தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முதல் முறை வாக்காளர்கள் தொடங்கி மூத்த குடிமக்கள் வரை போட்டி போட்டு கொண்டு வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர்.காலை 7 மணி முதலே நீண்ட வரிசையில் நின்று மக்கள் வாக்களிப்பதை காண முடிகிறது. அந்த வகையில் வெயிலையும் பொருட்படுத்தாமல் மக்கள் ஜனநாயக கடமையை ஆற்ற ஆர்வம் காட்டுவது உறுதியாகியுள்ளது. அதே வேளையில் கள்ள ஓட்டு போடப்படுவதாகவும் புகார் எழுந்துள்ளது.
இவ்வாறு தன்னுடைய வாக்கினை வேறு ஒருவர் போட்டு விட்டார், அது கள்ள வாக்காகிவிட்டது என்பவர்கள் உடனடியாக இப்படி புகார் தந்தால் கள்ள ஓட்டும் தடுக்கப்படும் அவரது வாக்கும் முறைப்படி செலுத்த வாய்ப்பு கிடைக்கும். அது எப்படி என்பதை தெரிந்து கொள்ளலாம்.

நீங்கள் வாக்குச்சாவ்டிக்கு செல்கிறீர்கள் அப்போது உங்கள் வாக்கு ஏற்கனவே பதிவாகிவிட்டது என கூறுகிறார்கள் என்றால் உங்கள் வாக்கு கள்ள வாக்கானது என பொருள். இது நம் ஜனநாயகத்திற்கே பேராபத்து. இதனால் வாக்காளர் மனமுடைந்து விட கூடாது. இதனை சாதாரணமாக விட்டு விடக் கூடாது. உடனடியாக தேர்தல் பூத் அதிகாரியிடம் தெரிவிக்க வேண்டும்.
தேர்தல் பூத் அதிகாரிகளிடம் தெரிவிக்கும் போது அவர்கள் பரிசோதனை செய்து உங்கள் ஓட்டு ஏற்கனவே போடப்பட்டு உறுதி செய்து கொண்டு உங்களுக்கு Tendered Ballot Paper, Form 17B என்ற படிவத்தை வழங்குவார்கள். அதனை நிரப்பி, சமர்ப்பிக்க வேண்டும். மேலும் உங்கள் அடையாளம் உறுதிப்படுத்தப்பட்டதும், நீங்கள் வாக்களிக்கலாம். இதன்படி நீங்கள் செலுத்தும் வாக்கானது, Tender Vote ஆக கருதப்படும்.
அதாவது நீங்கள் வாக்குப்பதிவு இயந்திரத்தில் வாக்களிக்க முடியாது. வாக்குச்சீடு தரப்படும் அதில் உங்களின் விருப்பமான வேட்பாளர் மீது முத்திரை குத்தி உங்கள் வாக்கினை வாக்குப்பெட்டியில் போடலாம். இதனை முதல் மற்றும் இரண்டாம் இடம் பிடிக்கும் வேட்பாளர்களின் வாக்கு எண்ணிக்கையைப் பொறுத்தே எண்ணுவார்கள்.
அதாவது, முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் வேட்பாளர்களின் வாக்கு வித்தியாசம், Tender Vote-ஐ விடக் குறைவாக இருந்தால் மட்டுமே உங்கள் வாக்கை தேர்தல் அதிகாரிகள் எண்ணுவார்கள். எதிர்க்கட்சி தரப்பில் இருந்து முறைகேடு வழக்குப் பதிவு செய்தாலும், உங்களுடைய Tender Vote எண்ணப்படும். வாக்கு வித்தியாசம் குறைவாக இருக்கும் பட்சத்தில் ஒரு தொகுதியின் வெற்றியை தீர்மானிக்கும் முக்கிய ஓட்டாக Tender Vote இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications

