புதுச்சேரியில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது என்பதும், புதுச்சேரி விமான நிலையம் சமீபத்தில் பிசியான விமான நிலையமாக மாறி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தற்போது புதுச்சேரியில் இருந்து கொச்சிக்கு விமான சேவை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
அதேபோல் புதுச்சேரியில் இருந்து திருப்பதிக்கும் புதிய விமான சேவையை ஆரம்பிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளதால் ஏழுமலையான் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
பாதி கட்டணம்
புதுச்சேரி போன்ற சிறிய நகரங்களில் விமான சேவை செய்யும் நிறுவனங்களுக்கு பாதி கட்டணத்தை மத்திய அரசே ஏற்கும் என சமீபத்தில் மத்திய அரசு வெளியிட்டு இருந்தது. உதான் திட்டத்தின் கீழ் சிறிய நகரங்களை இணைக்கும் இந்த திட்டத்திற்கு விமான நிறுவனங்கள் மத்தியில் நல்ல வரவேற்பு ஏற்பட்டது.
புதுச்சேரி விமான நிலையம்
அதன் பின்னர்தான் புதுச்சேரி உள்ளிட்ட ஒருசில நகரங்களுக்குஅதிக விமான சேவைகள் ஆரம்பிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் புதுவையில் இருந்து ஹைதராபாத்துக்கு விமான சேவையை இயங்கி வருகிறது. மேலும் பெங்களூருக்கும் இந்நிறுவனம் புதிய விமான சேவையை ஆரம்பிக்க உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
திருப்பதி-கொச்சி
அதுமட்டுமின்றி வரும் அக்டோபர் மாதம் முதல் புதுச்சேரியில் இருந்து கொச்சி, திருப்பதி ஆகிய இரண்டு நகரங்களுக்கு விமான சேவையை ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் தொடங்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த விமான சேவை நடைமுறைக்கு வந்தால் புதுச்சேரியில் இருந்து திருப்பதி செல்பவர்களுக்கு மிகவும் வசதியாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
பக்தர்கள் மகிழ்ச்சி
புதுச்சேரி - திருப்பதி விமான சேவையை தாங்கள் மிகவும் எதிர்பார்த்து காத்திருப்பதாக புதுவையில் உள்ள திருப்பதி பக்தர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.
ஏர் இந்தியா
ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனத்தை அடுத்து ஏர் இந்தியா நிறுவனமும் புதுச்சேரியில் இருந்து ஒருசில சேவைகளை தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முதல் கட்டமாக புதுச்சேரி - பெங்களூர் விமான சேவையை தொடங்க இருப்பதாகவும் இது குறித்து முறையான அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று கூறப்படுவதால் புதுச்சேரி விமான பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
உதான் திட்டம்
கடந்த 2013ஆம் ஆண்டு ஸ்பைஸ்ஜெட் புதுச்சேரியில் இருந்து பெங்களூர் உள்பட ஒருசில நகரங்களுக்கு விமான சேவையைத் தொடங்கியது. ஆனால் பயணிகளிடம் போதிய வரவேற்பு இல்லாததால் அந்த சேவை நிறுத்தப்பட்டது. இதன் பிறகு உதான் திட்டத்தின் மூலம் மத்திய அரசு பாதி கட்டணத்தை ஏற்கும் என்ற சலுகையை அறிவித்துள்ளதால் விமான சேவைகளும் அதிகரித்துள்ளன, விமான நிறுவங்களும் லாபம் அடைந்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications