வைத்துள்ள உரிமையாளர் என்று பொருள். இதன் படி மொத்த டோஜ்காயின்-களில் சுமார் 28 சதவீதம் கிரிப்டோகரன்சியை ஒரே முதலீட்டாளர் வைத்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.
2.1 பில்லியன் டாலர் மதிப்பு
இது தனிநபரா அல்லது ஒரு முதலீட்டு நிறுவனமா என்பது இதுவரை தெரியவில்லை, கண்டும் பிடிக்கவில்லை. சமீபத்தில் எலான் மஸ்க் டோஜ்காயினுக்கு அளித்த ஆதரவு மற்றும் முதலீடுகள் டோஜ்காயின் மதிப்பு பெரிய அளவில் உயர்ந்தது. இதன் மூலம் இந்த 28 சதவீத டோஜ்காயின் மதிப்பு 2.1 பில்லியன் டாலராக உள்ளது.
844.19 சதவீத வளர்ச்சி
2020ல் மட்டும் டோஜ்காயின் மதிப்பு சுமார் 844.19 சதவீதம் வரையில் வளர்ச்சி அடைந்துள்ளது வெறும் 0.0026 டாலருக்கு விற்பனை செய்யப்பட்ட டோஜ்காயின் இந்த 45 நாட்களில் 0.08 டாலர் வரையில் உயர்ந்துள்ளது. இந்த அதிரடியான வளர்ச்சியில் மொத்த டோஜ்காயினின் சந்தை மதிப்பு 10 பில்லியன் டாலர் வரையில் உயர்ந்து குறிப்பிடத்தக்கது.
எலான் மஸ்க் மற்றும் ஸ்னூப் டாக்
பிப்ரவரி 9ஆம் தேதி எலான் மஸ்க் மீம் அடிப்படையிலான டோஜ்காயின் தனது 9 மாத மகனுக்கு வாங்கிக் கொடுப்பதாக அறிவித்தார், இதைத்தொடர்ந்து ராப் பாடகரான ஸ்னூப் டாக் டோஜ்காயின் குறித்து ஆதரவு அளித்து டிவீட் செய்த காரணத்தால் ஓரே நாளில் 31 சதவீதம் அதிகரித்தது.