குளிர்பான நிறுவனங்களுக்கு இடையே போட்டி இருந்தாலும் தம்ஸ் அப் நிறுவனம் கடந்த சில ஆண்டுகளாக மிகப்பெரிய வளர்ச்சியை பெற்று வருகிறது.
அதன் காரணமாக தம்ஸ் அப் நிறுவனத்தின் பங்குகள் உயர்ந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில் தம்ஸ் அப் நிறுவனத்தின் வளர்ச்சி 20 சதவீதம் அதிகரித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
20% வளர்ச்சி
ரூ.50,000 கோடி மதிப்பில் குளிர்பான சந்தையில் முதலிடம் வகிக்கும் கோலா பிராண்டான தம்ஸ் அப், இதுவரை இல்லாத வகையில் 20% வளர்ச்சியை எட்டியுள்ளது,
இரட்டை இலக்கத்தில் வளர்ச்சி
கோலா இந்தியா மற்றும் தென்மேற்கு ஆசியாவின் சந்தைப்படுத்தல் துணைத் தலைவர் அர்னாப் ராய் கூறுகையில், தம்ஸ் அப் நிறுவனத்தின் வளர்ச்சி ஆண்டுக்கு ஆண்டு இரட்டை இலக்கத்தில் வளர்ந்துள்ளது என்றும், சில குறிப்பிட்ட பிராண்ட் பங்குகள் குறித்து எங்களால் கருத்து தெரிவிக்க முடியாது என்றாலும், கடந்த 18 மாதங்களில் தம்ஸ் அப் நிறுவனத்தின் பங்குகளில் முன்னணியில் உள்ளது என்றார்.
முன்னிலையில் தம்ஸ் அப்
சமூக வர்ணனையாளரும் பிராண்ட் நிபுணருமான சந்தோஷ் தேசாய் இதுகுறித்து கூறுகையில், 'பெப்சி மற்றும் கோகோ கோலா உள்ளிட்ட உலகளாவிய பிராண்டுகளை விட, தம்ஸ் அப் குளிர்பானம் தொடர்ந்து முன்னிலையில் உள்ளது என்று கூறியுள்ளார்.
தனித்துவமான பிராண்ட்
தம்ஸ் அப் ஒரு தனித்துவமான பிராண்ட் என்றும், அதன் சுவை இந்திய மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது என்றும், வலுவான நுகர்வோர் தளத்தை கொண்டுள்ளது என்றும் சந்தோஷ் தேசாய் மேலும் கூறினார்.
நான்கில் மூன்று கோலா பிராண்டுகள்
இந்தியாவில் உள்ள முதல் நான்கு குளிர்பான பிராண்டுகளில், மூன்று கோகோ கோலா நிறுவன பிராண்டுகள் என்றும், அவை தம்ஸ் அப், ஸ்ப்ரைட் மற்றும் கோகோ கோலா என்றும் சந்தோஷ் தேசாய் கூறினார்.
$1 பில்லியன் விற்பனை
2021 ஆம் ஆண்டில் இந்தியாவில் தம்ஸ் அப் விற்பனை $1 பில்லியனைத் தாண்டியது என கோகோ-கோலா உலகளாவிய தலைமை நிர்வாகி ஜேம்ஸ் குயின்சி தெரிவித்தார். இந்த ஆண்டு இந்த தொகை இன்னும் அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது.