இந்தியாவில் கொரோனா கட்டுப்பாடுகள் அடுத்தடுத்து குறைந்து வரும் நிலையில் விமானப் பயணிகளின் எண்ணிக்கையும் வேகமாக வளர்ந்து வரும் நேரத்தில் மத்திய அரசு உள்நாட்டு நிறுவனங்களுக்கு, உள்நாட்டு விமானச் சேவையில் 80 சதவீதம் வரையில் பயணிகளுக்கு அனுமதி கொடுத்துள்ளது.
இதன் எதிரொலியாக இன்று இந்தியாவின் முன்னணி விமானப் போக்குவரத்து நிறுவனங்களின் பங்குகள் சிறப்பான வளர்ச்சியை அடைந்துள்ளது.
மத்திய மாநில அரசுகள்
கடந்த 2 மாதங்களாக நாட்டின் போக்குவரத்து மற்றும் சேவைத் துறை பெரிய அளவில் வளர்ச்சி அடைந்து வருகிறது. குறிப்பாக நடுத்தர மக்கள் வேலைக்காகவும், வர்த்தகத்திற்காகவும் அதிகளவிலான பயணங்களை மேற்கொண்டு வருகின்றனர். இதன் அடிப்படையில் தான் சாலை மற்றும் விமானப் போக்குவரத்திற்கு மத்திய மற்றும் மாநில அரசு கூடுதல் தளர்வுகளை அளித்துள்ளது.
ஸ்பைஸ்ஜெட்
மத்திய அரசு விமானப் போக்குவரத்தில் பயணிகள் எண்ணிக்கையை 70 சதவீதத்தில் இருந்து 80 சதவீதம் வரையில் உயர்த்தியுள்ள நிலையில் நாட்டின் முன்னணி மலிவு விலை விமானப் போக்குவரத்து சேவை நிறுவனமான ஸ்பைஸ்ஜெட் பங்குகள் இன்று தடாலடியாகச் சுமார் 11.86 சதவீதம் வளர்ச்சி அடைந்து ஒரு பங்கு விலை 91 ரூபாய் வரையில் உயர்ந்தது.
இண்டிகோ
இதேபோல் நாட்டின் பெருமளவிலான விமானப் போக்குவரத்தில் ஆதிக்கம் செலுத்தும் இண்டிகோ இன்றைய வர்த்தகத்தில் அதிகப்படியாக 4.19 சதவீதம் வரையில் அதிகரித்து ஒரு பங்கு விலை 1,713.35 ரூபாயாக உயர்ந்துள்ளது.
பயணிகள் எண்ணிக்கை
இந்தியாவில் பிற துறைகளை விடவும் விமானப் போக்குவரத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் அதிகமாக இருக்கும் நிலையில் மே 25ல் வெறும் 30000 உள்நாட்டுப் பயணிகள் மட்டுமே விமானப் போக்குவரத்தைப் பயன்படுத்திய நிலையில் நவம்பரில் சுமார் 2.52 லட்சமாக எண்ணிக்கை உயர்ந்துள்ளது.
IRCTC
போக்குவரத்து நிறுவனப் பங்குகள் உயர்ந்து வரும் நிலையில் ரயில்வே போக்குவரத்து நிறுவனமான ஐஆர்சிடிசி நிறுவனப் பங்குகளும் இன்று அதிகப்படியாக 15 சதவீதம் வரையில் அதிகரித்துள்ளது. இதனால் இன்று ஐஆர்சிடிசி பங்குகள் இன்று அதிகப்படியாக 1,597 ரூபாய் வரையில் அதிகரித்துள்ளது.