உலகின் மிகப்பெரிய நிறுவனங்களில் ஒன்றாக இருக்கும் ஜப்பான் சாப்ட்பேங்க் உலகளவில் இருக்கும் ஸ்டார்ட்அப் மற்றும் வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் டெக் நிறுவனங்களில் முதலீடு செய்வதற்காக விஷன் பண்ட் என்ற அமைப்பை வைத்துள்ளது.
இந்த விஷன் பண்ட் நிறுவனத்தின் மூலம் இந்தியாவில் இன்று யூனிகார்ன் ஆக அறியப்படும் பல நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளது. இதுமட்டும் அல்லாமல் அமெரிக்கா, சிங்கப்பூர், சீனா எனப் பல நாடுகளில் இருக்கும் நிறுவனங்களிலும் முதலீடு செய்து பெரிய அளவிலான வளர்ச்சியை அடைந்துள்ளது.
இந்த நிலையில் விஷன் பண்ட் பிரிவில் இருந்து அதிகப்படியான ஊழியர்களைப் பணிநீக்கம் செய்வதாக அறிவித்துள்ளது.
கடனுக்கான வட்டி
உலகம் முழுவதும் இருக்கும் மத்திய வங்கிகள் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த அதிகளவில் பென்ச்மார்க் வட்டி விகிதத்தை அதிகரித்து வருகிறது. இதனால் நிறுவனங்கள், முதலீட்டு நிறுவனங்கள் வங்கிகளில் வாங்கிய கடனுக்கான வட்டி வேகமாக வேகமாக அதிகரித்து வருகிறது.
சாப்ட்பேங்க்
இப்படியிருக்கும் சூழ்நிலையில் சாப்ட்பேங்க் பணத்தைச் சேமிக்கவும், செலவுகளைக் குறைக்கவும் விஷன் பண்ட் மற்றும் சாப்ட்பேங் குரூப் இண்டர்நேஷ்னல் ஆகிய நிறுவனங்களில் சுமார் 150 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யத் திட்டமிட்டு உள்ளது. இது இவ்விரு பிரிவின் மொத்த ஊழியர்கள் எண்ணிக்கையில் 30 சதவீதமாகும்.
150 ஊழியர்கள் பணிநீக்கம்
விஷன் பண்ட் மற்றும் சாப்ட்பேங் குரூப் இண்டர்நேஷ்னல் ஆகிய இரு பிரிவுகளில் இருக்கும் அமெரிக்கா, பிரிட்டன், சீனா ஆகிய நாடுகளில் இருக்கும் 150 ஊழியர்களுக்கும் நோட்டீஸ் கொடுக்கப்பட்டு உள்ளது. இதனால் அடுத்தச் சில வாரத்தில் இந்த 150 ஊழியர்களும் பணியில் இருந்து முழுமையாக நீக்கப்படுவார்கள்.
50 பில்லியன் டாலர் நஷ்டம்
இந்தப் பணிநீக்கத்திற்கு முக்கியமான காரணம் கடந்த 6 மாதத்தில் விஷன் பண்ட் முதலீட்டில் சுமார் 50 பில்லியன் டாலர் அளவிலான நஷ்டம் ஏற்பட்டு உள்ளது. குறிப்பாக டெக் நிறுவனங்களில் செய்த முதலீடுகள் பெரிய நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் முதலீட்டின் வேகத்தையும் அளவையும் குறைத்த சாப்ட்பேங்க் சிஇஓ Masayoshi Son தற்போது செலவுகளைக் குறைக்கும் விதமாக ஊழியர்களைப் பணிநீக்கம் செய்துள்ளார்.
முக்கிய முதலீடுகள்
சாப்ட்பேங்க் இந்தியாவில் மட்டும் பேடிஎம், PayTm, Unacademy, Delhivery, ஓலா, லென்ஸ்கார்ட், ஸ்விக்கி, பிளிப்கார்ட், கார்ஸ்24 ஆகிய நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளது.