இந்திய டெலிகாம் நிறுவனங்கள் வேகமாக வளர்ந்து வரும் நிலையில், தங்களது 4ஜி சேவையை விரிவாக்கம் செய்ய மிகப்பெரிய வாய்ப்பாக அமைந்துள்ளது மார்ச் 1ஆம் தேதி துவங்கியுள்ள ஸ்பெக்ட்ரம் ஏலம்.
இந்த ஏலத்தில் 4ஜி அலைக்கற்றை கைப்பற்றுவதில் ரிலையன்ஸ் ஜியோ, பார்தி ஏர்டெல், வோடபோன் ஐடியா நிறுவனங்கள் மத்தியில் கடுமையான போட்டி இருக்கும் என ஏற்கனவே கணிக்கப்பட்டு இருந்த நிலையில், கணிப்புகள் உண்மையாகியுள்ளது.
முதல் நாளே அசத்தல்
ஸ்பெக்ட்ரம் ஏலத்தின் முதல் நாளில் மட்டும் சுமார் 77,146 கோடி ரூபாய் அளவிலான தொகைக்கு 4ஜி அலைக்கற்றை ஏலத்தில் கோரப்பட்டு உள்ளது. முதல் நாளில் 4 சற்றுக்களில் 4ஜி அலைக்கற்றை ஏலம் விடப்பட்டு உள்ளது. இந்த ஏலத்தில் நிறுவனங்கள் மத்தியில் நிலவும் அதிகப்படியான போட்டியின் காரணமாக ஏல தொகை அளவீடுகள் தாறுமாறாக அதிகரித்துள்ளது.
அதிக லாபம்
முதல் நாள் ஏலத்தில் அதிகப்படியாக 45,000 கோடி ரூபாய்க்கு மட்டுமே ஏலம் கோரப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சுமார் 77,146 கோடி ரூபாய் அளவிற்கான தொகைக்கு ஏலம் கோரப்பட்டு உள்ளது. மேலும் 2வது நாள் ஏலத்தில் ஒன்று அல்லது இரண்டு சுற்று ஏலம் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
4 லட்சம் கோடி
இந்த ஸ்பெக்ட்ரம் ஏலத்தில் மத்திய டெலிகாம் துறை, டெலிகாம் கட்டுப்பாட்டு ஆணையமான டிராய் உடன் இணைந்து 700 MHz, 800 MHz, 900 MHz, 1800 MHz, 2100 MHz, 2300 MHz மற்றும் 2500 MHz ஆகிய பேண்டுகள் கீழ் சுமார் 2,308.80 MHz அலைக்கற்றை விற்பனை செய்ய உள்ளது. இந்த ஏலத்தில் 5ஜி அலைக்கற்றை இல்லாதது டெலிகாம் நிறுவனங்கள் பெரும் ஏமாற்றமாக விளங்குகிறது. இந்த ஏலத்தில் மட்டும் சுமார் 4 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான அலைக்கற்றைகள் ஏலத்தில் விடப்பட்டு உள்ளது.
முக்கிய அலைக்கற்றை
மேலும் தற்போது கோரப்பட்ட ஏலங்கள் அனைத்தும் 800 MHz, 900 MHz, 1800 MHz, 2100 MHz, 2300 MHz அலைக்கற்றைக்கானது என்பது குறிப்பிடத்தக்கது. 700 MHz மற்றும் 2500 MHz அலைக்கற்றைக்கு யாரும் விருப்பம் தெரிவிக்கவில்லை.
மலிவு விலை 4ஜி போன்
இந்தியாவின் முன்னணி தனியார் நிறுவனங்களான ரிலையன்ஸ் ஜியோ, பார்தி ஏர்டெல், வோடபோன் ஐடியா ஆகியவை இடம்பெறும் இந்த ஏலத்தில் 4ஜிக்கு அதிகளவிலான டிமாண்டு இருக்க முக்கியக் காரணம், இந்தியாவில் அடுத்த சில மாதத்தில் மலிவு விலை 4ஜி போன் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
2ஜி மற்றும் 3ஜி சேவை
இதன் அறிமுகத்திற்குப் பின் தற்போது 2ஜி மற்றும் 3ஜி சேவையில் இருக்கும் பெரும்பாலான வாடிக்கையாளர்கள் 4ஜி சேவைக்கு மாறும் நிலை உருவாகும். தற்போது 4ஜி மற்றும் டேட்டா சேவைகள் மூலம் அதிகளவிலான வருமானத்தைப் பார்த்து வரும் டெலிகாம் நிறுவனங்களுக்கு இது மிகப்பெரிய வாய்ப்பு.
டெலிகாம் வாடிக்கையாளர்கள்
இந்நிலையில் 4ஜி சேவைக்கு மாறும் வாடிக்கையாளர்களைக் கைப்பற்றும் விதமாகவும், வாடிக்கையாளர்கள் சக போட்டி நிறுவனங்களை விடவும் சிறப்பான சேவை அளிக்க வேண்டும் என இலக்குடன் தனியார் டெலிகாம் நிறுவனங்கள் 4ஜி அலைக்கற்றையைப் பெறுவதற்காகக் கடுமையாகப் போட்டிப்போட்டு வருகிறது.
5ஜி-க்கு அரசின் திட்டம்
இதேநேரத்தில் ரிலையன்ஸ் ஜியோ மற்றும் பார்தி ஏர்டெல் 2021 இறுதிக்குள் 5ஜி சேவையை இந்தியாவில் அறிமுகம் செய்யத் திட்டமிட்டு உள்ள நிலையில், இந்த ஏலத்தில் 5ஜி அலைக்கற்றை விற்பனை செய்யாதது டெலிகாம் நிறுவனங்களுக்கு ஏமாற்றம். ஆனால் மத்திய அரசு சந்தையில் இருக்கும் டிமாண்ட் பொருத்துத் தனியாக இப்பிரிவு அலைக்கற்றையை விற்பனை செய்து அதிக லாபம் பார்க்கத் திட்டமிட்டு உள்ளது.