தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக தன்னை தக்க வைத்து கொண்டு கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்டவராக இருக்கிறார் சிவகார்த்திகேயன். நடிகராக மட்டுமில்லாமல் சிறந்த கதை கொண்ட படங்களை தயாரிக்கவும் செய்கிறார்.
சிவகார்த்திகேயன் புரொடெக்ஷன்ஸ் என்ற பெயரில் திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வரும் சிவகார்த்திகேயன் சிறந்த படங்களை தயாரித்து வருகிறார். கனா, டாக்டர், டான் ஆகிய படங்களை தொடர்ந்து இந்த ஆண்டு சிவகார்த்திகேயன் புரொடெக்ஷன்ஸ் தயாரித்த படம் தாய் கிழவி.

அறிமுக இயக்குனர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் ராதிகா சரத்குமார் நடிப்பில் பிப்ரவரி 27ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது தாய் கிழவி திரைப்படம். வயதான தோற்றத்தில் ராதிகா அசத்தலான நடிப்பை கொடுத்ததோடு கதை ரீதியாகவும் இந்த படம் பாராட்டுகளை பெற்றது. திரை அரங்குகள் எங்கும் இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.
சிவகார்த்திகேயனுக்கு இந்த திரைப்படம் சிறந்த லாபம் தந்த படமாகவும் மாறியுள்ளது. தாய் கிழவி படத்தை தயாரிக்க ஆன செலவு வெறும் 10 கோடி ரூபாய் தான். ஆனால் இந்த படத்தின் உலகளாவிய வசூல் மட்டும் 82 கோடி ரூபாய். முதலீடு செய்த தொகையை விட 718% மிக பிரம்மாண்டமான லாபத்தை இந்த திரைப்படம் ஈட்டித் தந்துள்ளது.

அந்த வகையில் தயாரிப்பாளர் சிவகார்த்திகேயன் 10 கோடி ரூபாய் முதலீடு செய்து 82 கோடி ரூபாயாக திரும்ப பெற்றுள்ளார். 20026 ஆம் ஆண்டில் பெரிய பட்ஜெட் மற்றும் பெரும் எதிர்பார்ப்புகளுடன் வெளியான பல திரைப்படங்களுக்கு மத்தியில், மிகக் குறைந்த செலவில் எடுக்கப்பட்ட தாய் கிழவி திரைப்படம் தயாரிப்பு செலவை விட பல மடங்கு லாபம் தந்து பாக்ஸ் ஆபிஸில் புயலை கிளப்பியுள்ளது.
துரந்தர் 2 (Dhurandhar 2), பார்டர் 2 (Border 2), பெட்டி (Peddi), சூர்யாவின் பிளாக்பஸ்டர் படமான கருப்பு (Karuppu) போன்ற பெரிய படங்களை விடவும், சதவீத அடிப்படையில் (ROI - Return on Investment) தாய் கிழவி சிறிய பட்ஜெட் படமாக இருந்தும் தயாரிப்பாளர்களுக்கு அசுர லாபத்தை அள்ளிக் கொடுத்து திரையரங்குகளில் 75 நாட்களைக் கடந்து சாதனை படைத்துள்ளது. ஒட்டு மொத்த வசூலில் துரந்தர், கருப்பு உள்ளிட்டவை மாஸ் காட்டி இருந்தாலும் , செய்த முதலீடு அதற்கு கிடைத்த லாப சதவீதம் என்ற அடிப்படையில் தாய்கிழவி தான் நம்பர் 1 இடத்தில் இருக்கிறது.
குறைந்த முதலீட்டில் தரமான கதையம்சத்துடன் வரும் படங்கள் எப்போதுமே தமிழ் சினிமா ரசிகர்களால் கொண்டாடப்படும் என்பதற்கு தாய்கிழவி திரைப்படம் ஒரு சிறந்த உதாரணமாக மாறியுள்ளது. அந்த வகையில் திரைப்பட தயாரிப்பிலும் சிவகார்த்திகேயன் ஜொலிக்க தொடங்கியுள்ளார். ஓடிடி தளத்தில் வெளியான பின்னரும் தாய் கிழவி படத்திற்கு சாதகமான விமர்சனங்களே வந்துள்ளன. படத்தின் கதை, அது சொல்லப்பட்ட விதம், அதில் சொல்லப்பட்ட கருத்து ஆகியவை வெகுஜன மக்களை வெகுவாக ஈர்த்துள்ளது.


Click it and Unblock the Notifications

