இந்தியாவின் முன்னணி விமானச் சேவை நிறுவனமான ஸ்பைஸ்ஜெட் அடுத்தடுத்து விமானக் கோளாறு காரணமாக 50 சதவீத விமானங்களை இயக்க தடை விதிக்கப்பட்டு மோசமான நிலையில் நிற்கிறது. ஸ்பைஸ்ஜெட் விமானத்தின் தொடர் கோளாறு காரணமாக மக்கள் விமானத்தில் ஏறுவதற்குக் கூடப் பயப்படும் நிலை ஏற்பட்டது.
இந்நிலையில் ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் தலைவர் அஜய் சிங் முக்கியமான முடிவை எடுத்துள்ளார், இந்த முடிவின் காரணமாக ஸ்பைஸ்ஜெட் பங்கு முதலீட்டாளர்கள் மத்தியில் சலசலப்பு ஏற்படுகிறது.
ஸ்பைஸ்ஜெட் நிறுவனம்
ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் வர்த்தகம் பல தடுமாற்றங்களை எதிர்கொண்டு வரும் நிலையில் தற்போது நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது. இந்த நிலையில் இருந்து விரைவாக மீண்டு வர ஸ்பைஸ்ஜெட் ப்ரோமோட்டர் ஆன அஜய் சிங் இந்நிறுவன பங்குகளை விற்பனை செய்ய முடிவு செய்துள்ளார்.
மத்திய கிழக்கு நாடுகள்
இதற்காக ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் மத்திய கிழக்கு நாடுகளின் முக்கிய நிறுவனத்துடனும், மிகப்பெரிய இந்திய வர்த்தகக் குழுமத்துடனும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்தப் பங்கு விற்பனை மூலம் பணம் திரட்டப்பட்டால் தான் ஸ்பைஸ்ஜெட் எவ்விதமான நிதி நெருக்கடியும் இல்லாமல் இயங்க முடியும்.
அஜய் சிங்
ஸ்பைஸ்ஜெட் பங்கு விற்பனைக்காக அஜய் சிங் தொடர்ந்து பல நிறுவனங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தில் சுமார் 60 சதவீத பங்குகளை அஜய் சிங் வைத்திருக்கும் காரணத்தால் இந்தப் பங்குகள் விற்பனை செய்து நிதி திரட்டினாலும் ஸ்பைஸ்ஜெட் நிர்வாகத்தில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்த முடியும்.
24 சதவீத பங்குகள் விற்பனை
தற்போது வெளியாகியுள்ள தகவல் படி ஸ்பைஸ்ஜெட் அஜய் சிங் பேச்சுவார்த்தை நடத்துவதாகக் கூறப்படும் மத்திய கிழக்கு நாடுகளைச் சேர்ந்த நிறுவனம் 24 சதவீத பங்குகளைக் கைப்பற்றி நிர்வாகக் குழுவில் முக்கியமான இடத்தைப் பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டாடா அல்லது அதானி..?
இதேபோல் ஸ்பைஸ்ஜெட் பேச்சுவார்த்தை நடத்தும் மிகப்பெரிய இந்திய நிறுவனமும் 24 சதவீத பங்குகளைக் கைப்பற்றத் தயாராக உள்ளது என்பதால், அதிகப்படியான விலை, சிறப்பான வர்த்தக வாய்ப்பு யாருடன் இருக்கிறது என்பதை ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இந்தப் பெரிய இந்திய நிறுவனம் டாடா அல்லது அதானி குழுமமாக இருக்க அதிக வாய்ப்புகள் உள்ளது.


Click it and Unblock the Notifications