டெல்லி: இன்று இந்தியா முழுக்க ஒரு போராட்டத் தீ பற்றி எரிந்து கொண்டு இருக்கிறது என்றால் அது குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதா தான்.
இஸ்லாமியர்கள் தவிர, மற்ற சில மதத்தவர்கள் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்க தேசம் ஆகிய நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வந்து குடியுரிமை பெற வழி வகுக்கும் சட்டத்தை நாட்டின் பல பகுதி மக்களும், தங்கள் எதிர்ப்பை பதிவு செய்து கொண்டிருக்கிறார்கள்.
மக்கள் இந்த சட்டத்துக்கு எதிராக போராடுவது போய், இப்போது முதலீட்டாளர்களும் இந்த சட்டத்தால் ஏற்படும் நஷ்டத்தையும், நம்பிக்கையின்மையையும் பேசத் தொடங்கி இருக்கிறார்கள்.
பயம்
இந்த குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதாவை கருத்தில் கொண்டு, இந்தியாவில் வியாபார ரீதியாக முதலீடுச் செய்ய இருக்கும் முதலாளிகளும் தங்கள் பணத்தை முதலீடு செய்ய பயப்படுகிறார்கள். அதற்கு ஒரு சிறந்த உதாரணம், ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகம் மற்றும் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் படித்து பட்டம் பெற்ற, வெஞ்சர் கேப்பிட்டலிஸ்ட் டிம் டிராப்பர் (Tim Draper).
யார் இவர்
உலகின் முன்னணி வெஞ்சர் கேப்பிட்டலிஸ்ட்களில் ஒருவர். ஸ்கைப், டெஸ்லா, சீனாவின் கூகுள் என்று சொல்லப்படும் பைடூ போன்ற நிறுவனங்களில் முதலீடு செய்தவர். இவர் கடந்த 2007-ம் ஆண்டு இந்தியாவின் Cleartrip, Komli Media and iYogi போன்ற நிறுவனங்களில் முதலீடு செய்தார். மொத்த முதலீட்டுத் தொகை சுமார் 70 மில்லியன் டாலர்.
வெளியேறிவிட்டார்
ஆனால் இந்தியாவில் இருக்கும் அதிகப்படியான ஊழல் மற்றும் இந்திய தொழில்முனைவோர்களிடம் இருக்கும் சில பிரச்னைகள் காரணமாக வெளி ஏறிவிட்டார். இந்தியாவில் இருந்த தன் இந்திய ஃபோர்ட்ஃபோலியோக்களை, 2013-ம் ஆண்டு, நியூ க்வெஸ்ட் கேப்பிட்டல் நிறுவனத்திடம் விற்று விட்டு இந்தியா என்கிற நாடே வேண்டாம் என வெளியேறினார்.
ரீ எண்ட்ரி
கடந்த 2017-ம் ஆண்டு தான் இந்தியாவில் மீண்டும் முதலீடு செய்யத் தொடங்கினார். இந்த முறை ப்ளூம் வெஞ்சர்ஸ் நிறுவனத்துடன் கூட்டு நிறுவனமாக மிக மெதுவாகவும் நிலையாகவும் களம் இறங்கினார்கள். இப்போது குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதாவைக் கொண்டு வந்ததால் தன் அதிருப்தியை வெளிப்படுத்தி இருக்கிறார்.
ட்விட்டர் கருத்து
டிம் ட்ராப்பர் தன் டிவிட்டர் பக்கத்தில் "இந்தியா ஒரு மதத்தை விடுத்து, இன்னொரு மதத்தை தேர்வு செய்கிறது. நான் இந்திய நிறுவனங்களில் மேற்கொண்டு முதலீடு செய்யலாமா வேண்டாமா என, இந்த அரசு முடிவுகள் (CAA) என்னை சிந்திக்க வைக்கின்றன" எனச் சொல்லி இருக்கிறார்.
கருத்து
தி வயர் செய்தி நிறுவனத்துக்கு, டிம் ட்ராப்பர் கொடுத்த பேட்டியில் "என்னைப் பொறுத்தவரை சுதந்திரம் என்பது பெரிய விஷயம். நிறைய விதிமுறைகளும், கட்டுப்பாடுகளும் நிறைய ஊழலுக்கு வழிவகுக்கும். இப்போதைய சூழலில், இந்தியாவில், ஒரு சார்பினர் மட்டுமே எப்போதும் நன்றாக நடத்தப்படுவார்கள். எனவே நெறிமுறைகளில் நியாயமற்ற தன்மை நிலவுகிறது" எனச் சொல்லி இருக்கிறார்.
மத நல்லிணக்கம்
மேலும் மத நல்லிணக்கம் மற்றும் சமூக ஒருங்கிணைப்பு போன்ற விஷயங்கள் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கியமா எனக் கேட்ட போது "என்னைப் பொறுத்த வரை மக்கள் மக்களாகத் தான் இருக்கிறார்கள். அவர்கள் எந்த நம்பிக்கையை (மதத்தை) பின்பற்றுகிறார்கள் என்பது முக்கியமல்ல" என பதில் கொடுத்து இருக்கிறார்.
பொருளாதார வளர்ச்சி
ஏற்கனவே இந்தியாவில் பொருளாதார வளர்ச்சி மோசமாக இருக்கிறது. பணவீக்கம், தொழில் துறை உற்பத்தி, ஜிடிபி, வங்கி வாரா கடன்கள் என எல்லாமே நெகட்டிவ்வாக இருக்கும் நிலையில், தற்போது இது போன்ற முதலீடுகளும் அடி வாங்கத் தொடங்கினால் என்ன ஆகும்..? மேலும் நிலைமை மோசமடையத் தானே செய்யும். அரசு இதை கொஞ்சம் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.