முயற்சியும் பயிற்சியும் இருந்தால் வாழ்வில் எந்த தடைகள் வந்தாலும் அதை மீறி ஜெயித்து விடலாம். இங்கு யாருக்குமே பிரச்சனைகள் இல்லாமல் இல்லை. அதை தகர்த்தெறிந்து தங்களுடைய வேலையில் வெற்றி கண்டவர்களே அதிகம். ஜீரோவில் தொடங்கி இன்று கோடிகளில் புரளும் பலர் நாமக்கு உதாரணமாய் இருக்கின்றனர். அப்படிதான் பரம்பரை சொத்து இல்லாமல் வாழ்க்கையைத் தொடங்கி, இன்று சிகரத்தைத் தொட்ட ஒருவரைப் பற்றி பார்க்கவுள்ளோம்.
அபிஷேக் வைஷ்யா என்பவர் மும்பையின் விக்ரோலி பகுதியில் உள்ள ஒரு சிறிய வீட்டில் வசித்து வந்தார். இவருடைய வீட்டின் மொத்த அளவே வெறும் 150 சதுர அடி தான். அதிலும் ஒரு குட்டி அறையில் அபிஷேக் மற்றும் அவருடைய குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் தங்கியிருந்தனர். அபிஷேக்கிற்கு எந்தப் பூர்விக சொத்தும் கிடையாது.
அபிஷேக்கின் தந்தை காய்கறி விற்று குடும்பத்தை நடத்தி வந்தார். வியாபாரிகளுக்கு வருமானம் எப்படி இருக்கும் என்பது உங்களுக்கே தெரியும். ஒரு நேரம் வருமானம் வரும். ஒரு நேரம் வரவே வராது. சில நாள் 200 ரூபாய் கிடைக்கும், ஒரு சில நாட்களில் 1000 ரூபாய் வரை கிடைக்கும். இதனால் மாதத்திற்கு ரூ.25,000 முதல் ரூ.30,000 கிடைப்பதே பெரிய விஷயமாக இருந்திருக்கிறது.
பள்ளிப் பருவத்தில் அதிகாலையில் தனது தந்தையுடன் மார்க்கெட் சென்று விடுவார். அங்கு வண்டியை தள்ளுவது, சரக்குகளை அடுக்கி வைப்பது என அனைத்து வேலைகளையும் செய்திருக்கிறார். கல்லூரிக்கு சென்றும் அபிஷேக் தனது தந்தைக்கு உதவுவதை நிறுத்தவில்லை. இதில் சுவாரசியம் என்ன தெரியுமா? அவர் கூடுதலாக சார்டர்ட் அக்கவுண்டன்ட் பயிற்சியும் பெற்று வந்தார். CA படிப்பிற்கு நிறைய முயற்சி செய்ய வேண்டும், அதிக நேரம் படிக்க வேண்டும். விடியற்காலையில் தந்தைக்கு உதவியாக மார்க்கெட்டிற்கு செல்வார். பிறகு கல்லூரியை முடித்துவிட்டு நள்ளிரவு வரை ஓய்வில்லாமல் படிப்பார்.

CA பரீட்சைக்கு வெறும் 3 முதல் 4 மாதங்கள் இருந்தபோது இரவு பகல் பாராமல் ஒவ்வொரு நாளும் 16 முதல் 18 மணி நேரம் வரை படித்தார். விரைவில் பட்டமும் பெற்றார். பட்டம் பெற்ற கையோடு அபிஷேக்கிற்கு ஓமனில் வேலை கிடைத்தது. அங்கு சுமார் 6 ஆண்டுகள் கடினமாக உழைத்தார். முதலில் ரூ.1.5 லட்சம் சம்பளம் வாங்கிய அபிஷேக் தனது விடா முயற்சியால் ரூ.2.5 லட்சம் வரை சம்பளம் வாங்கினார். பிறகு தன்னுடைய வேலையை ராஜினாமா செய்துவிட்டு ஓமனில் சொந்தமாக சாட்டர்ட் அக்கவுண்டன்ட் நிறுவனத்தை தொடங்கினார்.
இன்று ஓமன் மற்றும் UAE முழுவதும் இவருக்கு வாடிக்கையாளர்கள் இருக்கின்றனர். இதற்கு கூடுதலாக ஓமனில் ஒரு கிளவுட் கிட்சன் பிசினஸையும் வெற்றிகரமாக நடத்தி வருகிறார். தனது கடின உழைப்பால் அபிஷேக், வெறும் 21 வயதிலேயே மும்பைக்கு அருகில் உள்ள தானே பகுதியில் ரூ.1 கோடி மதிப்புள்ள 2BHK வீட்டை தனது தந்தைக்காக வாங்கிக் கொடுத்துள்ளார்.
இது குறித்து youtube வீடியோவில் பேசிய அபிஷேக், "என் குடும்பம் நல்ல இடத்தில் வாழ வேண்டும் என்று ஆசை பட்டேன். வருமானம் சரிவர இல்லை என்றாலும் எனது தந்தை எனக்கு சிறந்த யைக் கல்வியைக் கொடுத்துள்ளார். அதனால் கடுமையாக முயற்சி செய்தேன். என் தந்தைக்கு உதவி கொண்டே வெகு நேரம் படித்தேன். நான் போட்ட முயற்சிக்கு இன்று வாழ்க்கை எனக்கு வாரி வாரி கொடுத்திருக்கிறது. நீங்களும் கடவுள் மீது நம்பிக்கை வையுங்கள். உங்களை முழுமையாக நம்புங்கள். நேர்மை மற்றும் விடா முயற்சியை ஒருபோதும் கைவிடாதீர்கள். மற்ற அனைத்தையும் கடவுளிடம் விட்டுவிடுங்கள். அவர் பார்த்துக்கொள்வார். நாம் நினைப்பதை விட நமக்கு சிறந்த ஒன்றை கண்டிப்பாக வைத்திருப்பார்", என்று புன்னகையுடன் கூறி இருக்கிறார் அபிஷேக்.


Click it and Unblock the Notifications