இந்தியாவின் மலிவு விலை விமானச் சேவை நிறுவனமான ஸ்பைஸ்ஜெட் 2022 ஆம் நிதியாண்டின் ஜனவரி-மார்ச் காலாண்டிலும் நடப்பு நிதியாண்டின் ஏப்ரல்-ஜூன் காலாண்டிலும் ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் அதிகப்படியான இழப்புகளை எதிர்கொண்டு உள்ளது.
ஸ்பைஸ்ஜெட் பல பிரச்சனைகளை எதிர்கொண்டு வரும் நிலையில் இரண்டு காலாண்டுகளாக அதிகப்படியான நஷ்டத்தை எதிர்கொண்டு இருப்பது பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் எதிரொலியாக இந்நிறுவனத்தின் உயர் அதிகாரி தனது பணியை ராஜினாமா செய்ய உள்ளதாக அறிவித்துள்ளார்.
இதேவேளையில் Reckitt Benckiser நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி லக்ஷ்மன் நரசிம்மன் ராஜினாமா செய்துள்ளார்.
ஸ்பைஸ்ஜெட்
மார்ச் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனம் ரூ.458 கோடி நிகர இழப்பை சந்தித்துள்ளது. இது ஒரு வருடத்திற்கு முன்பு இதே காலகட்டத்தில் ரூ.235.3 கோடியாக இருந்தது.
இதேபோல் நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டான ஏப்ரல்-ஜூன் காலாண்டில், நிகர இழப்பு ரூ.789 கோடியாக இருந்தது, இது ஒரு வருடத்திற்கு முன்பு ரூ.729 கோடியாக இருந்தது.
CFO சஞ்சீவ் தனேஜா
ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் தொடர் நஷ்டம் மற்றும் நஷ்டத்தின் அளவில் தொடர் உயர்வு ஆகியவை நிர்வாகக் குழுவில் பெரும் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில் இந்நிறுவனத்தின் தலைமை நிதியியல் அதிகாரி சஞ்சீவ் தனேஜா புதன்கிழமை ராஜினாமா செய்தார்.
செப்டம்பர்
இந்நிலையில் சஞ்சீவ் தனேஜா வகித்த CFO பதவிக்குப் புதிதாக ஒருவரை நிர்வாகம் விரைவில் அடையாளம் கண்டு, இந்தக் காலி இடத்தைச் செப்டம்பர் மாதத்தில் நிரப்ப உள்ளதாக ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது. நாளில்
ransomware தாக்குதல்
2021-22 ஆம் ஆண்டில் ransomware தாக்குதலின் காரணமாக ஸ்பைஸ்ஜெட் அதன் நான்காவது காலாண்டின் முடிவுகளை அறிவிப்பதைத் தாமதப்படுத்தியது. ஜனவரி-மார்ச் காலாண்டில் ஸ்பைஸ்ஜெட்-ன் மொத்த வருவாய் 1,865 கோடி ரூபாயாக இருந்தது, இது முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தில் ரூ.1,877 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
Reckitt Benckiser நிறுவனம்
பன்னாட்டு நுகர்வோர் பொருட்கள் விற்பனை நிறுவனமான Reckitt Benckiser வியாழன் அன்று அதன் தலைமை செயல் அதிகாரி லக்ஷ்மன் நரசிம்மன் மூன்று ஆண்டுப் பதவிக்காலத்திற்குப் பிறகு செப்டம்பர் இறுதியில் பதவி விலகுவதாக அறிவித்துள்ளது.
லக்ஷ்மன் நரசிம்மன்
டெட்டால் மற்றும் லைசால் போன்ற பிரபலமான பொருட்களைத் தயாரிக்கும் Reckitt Benckiser நிறுவனத்தை விட்டு லக்ஷ்மன் நரசிம்மன் தனிப்பட்ட காரணங்களுக்காகவும், புதிய வாய்ப்புகளுக்காகவும் அமெரிக்காவுக்குச் செல்ல முடிவு செய்ததாகவும் கூறியுள்ளார்.
புதிய தலைவர்
லக்ஷ்மன் நரசிம்மன் பதவியில் தற்போது Reckitt Benckiser நிறுவனத்தில் உயர் தனிப்பட்ட தலைவராக இருக்கும் Nicandro Durante நியமிக்கப்பட உள்ளார். ஆனால் விரைவில் நிர்வாகம் புதிய தலைவரைத் தேர்வு செய்து நியமிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.