இந்தியர்களுக்கு சாப்ட்வேர் சார்ந்த படிப்பும், MBA படிப்பும் மிகவும் பிடித்த ஒன்று. இந்த இரண்டில் ஏதேனும் ஒரு டிகிரியை படித்துவிட்டால், லைஃப்-இல் செட்டில் ஆகிவிடலாம் என்று சொல்லும் பெற்றோர்களே அதிகம். அப்படி இருக்கையில் இனி வரும் காலங்களில் இந்த 2 துறையிலும் வேலை வாய்ப்புகள் குறைவாகவே இருக்கும் என்று எச்சரித்துள்ளார் இந்தியாவின் தலைமை பொருளாதார ஆலோசகரான பி.ஆனந்த் நாகேஸ்வரன். ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் வேலைவாய்ப்பு சந்தையில் பல மாற்றங்கள் நிகழும். எனவே இளைஞர்கள் தங்களை, அதற்கு தகுந்தார் போல் தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு ஆனந்த நாகேஸ்வரன் அளித்த பேட்டியில், இந்தியாவில் சாஃப்ட்வேர் துறை மற்றும் கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்புகள் ஒரு காலத்தில் மிகப்பெரிய வளர்ச்சிக்கு வித்திட்டன. ஆனால் இப்போது சூழல் அப்படி இல்லை. AI தொழில்நுட்பத்தால் எளிதில் செய்யக்கூடிய சாப்ட்வேர் வேலைகளும், எம்பிஏ பணிகளும் இனிவரும் காலத்தில் குறையும். எனவே இளைஞர்கள் ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் தொழில்நுட்பம் வந்தாலும் மனிதர்களை மாற்ற முடியாத துறைகளை நோக்கி நகர வேண்டும் என்று எச்சரித்துள்ளார்.
தற்போது இந்தியாவில் நிலவும் 2 முக்கியப் பிரச்சினைகள் குறித்தும் ஆனந்த் பேசியுள்ளார். ஒன்று அன்எம்ப்ளாய்மெண்ட் என்று சொல்லப்படுகிற வேலைவாய்ப்பின்மை. நன்றாக படித்துவிட்டு ஒரு நிறுவனத்தில் பணி புரியும் அளவிற்கு தகுதி இருந்தும் வேலை கிடைக்காமல் இருப்பது. மற்றொன்று அன்எம்ப்ளாயபிலிட்டி.. அதாவது பணியில் சேர்வதற்கான ஸ்கில் அல்லது தகுதி இல்லாமல் இருப்பது. பட்டப்படிப்பை எல்லாம் முடித்திருந்தாலும் நிறுவனங்கள் எதிர்பார்க்கும் ஸ்கில் இல்லாமல் இருப்பது. இந்த இரண்டுமே பிரச்சனைதான்.

முன்பெல்லாம் ஒவ்வொரு துறையிலும் மனிதர்கள் அதிகமாக இருந்தனர். ஆனால் இப்போது அப்படி இல்லை. நவீன இயந்திரங்கள் மற்றும் கணினி பயன்பாட்டின் காரணமாக மனிதத் தலையீடு குறைந்து வருகிறது. மேற்கத்திய நாடுகளில் எல்லாம் இன்னும் அதிகமான அதிநவீன தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இப்படிப்பட்ட சூழலில் அந்தந்த நாடுகள் தேவைப்படும் இயந்திரங்களை வாங்குவதற்கு அதிக செலவு செய்து வருகிறது.
இந்தியா இதே முறையை பின்பற்றவும் முடியாது .ஏனெனில் இந்தியாவில் மக்கள் தொகை அதிகம். அதற்காக உலக நாடுகளில் இருந்து பொருட்களை வாங்கிக் கொண்டு நவீன இயந்திரங்களை பயன்படுத்தாமலும் இருக்க முடியாது. ஒரு சில விஷயங்களுக்கு நாமும் உலக நாடுகளைப் போல இயந்திரமயமாக்கலை கொண்டு வந்து தான் ஆக வேண்டும்.
அப்படியானால் வேலைவாய்ப்பிற்கு என்னதான் வழி? என்று ஆனந்திடம் கேட்டபோது.. அதற்கு அவர் தொழில்நுட்பத் துறைகளில் வேலை வாய்ப்புகள் குறைந்தாலும் மனித உழைப்பு மட்டுமே தேவைப்படும் துறைகளை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று பதிலளித்தார். அதற்கு உதாரணமாக ஆனந்த் முதியோர் பராமரிப்பு, குழந்தைகள் பராமரிப்பு, சமையல் கலை, மருத்துவம், ஸ்போர்ட்ஸ் எஜுகேஷன், குழந்தைகளுக்கான கவுன்சிலிங் போன்ற துறைகளைக் கூறியுள்ளார்.
இதுபோன்ற துறைகளுக்கெல்லாம் கண்டிப்பாக பயிற்சி பெற்ற பணியாளர்கள் தேவைப்படுவார்கள். இந்தத் துறைகளுக்குள் ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் தொழில்நுட்பம் ஒருபோதும் நுழையாது.
இந்தியாவின் வேலைவாய்ப்புகளைப் பற்றிய மக்களின் மனநிலை குறித்தும் ஆனந்த் ஒரு சில கருத்துகளைப் பகிர்ந்துள்ளார். இங்கு AC-யில் அமர்ந்து கொண்டு ஐடி வேலை செய்பவர்களையும், எம்பிஏ படித்துவிட்டு மேனேஜர் லெவல் போஸ்டில் இருப்பவர்களுக்கும் கிடைக்கும் மரியாதை.. வெல்டர்கள், பிளம்பர்கள், எலக்ட்ரிசியன்கள் போன்றவர்களுக்கு கிடைப்பதில்லை. ஆனால் ஜப்பான், சுவிட்சர்லாந்து, சைனா,கொரியா போன்ற நாடுகளை எடுத்துக் கொள்ளுங்கள்..
அங்கு பள்ளிப் படிப்பை முடித்த உடனே 50 சதவீதத்திற்கும் அதிகமான மாணவர்கள் கல்லூரிக்கு உடனே செல்லாமல் ட்ரைனிங் சென்று ஏதேனும் ஒரு கைத்தொழிலை கற்றுக் கொள்கிறார்கள். அங்குள்ள மக்கள் ஒரு பிளம்பர் அல்லது வெல்டர் செய்யும் வேலையை ஒரு சாஃப்ட்வேர் இன்ஜினியர் செய்யும் வேலைக்கு இணையாகவே மதிக்கின்றனர். அதே அளவுக்கு அவர்களுக்கு சம்பளமும், சமூக அந்தஸ்தும் கிடைக்கிறது.
இந்த நிலை கண்டிப்பாக மாற வேண்டும். ஒரு காலத்தில் சாப்ட்வேர் இன்ஜினியரிங் படிப்பும் கம்ப்யூட்டர் சயின்ஸ், எம்பிஏ படிப்பும் நமக்கு நல்ல வேலை வாய்ப்புகளை வழங்கியது. ஆனால் அந்த காலம் முடிந்துவிட்டது. இனி கைத்தொழில் மற்றும் பிற திறன்கள் தான் அதிகம் தேவைப்படும். ஏனெனில் ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் தொழில்நுட்பத்தால் இவற்றை கண்டிப்பாக ஒன்றும் செய்ய முடியாது என்று கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications