இந்தியாவில் கொரோனா தொற்று தினமும் அதிகரித்து வருகிறது, குறிப்பாகக் கிராமம், டவுன் பகுதிகளில் 2வது அலை காலகட்டத்தில் மிகவும் வேகமாகப் பரவி வருகிறது. அதிகரித்து வரும் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த இந்தியாவில் கோவேக்சின், கோவிஷீல்டு ஆகிய இரு தடுப்பு மருந்துகள் பயன்பாட்டில் இருந்தாலும், அது நாட்டு மக்களுக்குப் போதுமானதாக இல்லை. இந்தச் சூழ்நிலையில் ரஷ்யாவில் இருந்து டாக்டர் ரெட்டி லேப்ஸ் இறக்குமதி செய்துள்ள ஸ்புட்னிக்-வி வேக்சின் அரசு ஒப்புதல் பெற்று பயன்பாட்டு வந்துள்ளது.
இந்த நிலையில் இந்த மருத்தை மக்களுக்குக் கொண்டு செல்லும் முக்கியமான பணியை டாக்டர் ரெட்டி லேப்ஸ் உடன் இணைந்து அப்போலோ மருத்துவமனை செய்ய உள்ளது.
ஸ்புட்னிக் வேக்சின் விலை
ஏற்கனவே டாக்டர் ரெட்டிஸ் நிறுவனம் ஸ்புட்னிக் வேக்சினுக்கு 948 ரூபாய்+5% ஜிஎஸ்டி (மொத்தம் 995.40 ரூபாய்) என்ற விலை நிர்ணயம் செய்துள்ள நிலையில், மக்களிடம் கொண்டு சேர்க்கும் அப்போலோ மருத்துவமனை ஸ்புட்னிக் வேக்சினுக்கு 1,250 ரூபாய் என விலை நிர்ணயம் செய்துள்ளது.
விலையை உயர்த்திய அப்போலோ மருத்துவமனை
ஸ்புட்னிக் வேக்சின் விலையாக 995.40 ரூபாயும், நிர்வாகக் கட்டணம் என 254.60 ரூபாயை சேர்ந்து மொத்தம் 1,250 ரூபாய்க்கு அப்போலோ மருத்துவமனை ஸ்புட்னிக் வேக்சின்-ஐ வழங்குகிறது. இது தற்போது சந்தையில் பயன்பாட்டில் இருக்கும் கோவேக்சின், கோவிஷீல்டு ஆகிய இரு தடுப்பு மருந்துகளை விடவும் விலை அதிகம்.
கோ-வின் செயலியில் புக்கிங்
மேலும் ஸ்புட்னிக் வேக்சின்-ஐ பெற விரும்புவோர் கோ-வின் செயலி அல்லது இணையதளத்தில் புக் செய்துகொள்ள முடியும். முதல்கட்டமாக ஸ்புட்னிக் வேக்சின் டாக்டர் ரெட்டி லேப்ஸ் நிறுவனத்தின் ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் என மொத்தம் 50000 பேருக்கு முதல்கட்டமாக வழங்க உள்ளது.
5 கோடி டோஸ் இறக்குமதி
இதனால் ஜூன் மாத மத்தியில் தான் மக்களுக்கு இந்த வேக்சின் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மே மாத துவக்கத்தில் டாக்டர் ரெட்டி லேப்ஸ் நிறுவனம் ரஷ்யாவில் இருந்து 1,50,000 டோஸ் அடங்கிய முதல் வேக்சின் ஆர்டரை பெற்ற நிலையில் ஆனால் மே மாதத்தின் இறுதிக்குள் 5 கோடி டோஸ் அளவிலான தடுப்பு மருத்தை இறக்குமதி செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது.
12.5 கோடி மக்கள் இலக்கு
டாக்டர் ரெட்டி லேப்ஸ் நிறுவனம் இந்தியாவில் அடுத்த 8 முதல் 12 மாதத்தில் 12.5 கோடி மக்களுக்கு ஸ்புட்னிக் வேக்சின் அளிக்க வேண்டும் என நிர்ணயம் செய்துள்ளது. இதில் 3.6 கோடி வேக்சின் மட்டுமே வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும், மீதமுள்ளவை உள்நாட்டிலேயே தயாரிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது இந்நிறுவனம்.