தீபாவளி பண்டிகைக்கு முன் ஸ்மார்ட்போன் விற்பனை இந்தியா முழுவதும் சிறப்பாக இருந்த நிலையில், பண்டிகை காலச் சிறப்புத் தள்ளுபடி வர்த்தகத்தில் அதிகளவிலான ஸ்மார்ட்போன்கள் விற்பனை இருக்கும் என அனைத்துத் தரப்பு மக்களும், வர்த்தகர்களும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஸ்மார்ட்போன் விற்பனையாளர்கள் பெருத்த ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
லாக்டவுன் காலத்தில் பிற நாடுகளைக் காட்டிலும் இந்தியாவில் ஆன்லைன் கல்வி, Work from home, பண்டிகை எனப் பல்வேறு காரணங்களுக்காக ஸ்மார்ட்போன் விற்பனை சிறப்பாக இருந்தது அனைவருக்கும் தெரியும்.
இந்த நிலையில் இந்திய மக்களின் முக்கியப் பண்டிகை காலமான தீபாவளி சிறப்புத் தள்ளுபடியில் ஸ்மார்ட்போன் விற்பனை குறைந்துள்ளது அதிர்ச்சி அளித்துள்ளது.
25 சதவீதம் சரிவு
தீபாவளி பண்டிகை வரையில் ஸ்மார்ட்போன் விற்பனை சிறப்பாக இருந்த நிலையில், பண்டிகைக்குப் பின் பெரிய அளவிலான வர்த்தகப் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இதனால் நவம்பர் மாதத்தில் இந்தியச் சந்தையில் ஸ்மார்ட்போன் டிமாண்ட் அளவு 20 முதல் 25 சதவீதம் வரையில் சரிந்துள்ளது.
ஆப்லைன் ரீடைல்
இதன் மூலம் இந்திய ஆப்லைன் ரீடைல் அமைப்பு இந்தத் தீபாவளி பண்டிகையில் சுமார் 50 சதவீத வர்த்தகம் பாதிக்கப்பட்டு உள்ள காரணத்தால் கருப்புத் தீபாவளியாக அறிவித்துள்ளனர்.
வர்த்தகம்
ஒவ்வொரு வருடமும் தீபாவளி பண்டிகைக்குப் பின் இந்திய சந்தையில் வர்த்தகம் பெரிய அளவில் சரிவது இயல்பு தான், ஆனால் இந்த முறை சரிவின் அளவு பெரியதாக இருக்கும் காரணத்தால் அடுத்த வரும் மாதங்களின் சரிவின் அளவு குறித்த அச்சம் வர்த்தகச் சந்தையில் அதிகரித்துள்ளது.
தீபாவளி மாதமான நவம்பர் மாதத்திலேயே ஸ்மார்ட்போன் விற்பனை 20 முதல் 25 சதவீதம் சரிந்துள்ளது என்றால் இனி வரும் காலக்கட்டத்தில் இது எப்படி இருக்கும் என்பது முக்கியக் கேள்வியாக உள்ளது.
முக்கிய நிறுவனங்கள்
இந்தியாவில் சியோமி, விவோ, ரியல்மி ஆகிய முன்னணி நிறுவனங்கள் அனைத்தும் தீபாவளி விற்பனையில் வரலாறு காணாத உச்சத்தை அடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. இதேபோல் ஆப்பிள் நிறுவனம் எப்போதும் இல்லாத வகையில் சந்தைக்கு இந்த வருட தீபாவளியின் போது அதிகப் போன்களை விற்பனை சந்தைக்கு அனுப்பியுள்ளது.
ஆன்லைன் சந்தை
இந்த வருடம் ஆப்லைன் ரீடைல் சந்தையில் வர்த்தகம் 50 சதவீதம் குறைந்ததிற்கு முக்கியக் காரணம் அமேசான், பிளிப்கார்ட் போன் ஈகாமர்ஸ் நிறுவனங்களும், வங்கிகளும் தான். வங்கிகள் அனைத்து ஈகாமர்ஸ் நிறுவனங்களுக்கும் 10 சதவீதம் கேஷ்பே கொடுத்துள்ளது என இந்திய ஆப்லைன் ரீடைல் அமைப்பு தெரிவித்துள்ளது.