நீண்ட காலமாக ஃபிக்சட் டெபாசிட் திட்டங்கள் மக்கள் மத்தியில் நம்பிக்கை வாய்ந்ததாக இருந்து வருகிறது. கையில் பணம் சேர்ந்தால் உடனே FD-யில் போட வேண்டும் என்று நினைப்பவர்கள் நம் நாட்டில் அதிகம். ஏனென்றால் இந்தத் திட்டத்தில் ரிஸ்க் இல்லை. வங்கிகள் சொல்லும் வட்டி, சொன்ன நேரத்திற்கு அக்கவுண்டில் வரவு வைக்கப்படும். இதனால் வங்கிகள் போட்டி போட்டுக் கொண்டு FD திட்டங்களை அறிமுகம் செய்து வருகின்றன. பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகள் மட்டுமின்றி தற்போது ஸ்மால் பைனான்ஸ் பேங்குகளும் முதலீட்டாளர்களை கவரும் வகையில் 8 சதவீதத்திற்கும் அதிகமான வட்டியை அள்ளி வழங்குகின்றன.
FD என்று சொன்னவுடன் பலரும் பொதுத்துறை வங்கிகள் அல்லது பிரைவேட் வங்கிகளை நோக்கி நகர்வார்கள். ஆனால் ஒரு சில ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்குகளும் சிறந்த வட்டி விகிதங்களை மக்களுக்கு வழங்கி வருகிறது. 2026-ஆம் ஆண்டில் ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்குகள் வழங்கும் வட்டி விகிதங்களைப் பார்ப்போம்.
ஜனா ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க் வருடத்திற்கு 8.11 சதவீத வட்டி வழங்குகிறது. சூரியடே ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க் மற்றும் உத்கர்ஷ் ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க் ஆகியவை ஒரு சில கால அளவுக்கு 8.10 சதவீதம் வரை வட்டி வழங்குகின்றன.
இந்த வட்டி விகிதங்கள் நம் ஊரில் இருக்கும் பொதுத்துறை மற்றும் முன்னணி பிரைவேட் பேங்குகளை விட சற்று அதிகம் தான். பந்தன் பேங்க் தற்போது அதிகபட்சமாக 7.25% வட்டியை வழங்குகிறது. ஆர்பிஎல் பேங்க் 7.20 சதவீதமும், சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா அதிகபட்சமாக ரூ.6.65 சதவீதமும் வட்டி வழங்குகிறது.

எந்தெந்த கால அளவுக்கு எவ்வளவு வட்டி? என்பதைப் பார்ப்போம். ஜனா ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க் 3 வருட பிக்சட் டெபாசிட் திட்டத்திற்கு 7.50 சதவீதமும், 5 வருட பிக்சட் திட்டத்திற்கு 7.77 சதவீதமும் வழங்குகிறது. சூரியடே ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க் 1 வருட டெபாசிட் மற்றும் 3 வருட டெபாசிட்டுக்கு 7.25 சதவீத வட்டி வழங்குகிறது. உஜ்ஜிவன் ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க் 1 வருட டெபாசிட்டுக்கு 7.25 சதவீதமும், 3 வருடம் மற்றும் 5 வருட டெபாசிட்டுக்கு 7.20 சதவீதமும் வட்டி வழங்குகிறது.
அதுவே மூத்த குடிமக்களாக இருந்தால் அவர்களுக்கு கூடுதலாக 0.50 சதவீத வட்டி கிடைக்கும். ESAF ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க் 8.50 சதவீதம் என்ற அதிகபட்ச வட்டி வழங்குகிறது, சூரியடே ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க் 8.25% வட்டி வழங்குகிறது. பந்தன் பேங்க், எஸ் பேங்க் போன்ற முன்னணி வங்கிகளும் மூத்த குடிமக்களுக்கு 0.50 சதவீதத்திலிருந்து 0.75 சதவீத கூடுதல் வட்டியுடன் FD திட்டங்களை வழங்குகின்றன.
பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகளைப் போலவே சிறு நிதி நிறுவனங்களும் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு அதிகபட்ச வட்டியை வழங்க தொடங்கியுள்ளன. எனவே முதலீடு செய்ய நினைப்பவர்கள் உங்களுடைய நிதி ஆலோசகரை அணுகி ஆலோசனை பெற்று சுய விருப்பத்தின் பேரில் முதலீடு செய்யவும். இந்தப் பதிவு வெறும் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே. இதை வைத்து நாங்கள் உங்களை முதலீட்டு முடிவுகள் எடுக்கச் சொல்லவில்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள்!


Click it and Unblock the Notifications