கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தில் Ransomware சைபர் தாக்குதல் நடந்தது.
இந்த தாக்குதல் காரணமாக பல மணி நேரங்கள் ஸ்பைஸ்ஜெட் விமானங்கள் தாமதமானது மற்றும் சில விமானங்கள் ரத்து செய்யப்பட்டது என்பதையும் பார்த்தோம்.
ஆனால் அதே நேரத்தில் இந்த சைபர் அட்டாக் மூலம் ஏற்பட்ட பாதிப்பு சில மணிநேரத்திலேயே சரி செய்யப்பட்டுவிட்டதாக ஸ்பைஸ்ஜெட் தனது டிவிட்டரில் தெரிவித்து இருந்தது.
சைபர் அட்டாக்
ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனத்தில் ஏற்பட்ட Ransomware சைபர் அட்டாக் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இந்த சைபர் தாக்குதல் காரணமாக இந்நிறுவனத்தின் நான்காவது நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்வதில் தாமதம் ஏற்படும் என ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் செபிக்கு தகவல் தெரிவித்துள்ளது.
ஸ்பைஸ்ஜெட்
ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் நான்காவது நிதிநிலை அறிக்கை மே 30ஆம் தேதி தாக்கல் செய்ய திட்டமிடப்பட்டிருந்தது. இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வந்தது என்பதும் மே 30-ஆம் தேதி நடைபெறும் போர்டு கூட்டத்தில் ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் 2021-22 நிதியாண்டின் 4வது காலாண்டு நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
நிதிநிலை அறிக்கை
இந்த நிலையில் திடீரென இந்நிறுவனத்தின் மீது Ransomware தாக்குதல் நடைபெற்றதால் தணிக்கை செயல்முறை பாதிக்கப்பட்டுள்ளது என்றும் அதனால் திட்டமிட்டபடி மே 30-ஆம் தேதி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்றும் ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் அறிக்கை மூலம் தகவல் அளித்துள்ளது.
செபிக்கு தகவல்
Ransomware தாக்குதல் காரணமாக குறிப்பிட்ட நேரத்திற்குள் நிதிநிலை அறிக்கையின் செயல்முறை முடிவடையும் பணி பாதித்துள்ளது என்றும், இருப்பினும் இந்த பிரச்சனையில் சைபர் நிபுணர்கள் மற்றும் அதிகாரிகளின் உதவியுடன் Ransomware தாக்குதலால் பாதிக்கப்பட்ட இழப்புகள் சரி செய்யப்பட்டு வருகிறது என்றும் அந்த நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
தாமதம்
இதனை அடுத்து ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் 2021 - 22 ஆம் நிதியாண்டுக்கான நான்காவது காலாண்டு நிதி நிலை அறிக்கை இன்னும் சில நாட்கள் கழித்தே வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.