கொரோனா வைரஸால், இந்தியாவில் பாதிக்கப்படுபவர்களின் எண்னிக்கை தாறுமாறாக அதிகரித்துக் கொண்டு இருக்கும் இந்த நேரத்திலும், மத்திய மற்றும் மாநில அரசுகள், தங்கள் லாக் டவுன்களை மெல்ல மெல்ல தளர்த்திக் கொண்டு இருக்கிறார்கள்.
இது நாள் வரை, நோயைக் கட்டுப்படுத்த அரசு அறிவித்த லாக் டவுன்கள், நோயை மட்டும் கட்டுப்படுத்தவில்லை, பொருளாதார வளர்ச்சியையும் தடுத்து நிறுத்திக் கொண்டு இருந்தது.
இந்த லாக் டவுன் தளர்வுகளினால், மக்கள் பழைய படி வேலைக்குச் செல்லத் தொடங்கி இருக்கிறார்கள். இதனால் இந்தியாவில் வேலை இல்லா திண்டாட்டம் கணிசமாக குறைந்து இருக்கிறது.
வேலை இல்லா திண்டாட்டம்
கடந்த ஏப்ரல் 2020-ல் சுமாராக 23.5 சதவிகிதமாக இருந்த வேலை இல்லா திண்டாட்டம், கடந்த ஜூலை மாதம் 7.4 சதவிகிதமாக சரிந்து இருக்கிறது. சரி வேலை கிடைத்துவிட்டது என்பதால் எல்லாம் பழைய நிலைக்கு வந்துவிட்டதா? என்றால் இல்லை. இன்னும் என்ன தான் பிரச்சனை? என்கிறீர்களா... வாருங்கள் பார்ப்போம்.
சம்பள உயர்வு
இந்த 2020 - 21 நிதி ஆண்டில் சராசரி சம்பளம் 3.6 % தான் அதிகரித்து இருக்கிறது என Deloitte Touche Tohmatsu India LLP-ன் தரவுகள் சொல்கின்றன. கடந்த ஆண்டில் இது 8.6 சதவிகிதமாக இருந்ததாம். இந்த சர்வேயில் பங்கெடுத்த மொத்த கம்பெனிகளில் 23 சதவிகித கம்பெனிகள் மட்டுமே, அடுத்த ஆண்டில் சம்பள உயர்வு கொடுக்க திட்டமிட்டுக் கொண்டு இருக்கிறார்கள் என ஒரு அதிர்ச்சிகரமான தகவலைச் சொல்லி இருக்கிறது.
கூலிச் செலவுகள்
ஜூன் 2019- காலாண்டில், கம்பெனிகள் கூலி (Wages) கொடுக்க செய்த செலவுகளை, ஜூன் 2020 காலாண்டில் செய்த செலவுகளோடு ஒப்பிட்டால், வெறும் 2.9 % தான்அதிகரித்து இருக்கிறதாம். இது கடந்த 18 ஆண்டுகளில் காணப்படும் மிகக் குறைந்த வளர்ச்சி என்கிறது மும்பையைச் சேர்ந்த Centre for Monitoring Indian Economy என்கிற அமைப்பு. இது நம்மை ஆச்சர்யத்தில் ஆழ்த்தும் மற்றொரு முக்கிய செய்தி.
உற்பத்தித் துறையில் பலத்த அடி
குறிப்பாக, இந்தியாவின் உற்பத்தி துறையில், கொடுக்கப்படும் கூலி 7 % சரிந்து இருக்கிறது என்கிறார் சி எம் இ ஐ அமைப்பின் நிர்வாக இயக்குநர் மகேஷ் வியாஸ். இப்போதைக்கு கொடுக்கப்படும் கூலி, கொரோனாவுக்கு முன்பு கொடுக்கப்பட்டுக் கொண்டு இருந்த அளவுக்கு அதிகரிக்கும் எனத் தோன்றவில்லை என்கிறார் மகேஷ் வியாஸ்.
நுகர்வு பிரச்சனை
இந்தியாவின் ஜிடிபியில் நுகர்வு தான் 60 சதவிகிதம் பங்களிக்கிறது. இந்தியாவில் தற்போது தொழிலாளர்களுக்கு கொடுக்கப்படும் கூலி அடி வாங்கினால், அவர்கள் நுகர்வதும் கணிசமாக குறையும். இது ஜிடிபி சரிவில் எதிரொலிக்கலாம். இந்த ஆண்டு இந்தியப் பொருளாதாரம் 4.5 % வீழ்ச்சி காணும் என சர்வதேச பன்னாட்டு நிதியம் கணித்து இருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications